வெள்ளி, பிப்ரவரி 11, 2011

திருப்பூர் இன்னும் 6 மாதத்தில்

நேத்து வேலை கம்மிங்கறதுனால் 6 மணிக்கே பஸ்ஸ பிடிச்சு ஊருக்கு போலாமுன்னு பஸ் ஸ்டாண்ட் போனா எல்லாப் பஸ்ஸும் கூட்டம்,சரி ஒரு பிரைவேட் பஸ்ஸூல கடைசி சீட்டுல நடுவாண்ட உட்கார்ந்துட்டேன்,பக்கத்துல இருந்தவரு கொஞ்சம் இளமையா,கண்ணாடி அழகா போட்டுட்டு பாத்தா டிகிரி ஹோல்டர் மாதிரி இருந்தாரு.அவரு கண்டக்டரிடம் பேசுன நாட்டு நடப்புகளில் திருப்பூரின் எதிர்காலம் பத்தியும்,இன்னும் பல விசயங்கள் பத்தியும் நிறைய தெரிந்த தெரியாத விசயங்கள தெரிஞ்சுகிட்டேன்,

இதை அப்படியே உரைநடையில்,

கண்டக்டர்: நான் வந்து சேர்ந்த‌ 6 மாதத்தில் இன்னைக்குதான் பஸ் இந்த டிரிப் லோடாகிப் பாத்துருக்கேன்.

கண்ணாடிக்காரர்: ஆமாங்க காலைல கூட சரியான கூட்டம்,ஊத்துக்குளியில் இருந்த நான் 5 பஸ்ஸு விட்டு 6வது பஸ்ஸுலதான் வந்தேன்ங்க.

கண்டக்டர்: அதுனாலதான் திங்கள்கிழமை டூட்டிக்கே நான் வரமாட்டேன்,13 ஆயிரம் கலெக்சன் ஆகும் ,ஆனா பேட்டா 100தான் தருவாங்க.

கண்ணாடி: அப்படியா ,கவலையே படாதீங்க, இன்னும் 6 மாதம்தான் திருப்பூர் பஸ்ஸு எல்லாம் காத்து வாங்கும்.

கண்டக்டர்:ஏங்க என்னாச்சு?

கண்ணாடி: மேட்டர் தெரியாதா? பிரிண்டிங் பட்டறை எல்லாம் இழுத்து மூடிட்டாங்க,எல்லாரும் வேலை இல்லாததால் ஊருக்கு போயிருவாங்க,கம்பெனிங்க எல்லாம் காத்து வாங்கும்,

பக்கத்தில் இருப்பவர்: அட அது சாயப்பட்டறைங்க.

கண்ணாடி: ஏதோ ஒண்ணு 750 கம்பெனியில கம்பெனிக்கு ஒண்ணுனா 750 பேர் குறைவாங்க,இதே மாதிரி பத்துபேரு போனா 7500 பேர் ஆச்சுல்ல,அப்புறம் பஸ்ஸுக்கு எங்க கூட்டம் வரும்,போகட்டும் போனாத்தான்
வீட்டு வாடகை எல்லாம் குறையும்.பத்துக்கு பத்து ரூம் எல்லாம் வாடகை 1500 வாங்கறாங்க.

கண்டக்டர்: ஏங்க கம்பெனி எல்லாம் மூடறாங்க.

கண்ணாடி: அதுதாங்க சாயத்தண்ணிய‌ சுத்தம் பண்ணாம அப்படியே நொய்யல்ல உடறதால நொய்யல்காரன் ஆறு கெட்டுப்போச்சுன்னு கேசு போட்டுட்டான்.கோர்ட் மூடிட்டாங்க.

கண்டக்டர்:அதாருங்க நொய்யல்காரன்?

கண்ணாடி: அட அதுதாங்க வளம் ,எத்தனையோ கோடி செலவு பண்ணி நொய்யல் ஆத்த சுத்தம் பண்ணி வச்சிருக்காங்க,இன்னும் 6 மாசத்துல நொய்யல்ல சுத்தமான தண்ணி ஓடும்,வந்தமுன்னா அப்படியே ஆத்துல முங்கி எந்திருச்சு சுகமா வீட்டுக்கு போயிறலாம்.

(வளம் அமைப்புக்கு ஆறு சொந்தமுன்னு இப்பத்தான் எனக்குத் தெரியும், அவங்களே அறிந்திராத விசயம்,இது மட்டும் மிமுருகன் ரியல் எஸ்டேட் காரங்களுக்கு தெரிஞ்சா லோக்கல் டிவியில கூவிக்கூவியே வித்துப்போடுவாங்க‌)

கண்டக்டர்: அது சரிங்க,தொழில் இல்லாம ஆத்துல நல்ல தண்ணி போயி என்ன செய்ய? கம்பெனிஎல்லாம் எப்படி ஓடும்?

கண்ணாடி:எல்லாக் கம்பெனியும் மூட மாட்டாங்க.சாயத்தண்ணிய சுத்தம் பண்ணிற கம்பெனியெல்லாம் ஓடுமுங்க.

கண்டக்டர் : அப்படியா,ரொம்ப செலவாமே?..

கண்ணாடி: ரெண்டு தொட்டிதானுங்க,பத்துக்கு பத்து இருந்தா போதுங்க,ஒண்ணுல தண்ணி வரும் ,இன்னொன்னுல பில்டர் ஆகவேண்டியதுதாங்க. இத செய்ய முடியாம தண்ணீய ஆத்துல உட்டுத்தாங்க,விவசாயமே போச்சுங்க.

கண்டக்டர்: பில்டர் பண்ணுன தண்ணீய என்ன செய்யறதுங்க?

கண்ணாடிக்காரர்: அதைப்பாத்திங்கன்னா டாங்கர் லாரி வெச்சு எடுத்துட்டு போறதுதாங்க.

கண்டக்டர்: எடுத்துட்டு எங்க கொண்டுபோறது/

கண்ணாடிக்காரர்:உங்க கூட பெரிய சக்காத்தமா இருக்குதுங்க. அதை கொண்டு போயி கரண்ட் எடுக்கலாமுங்க.அதுக்கு கவர்ன்மென்ட் மானியம் கொடுக்குதுங்க.

(அடங்கொக்கமக்கா இப்படி ஒரு அறியமேட்டர் இருக்கறது திருப்பூர் காரங்களுக்கு ஏனுங்க தெரிய மாட்டேங்குது. கழிவுதண்ணிய கொண்டு போயி ஆத்துல உட்டு ,விவசாயம் போயி,இன்னைக்கு சாயப்பட்டறை எல்லாம் மூடி,தொழில் இல்லாமல் எல்லாரும் வீட்டுக்கு போயி....கண்ணாடிக்காரர் சொல்ற ஐடியாப்பாத்தா ..தமிழ்நாடு பூரா கரண்ட் கொடுக்கலாம் ஏந்தான் இவங்க இப்படி இருக்காங்களோ)

இப்ப இன்னொருத்தர் பஸ்ஸுல அடுத்த ஸ்டாப்புல ஏறிவருகிறார்.

புதியவர் கண்ணாடிக்காரரிடம்

புதியவர்: ஏங்க போன் பண்ணுனா எடுக்க மாட்டீங்களா?

கண்ணாடிக்காரர் போனை எடுத்துபார்த்து,
"ஓ மிஸ்டு காலுங்களா? பொதுவா மிஸ்டுகாலுங்களை அட்டெண்ட் பண்ணுவதில்லை நான்,ரொம்ப முக்கியமான மிஸ்டுகாலுன்னா மட்டும் அட்டென்ட் பண்ணுவேன்.

(மிஸ்டுகாலுங்களை அட்டென்ட் பண்ணும் முதல் ஆள் இவர்தான்
என்பதை அறிந்ததும் நமக்கு லைட்டா தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.)

இந்த நேரம் பாத்து ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண் செல்போனில் கடலை போட்டுக்கொண்டே ஏற ,

கண்ணாடிக்காரர்: இந்த போனில என்னதான் இருக்குமோ தெரியல,என்னேரமும் கடலைதான். இது போக செவுட்டு மெசின் வேற வெச்சுகிட்டு மண்டைய மண்டைய ஆட்டிட்டு பேசிட்டு போறாங்க.

புதியவர் : செவுட்டு மிசினா? அதென்னங்க.

கண்ணாடி:அதுதான் இயர்போனுங்க, நான் 1400 போட்டு வாங்கி தூக்கி வீசிட்டேன்.

புதியவர் : அப்படி எல்லாம் கேவலப்படுத்தாதீங்க, நான் வேற இப்பத்தான் வாங்கினேன்.

கண்ணாடி:இன்னோரு விசயங்க.செல்போன் அதிகம் பேசினா நுரையீரல் பாதிப்பு வந்திரும். கெட்டெ போயிரும் தெரியுமா?அப்புறம் சங்குதான்...

புதியவர் ஷாக்காகிறார்

( சட்டுனு பஸ்ஸ உட்டு எட்டிக்குதிச்சிறலாமுன்னு யோசனை நமக்கு ஒரு கணம் வந்து எட்டிப்பாத்திருச்சு)


கண்ணாடி:இதே மாதிரிதாங்க,பொண்ணுங்க கூட ஜீன்ஸ்பேண்ட் போட்டுட்டு இருக்கு, ஆனா ஜீன்ஸ் பேண்ட்ட மெக்கானிக்,லேபர் வொர்க்,இந்த மாதிரி வேலை பாக்குறதுக்குதாங்க, கண்டு பிடிச்சாங்க.

கண்டுபுடிச்சவங்க இப்ப அதை போடறதில்ல,பிளைட் ஏறி வந்து பட்டுப்புடவை வாங்கிட்டு போறாங்க.

புதியவர்: ஆமாமா பசங்க கூட இப்ப அதைப்போடறதில்ல.இன்னொரு ஒரு முக்கியமான டவுட்டு நமக்கு வெகு நாளா இருக்குதுங்க.

கண்டக்டர்: அதென்னங்க டவுட்டு?

புதியவர்: இப்படி பொண்ணூங்க இவ்வளவு டைட்டாகாலை இறுக்கி ஜீன்ஸ்போட்டா அவசரமா உச்சா போறதுன்னா எப்படிங்க ?
அவரு என்ன சொல்லறாருன்னு ஆவலோட ஒரு 4 நாலு பேருஅவரைப்பாக்க அவர்
(கண்ணாடிக்காரர்): அது எப்படிங்கறத விடுங்க. ஜீன்ஸ் போட்டா கிட்னி கெட்டுப்போயிறும் தெரியுமா?.........
(அட சாமி கொன்னே போட்டிங்கடா)....

பஸ் எதொ ஒரு ஸ்டாப்பில் நிற்க நான் எட்டிக்குதித்தே விட்டேன்.

..

செவ்வாய், பிப்ரவரி 01, 2011

திருப்பூர்?

திருப்பூரின் தற்போதைய நெருக்கடி நிலவரம் பல வகைகளில்,பலதரப்பட்ட மக்களை பாதிக்கும் என்பது இன்னும் சில மாதங்கள் சாய பட்டறைகள் மூடப்படுமானால் தெரியவரும்.

முதலில் பாதிக்கப்படுவது.

1.டையிங் (சாயப்பட்டறைகள்)

2.சாயப்பட்டறைகளின் தொழிலாளர்கள்,குடும்பங்கள்.

3.சாயப்பட்டறைகளை நம்பியிருக்கும் சாயக்கடைக்காரர்கள்,இதர பொருள்கள் விற்பனையாளர்கள்,(இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு சொல்லமுடியாத அளவில் இருக்கும்)இவர்களின் மொத்த சம்பாத்தியமும் வியாபாரத்தில் வைத்திருப்பார்கள்.

4.மேற்சொன்ன கடைக்காரர்களை நம்பியிருக்கும் தொழிலாளர்கள்.

இனிமேற்க்கொண்டுதான் மற்ற வகையினர் பாதிக்கப்படுவார்கள்.

ஏனெனில் இதுவரை குறைந்த செலவில் திருப்பூர் சாயப்பட்டறைகளில் துணிகளை சாயமிட்டுக்கொண்டு இருந்த எக்ஸ்போர்ட்காரர்கள் இனிமேற்கொண்டு ஈரோடு,குமாரபாளையம்,பெருந்துறை போன்ற பகுதிகளுக்கு செல்லவேண்டும்,

அங்கு திருப்பூர் மாதிரி (90 நாள் முதல்120 நாள் வரை)கிரெடிட் கிடையாது,உடனடியாக பணம் தரவேண்டும். சரி ,இதிலென்ன கொடுக்கவேண்டியதுதானே.

கொடுக்கவேண்டியதுதான் ,யாருடைய பணத்தை,இதுவரை திருப்பூரில் சாயப்பட்டறைகளுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை இங்கு கொடுக்காமல் புதிய சாயப்பட்டறைகளுக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதால் கொடுத்து விடுவார்கள். இவர்கள் கேட்டால் என்னங்க பண்ணறது? நீங்களும் சாயப்பட்டறைகளை ஓட்டவில்லை,ஓட்டுங்க இங்கியே சாயம்போட்டுக்கறோம் ,பணத்தையும் கொடுத்துவிடுவோம் என்பார்கள்.

ஆக திருப்பூரின் மேற்சொன்ன மக்கள் தரப்பு 739 டையிங்களும் ஓடினால் மட்டுமே தப்பிக்கும், இல்லையெனில் கலைஞரின் ஒரு ரூவாய் அரிசிதான்.

இதன்பிறகுதான் சொந்தமாக டையிங் வைத்திருக்கும் எக்ஸ்போர்ட்கள் தவிர மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள், ஏனெனில் தற்போதே பெருந்துறையில் ஒரு நார்மல் கருப்பு(பிளாக்) கல்ர் டையிங் செய்ய ரூ 135/ சொல்கிறார்கள், இதெ கலர் திருப்பூரில் 85 முதல் 90 மட்டுமே.

நூல்விலையும் சொந்த எக்ஸ்போர்ட்காரர்களும்:

இந்த நேரத்தில் நூல் விலையும் கன்னாபின்னாவென்று ஏறிக்கொண்டு இருக்கிறது. இதனால் சொந்த எக்ஸ்போர்ட் காரர்களும் கூடிய விரைவில் நிற்பதென்பது சிரமமேதான். நூல் காசும் அதிகம், டையிங்காசும் அதிகம்,லேபர் காஸ்ட்டும் அதிகம், அப்புறம் எங்க லாபம் அவர்களுக்கு வருவது.அதனால் அவர்களுக்கும் கூடிய விரைவில் நட்டம் ஏற்படும்.

இதற்குமேல் பாதிப்பு ஏற்படும் துறைகள்.

1.போக்குவரத்து(சொந்த வாடகை வாகனம்& அரசுப்போக்குவரத்துதுறைகள்)
ஒவ்வொரு தீபாவளி,பொங்கல் தினங்களில் எத்தனை தென்மாவட்ட பஸ்கள் மக்கள் அடைத்துகொண்டு செல்கின்றன,என்பதை பாருங்கள்.

2.பேக்கரிகள் (தொழிலாளிகளை நம்பி மட்டுமே இங்குள்ள அத்தனை பேக்கரிகளும் இயங்குகின்றன)

3.மளிகைக்கடைகள்

4.வாடகை வீடுதாரர்கள் (எத்தனை தோட்டங்களில் 10*10 ரூம் அளவுள்ள வீடுகள் கொள்ளை வாடகை வைத்துள்ளனர்,அவர்களுக்கு இதுதான் வருமானம்)

இப்படி நிறைய தொழில்கள் கணக்கில்லாமல் திருப்பூரை நம்பியுள்ளன.

ஸ்பின்னிங் மில்கள்:

திருப்பூரை நம்பியே ஸ்பின்னிங் மில்கள் அடிக்கடி நூல்விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடித்து வந்தன. ஆனால் கடந்த வெள்ளியன்று 28.01.11 கோர்ட் உத்தரவில் திருப்பூர் சாயப்பட்டரைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு வந்தவுடன் பிப்ரவரி 1 ஆம் தேதி ஏற்றவேண்டிய நூல் விலையை ஏற்றாமல் இருந்து விட்டன,

அப்ப ஒரு வாரமாக நூல் விலையேறுகிறது என்று சொல்லிவிட்டு தற்போது விலையை ஏற்றாமல் விட்டதின் காரணம் சாயப்பட்டறை மூடல்கள்தானா,

பருத்தி எக்ஸ்போர்ட் ஆகிறது ,அதனால் விலை ஏறிவிட்டது என்று குதித்தவர்களுக்கு இப்போது ஏன் விக்கிக்கொண்டது?

கடலில் கலக்கும் திட்டம் நிறைவேறாதது அரசியல் நோக்கம்:

அதிமுக கோட்டை என்பதால் திருப்பூரை கவனிக்காமல் விட்டு விட்டனர் என்று அதிமுக காரர்கள் கூறுவது ஏற்புடையது அல்ல, கடலில் கலக்கும் திட்டம் வேண்டும் என்று இதுவரை கலைஞரையோ,அல்லது தமிழக அரசையோ குரல் உயர்த்தியோ,பணிந்தோ யாரும் கேட்கவில்லை என்பதே உண்மை.

இந்த 5 ஆண்டுகளில் எத்தனையோ திட்டங்களை செய்திருக்கலாம்,ஆனால் செய்யாமல் இருந்துவிட்டோம்,

இனி 4.5 இலட்சம் மக்களின் கதி அவ்வளவுதானா? இதை நம்பி எங்கு ரியல் எஸ்டேட் போட்டாலும் வாங்கிப்போட்ட நடுத்தர மக்களின் கதி?


..

திங்கள், ஜனவரி 03, 2011

வாய்ப்பாடி மாரியம்மன் திருவிழா‍

அண்மையில் நமது ஊர் மாரியம்மன் கோவில் திரு விழா நடைபெற்றது. அதனை ஒட்டி ஒரு வாரகாலமாக நடைபெற்ற விசேசங்கள் ஊரெங்கும் களைகட்டியது. இதன் நிறைவு நாளான பொங்கல் திரு நாளில் மாவிளக்கு ஊர்வலம், மாலை கம்பம் பிடுங்கும் நிகழ்வு அதை ஒட்டி நடைபெறும் சலங்கை ஆட்டங்கள் கண்ணைக்கவரும், அதன் வீடியோ பதிவு யு டியூப்பில் ஒளியேற்றப்பட்டுள்ளது, கண்டுகளித்து கருத்த‌ளியுங்கள்.

Link

Link

Link

Link

Link




.....

புதன், டிசம்பர் 22, 2010

நக்கீரன்-‍ புதிய ஜோசியகதை.

இந்த வாரம் 18‍-21 தேதியிட்ட நக்கீரன் இதழில் அரசியலில் நடிகர்கள் அதிகம் வந்தாலும் குறிப்பிடத்தக்க வகையில் யாராலும் ஜொலிக்க முடியவில்லை என்பதைக் கூறி தற்போதைய டிரண்டில் விஜய், விஜயகாந்த், ரஜினி யார் ஜொலிக்க முடியும் என்று மக்கள் கருத்தை கேட்டாலும் ஒன்றும் விளங்காது என்பதால் மாயவரம் சாமி ஜோசியரிடம் கேட்டு எழுதி உள்ளார்கள்.

உன்னிப்பாக படித்தால் விஜயகாந்த் துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவருக்கு களத்திர ஸ்தானப்படி மனைவி ராசியாலதான் சீட்டுப்பிடிக்க முடியும் , என்னைக்கும் முதல்வராக முடியாது அப்படின்னும்

விஜய் கடக இராசி , பூச நட்சத்திரம், இன்ன லக்கினம் அப்படின்னு சொல்லிப்பிட்டு அவருக்கு 17 வருசம் புதன் நல்ல படியா இருந்ததால் இத்தனை ஆண்டுகளில் படம் நல்லா இருந்தது,ஆனா இப்ப புதன் நல்லபடியா இல்லாததால் படங்கள் பிளாப்புனும் சொல்லிட்டு மூணு வருடம் கழித்து அரசியலுக்கு வந்தால் நல்லதுன்னு சொல்கிறார்.

ஆனா ரஜினிக்கு உத்திராட நட்சத்திரம் , கடக ராசி , சிம்ம லக்கினம் அப்படின்னு சொல்லிட்டு அவர் அரசியலுக்கு வரவே மாட்டார்.அப்படின்னும் சொல்கிறார், இங்கேதான் ஒரு நெருடல் கடக ராசியில் உத்திராட நட்சத்திரம் கிடையாது. பிரிண்டிங் மிஸ்டேக்கா அல்லது ஜோசியர் மிஸ்டேக்கான்னு தெரியலை.

வெகுஜன ஊடகமான நக்கீரன் இப்படித்தான் ஜெகத் கஸ்பாரை வெச்சு வெகு நாள் மறக்கமுடியுமா அப்படின்னு எழுதிட்டு இருந்தாங்க. இன்னைக்கு பாத்தா அதே ஜெகத் கஸ்பார் பத்தி ஜூவியில் வேற மாதிரி இருக்கு. நிறைய பேர் படிக்கிற பத்திரிக்கைகள் இந்த மாதிரி சின்ன மிஸ்டேக் களைந்து வெளியிடுவது படிப்பவர்களுக்கு நம்பகத்தன்மையை உருவாக்கும் . இல்லையெனில் என்ன தெரிஞ்சவங்க வாங்கறதுக்கு யோசிப்பாங்க.

..

திங்கள், டிசம்பர் 06, 2010


இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் வாமுகோவின் படைப்பாக வரும் புத்தகம் ‘ஆயிரம் சிறகுள்ள காமம்’.

வா.மு.கோமு ”இது ஒரு வித்தியாசமான ஆகச்சிறந்த பாலியல் படைப்பாக இருக்கும்” என்கிறார். இந்த மாசக் கடைசியில் வெளியீடு இருக்குமாம். உயிர்மை வெளியிடுகிறது. சென்ற வருடம் ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்’ விற்பனையில் சாதனை படைத்தது, பரவலான வாசகர்களையும் சென்றடைந்தது. போலவே இந்த நாவலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். அல்லாரும் இருநூற்று இருபது ரூபாய் தனியா எடுத்து வெச்சுக்குங்க :)

வாமுகோமுவின் இந்த புத்தகவெளியீட்டுக்குப் பிறகு வாமுகோமுவை நீங்கள் வெள்ளித்திரையிலும் இரசிக்கலாம் என்பதும் ஒரு கூடுதல் தகவல்

..

புதன், நவம்பர் 10, 2010

மறக்கப்பட்ட மரணம்-‍ தவமணி



தவமணி :

கோவை குழந்தைகள் கடத்திக்கொள்ளப்பட்ட அடுத்த நாளில் கோவை மாவட்டத்திலேயே ஏழாவது படிக்கும் ஒரு பெண் துர்மரணமடைந்துள்ளாள். காரணம் முந்தைய நாள் போல அல்ல , இது ஒரு விபத்து, ஆனால் தெரிந்தே நடத்தப்பட்ட கொலை.

ஆம் ,பொள்ளாச்சியை ஒட்டிய ஆனைமலை ஆழியாறுவால்பாறை ரோட்டில் ரமண முதலிப்புதூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டிய தென்னந்தோப்பின் இரும்புக்கம்பி வேலிக்கு மின்சாரம் கொக்கி மூலமாக தோட்டத்தைப்பார்த்துக்கொள்பவர்கள் பாய்ச்சியிருக்கிறார்கள், . பள்ளியின் சுவற்றை ஒட்டியே அந்த இரும்புக்கம்பி வேலி உள்ளதால் காலையில் குப்பை கொட்டச் சென்ற அந்தப்பெண் மழை ஈரத்தின் காரணமாக கால் வழுக்கி கம்பியின் மீதே விழுந்ததால் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டாள்.

இது எப்படி கொலை ஆகும் ?

கம்பிவேலியின் அருகிலேயே குழந்தைகள் விளையாடும் பள்ளி என்பதை அறிந்தும் , எந்த வித அறிவிப்பும் இல்லாமல் கொடுக்கப்பட்ட மின் இணைப்பின் காரணமாக குழந்தை இறந்தது கொலைதானே அன்றி வேறென்ன?

மக்கள் இதன் காரணமாக ஆனைமலை , வால்பாறை ரோடுகளில் நான்கு மணீ நேர போராட்டம் நடத்தியும் தோட்டத்தின் ஓனர் வரவேயில்லை. தோட்டக்காரர் ஒரு மெத்தைக்கம்பெனி முதலாளி.

ஞாயிறன்று அந்த ஊர் சென்ற போது ஊர் முழுக்கு அஞ்சலி போஸ்டர்களை காணமுடிந்தது.

கோவை கொடூரத்தால் மக்கள் மனதளவில் அதிகமாக‌ பாதிக்கப்பட்டதாலும், சென்னைச் சம்பவமும் அதனை ஒட்டியே நடந்ததாலும் இந்த விசயம் மக்கள் மனதை அவ்வளவாக எட்ட வில்லை. அரசாங்கமும் ரூ 1 இலட்சம் அறிவித்து விட்டதுடன் வேறு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை.

தத்துப்பிள்ளை;

குழந்தை இல்லாத காரணத்தால் தத்து எடுத்து வளர்த்தப்பட்ட தவமணீ எவனோ ஒருவனின் விளையாட்டால் காலனிடம் சென்று விட்டாள், சொந்த குழந்தைக்கு மனம் பதைபதைத்த கோவைக்காரர்களுக்கு இந்த குழந்தை தத்துப்பிள்ளை என்று தெரிந்தால் என்ன நடக்குமோ? வளர்ப்புப் பெற்றோர்களுக்கு எப்படி இந்த இழப்பை !?

குழந்தையின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை வணங்குவோம்.

..