வெள்ளி, ஜூன் 30, 2017

‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை

கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப்போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்துவந்து சிந்துவெளி பகுதிகளின்மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக்கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் ‘கரோத்தி’(Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
பாக்கித்தானிலிருக்கும் பலுச்சித்தானில் போலன் கணவாய்க்கு அருகில் ‘மெஃகர்கர்’ (Mehrgarh) எனும் நகரம் இருக்கிறது. அங்கு தோன்றிய ‘மெஃகர்கர் நாகரிகம்’, கி. மு. 7000க்கும் கி. மு. 3200க்கும் இடையில் சிந்து ஆற்றின் மேற்குப்புறத்தில் விளங்கிய உழவு நாகரிகமெனச் சொல்லப்படுகிறது. ‘மழவர்கள்’ அல்லது ‘மள்ளர்கள்’ (Malava/Malloi/Mallis) எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பாக்கித்தானின் ‘சுவாத்’ பள்ளத்தாக்கிலிருக்கும் ‘அசுப்பசுயோய்’ (Aspasioi) பழங்குடிகளை எதிர்த்துப் போரிட்டபோது, அவர்களில் ஒருவன் எய்த ஈட்டியால் அலெக்சாண்டர் புண்பட்டான். ‘அசகெனோய்’ (Assakenoi) பழங்குடியினருடன் பல நாட்கள் போரிட்டு ‘மாசகம்’ (Massaga), ‘அரணம்’ (Aornos) முதலான கோட்டைகளைப் படாத பாடுபட்டுப் பிடித்த அலெக்சாண்டர், அங்கெலாம் கொலைவெறியாடினான்.
சீலம் ஆற்றங்கரையில் ‘போரசு’ (Porus) எனும் மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றதாகவும் சொல்கின்றனர். அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, ‘சமற்கிருதம்’ எனும் மொழியே இல்லை. ஆயினும், போரசின் உண்மையான சமற்கிருதப் பெயர் ‘புருசோத்தமன்’ என்று இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் கதை விடுகின்றனர். போரசு, உள்ளபடியே ஒரு தமிழ் மன்னனென ஆய்வுகள் காட்டுகின்றன. தக்கசீலத்தை ஆண்டுவந்த ‘அம்பி’ (Omphis) எனும் மன்னன் தம் சொந்த இனத்தாரையே காட்டிக்கொடுத்துவிட்டு அலெக்சாண்டருக்குத் துணைபோனதாக கிரேக்க, உரோம வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.
போரசுடன் நடத்திய போருக்குப்பின் பாக்கித்தானிலிருக்கும் சீனாப் ஆற்றங்கரையில் ஆண்டுவந்த ‘மழவர்’ அல்லது ‘மள்ளர்’களின் ‘மழவர்தானத்தை’ அலெக்சாண்டர் தாக்கினான். அம் ‘மழவர்தானம்’தான் இன்று ‘முல்தான்’ எனப்படுகிறது. மழவர்களுடன் போரிடும்போது, முறிந்த கோட்டைச் சுவரிலிருந்து கீழே குதித்த அலெக்சாண்டரின்மேல் மழவன் ஒருவன் அம்பு எய்தான்; சுருண்டு விழுந்த அலெக்சாண்டரை அவனது மெய்க்காவலர்கள் காப்பாற்றினர்.
சிந்துவெளித் தமிழ்ப் பழங்குடிகள் காட்டிய கடும் எதிர்ப்பாலும், போரில் புண்பட்டதாலும் கீழைக்கங்கைக்கரை நாடுகளின்மேல் படையெடுக்கும் அலெக்சாண்டரின் எண்ணம் கைகூடவில்லை. மேலும், மாசிடோனியப் படைஞர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமெனக் கலகம் செய்தனர். இதனால், தம் படையெடுப்பைச் சிந்துவெளியுடன் நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் வழியில் பாபிலோனில் அவன் இறந்தான். சுருங்க சொல்லின், அலெக்சாண்டரை முறியடித்து நாடு திரும்ப வைத்தவர்கள் தமிழர்களேயாவர்.
அலெக்சாண்டர் படையெடுப்பின்போது, கீழைக்கங்கைக்கரைப் பகுதியில் கங்கையாற்றில் ஒரு தீவாயிருந்த ‘கங்கரிடை’ (Gangaridae) நாட்டை ‘நந்தர்கள்’ ஆண்டுவந்தனர். ‘கங்கரிடை நாடு’ என்பது தமிழ்ப்பெயர். கங்கரிடை நாட்டைத்தான் ‘மகதநாடு’ என்கின்றனர். ‘நன்னர்’ எனும் தமிழ்ப் பெயரின் திரிபே ‘நந்தர்’ என்பதாகும். நன்னர்கள் தமிழ் வேளிர்க்குடியினராயிருந்திருக்க வேண்டும். அந் நந்தர்களை ‘ஆந்திரக்கோட்டசு’ அல்லது ‘சந்திரக்கோட்டசு’(Andracotus or Sandracotus) என்பான் கைப்பற்றி ‘மோரிய’ அரசை நிறுவியதாக கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 'ஆந்திரக்கோட்டசு' (ஆந்திரக்கோட்டை) ஒரு வடுகன் என்பதைத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை!
அலெக்சாண்டருக்குப்பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப்பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் ‘டெமெட்ரியசு’ (Demetrius) எனும் ‘கிரேக்கப் பாக்டீரிய’ (Greeco-Bacteria) அரசன் சிந்துப்பகுதியின்மேல் படையெடுத்து ‘இந்தியக் கிரேக்கப்’ பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப்பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது. (வரைபடம்)
‘இந்தியக் கிரேக்க’ ஆட்சியின்கீழ்ச் சிந்துவெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்துவெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்புமொழிகள் உருவாயின. அதேபோழ்து, கீழைக்கங்ககைக்கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. புத்தர்களும் அருகர்(சைனர்)களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்துவெளிப் பகுதியிலும் கீழைக்கங்கைக்கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக்கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (‘செவ்வனே செய்யப்பட்டது’ எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. மகாயான புத்தர்களாலும் அருகர்(சைனர்)களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்றுவிக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில்தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
-- குணா

No automatic alt text available.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக