வியாழன், ஜனவரி 21, 2016

மேஷ ராசிக்கு நோய் தீர்க்கும் இறைவன்

மேஷ ராசிக்கு நோய் தீர்க்கும் இறைவன்
மேஷ ராசியை உணர்ச்சி மற்றும் தன்மானக் கிரகமான செவ்வாய் ஆள்கிறது. போராட்டம் எனில் புறமுதுகிட்டு ஓட மாட்டீர்கள். உங்களின் ஆறாம் இடம் எனும் கடன், நோய், எதிரிகள் மற்றும் இன்ன பிற விஷயங்களை நிர்ணயிப்பவராக கன்னி புதன் வருகிறார். புதன் புத்திக்குரியவராக இருப்பதால், அறிவுச் செருக்கைக் கொடுத்து வீழ்த்த நினைப்பார். உங்கள் புத்தியின் திறனை ஒன்றுமேயில்லை என்று சொன்னாலே நீங்கள் பலம் குன்றியவர்போல நினைத்து வருந்துவீர்கள். அதனால், கற்றது கைமண் அளவு எனும் மகாவாக்கியத்தை மனதில் நிறுத்துங்கள். சட்டென்று முடிவெடுக்க வேண்டிய நேரங்களில், புதன் உங்களை அல்லாட வைத்துக் கொண்டிருப்பார்.
எல்லோருக்கும் அறிவுரை கூறுவீர்கள். கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். ஆனால், உங்கள் விஷயமென்று வரும்போது கோட்டை விடுவீர்கள். குடும்ப விஷயங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர வேண்டும். தூது, சாட்சி, சிபாரிசு போன்ற விஷயங்களுக்கு உரியவராக புதன் இருப்பதால், இது சம்பந்தமான விஷயங்களை ஜாக்கிரதையாக எதிர்கொள்ள வேண்டும். அடுத்தவருக்கு சிபாரிசு செய்யும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
புதன் கையெழுத்துக்குரிய கிரகமாகும். அதனால் யோசிக்காமல் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து போடாதீர்கள். ‘அப்போ உதவியே செய்யக் கூடாதா’ என்று கேட்கிறீர்களா? உதவி செய்யுங்கள். சனிக்கிழமை, புதன்கிழமை, புதன் மற்றும் சனி ஆளும் நட்சத்திரங்கள் உள்ள நாட்களைத் தவிர்த்து விடுங்கள். அதேபோல நீங்கள் பிறந்த நட்சத்திரமாக இல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எப்போதுமே ஹெல்த் கான்ஷியஸ் இருக்காது. ஆனாலும், செவ்வாய் உங்கள் ராசியாதிபதியாக இருப்பதால், மறக்காமல் தண்ணீர் அருந்திக் கொண்டே இருங்கள். இல்லையெனில் சிறுநீரகத் தொந்தரவு வரும். ஏதேனும் மனதைப் போட்டு உழட்டிக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் உங்கள் கண்களுக்கு தொந்தரவு கொடுக்கும். அதிக காரம் கூடாது. தொண்டைப் புகைச்சல், வயிற்றுத் தொந்தரவு இருக்கும்.
கடன் வாங்கினால் கட்ட முடியுமா என்று பார்த்து வாங்குங்கள். மிக முக்கியமாக நிலம், வீடு என்று வாங்கும்போது எச்சரிக்கை தேவை. ஏனெனில், பூமிகாரகனான செவ்வாய்க்கும் உங்களின் ஆறாம் அதிபதியான புதனுக்கும் பகை உண்டு. அதனாலேயே இந்த விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் ஒரு சொத்தை வாங்கிக் கட்ட முடியாமல் விற்று, மீண்டும் மறுசொத்து வாங்கும் நிலைமை வரும். தடாலடியாக இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்காதீர்கள். உங்களின் பாக்யாதிபதியாக குரு வருவதால், தங்கத்தை வைத்து கடன் பெற்றால், கடனை சீக்கிரம் அடைப்பீர்கள். சொத்துகளும் விருத்தியாகும். ஆபத்து நேரத்தில் கூட அநியாய வட்டிக்கெல்லாம் பணம் வாங்காதீர்கள். காசோலைகளில் கையெழுத்தை முன்னதாக போட்டு வைத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்து விட்டு சிக்காதீர்கள். கையை காண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்குரியவராக புதன் வருவதால் தன் கருத்தை நிலைநிறுத்துபவராக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரித்துப் போவது நல்லது. ‘‘என் போக்குல எல்லாத்தையும் விட்டா பெரியளவில கம்பெனியை கொண்டு போவேன்’’ என்று நினைப்பீர்கள். எல்லாவற்றிற்கும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தீர்கள் என்றால் யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள். புதன் ஒரு விஷயத்தை அழகாக சொல்லக் கூடிய திறனைக் கொடுப்பார். அவரே ஆறாம் இடத்திற்கு வரும்போது எத்தனை திறமைகள் இருந்தாலும், மாற்றுக் கருத்தைக் கூறி எதிர்ப்புணர்வைக் கூட்டுவார். அலுவலகங்களில் நூறு முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டிய சூழல் வந்தாலும்கூட, முப்பது முடிவுகளை சக அலுவலர்களிடம் கொடுத்துப் பழகுங்கள். அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். ஆனால், கழுகுபோல மேற்பார்வையிடுங்கள். ஏனெனில், புதன் தன்னை மீறி எதுவும் நடந்து விடக் கூடாது என்று உங்களைத் தூண்டியே தனிமைப்படுத்துவார்.
உங்களைப் பொறுத்தவரையில் இன்றைய நண்பர்களே நாளைய எதிரிகளாகும் சூழல் உருவாகும். பெரிய தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டு வைத்தால் எச்சரிக்கையோடுதான் இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களின் கூட்டாளியே உங்கள் மேல் வழக்கு தொடுப்பார். அத்தனை உழைப்பும் வீணாகப் போகும். அது உடன்பிறந்தவர்களே ஆனாலும், ஜாக்கிரதையோடுதான் அணுக வேண்டும்.
முத்திரைத்தாள் விஷயங்களில் எச்சரிக்கையோடு இருங்கள். ஏனெனில், போலி முத்திரைத்தாள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எதிரிகள் உங்களை ஈடு படுத்துவார்கள். அதேபோல ஆவணங்களை நகல் எடுக்கும்போது கவனம் வேண்டும். அது ஒரிஜினல்தானா என்பதைப் பார்த்துத்தான் செய்ய வேண்டும். சிலர் உங்களை மோசடிகளில் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். சபலம் எழுந்தால், சிறை செல்ல நேரிடும். நீங்கள் ஆணாக இருந்தால் பெண் குரல், பெண் சாயலோடு இருப்பவர்களிடம் எச்சரிக்கையோடும், பெண்ணாக இருந்தால் ஆணின் குரல் மற்றும் சாயலோடு இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக நட்பு பாராட்டுங்கள், அல்லது ஒதுங்கியே இருங்கள். அவர்கள்தான் உங்களை பிரச்னைகளில் சிக்க வைப்பார்கள்.
எந்த விஷயத்தையுமே கடைசி நிமிஷத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள். மிக முக்கியமாக, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், வருமான வரி போன்றவற்றில் எல்லாம் கவனமாக இருங்கள். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தியாவசியத் தேவைகளை விட்டுவிட்டு அநாவசியமான விஷயங்களை வாங்கிப் போடுவீர்கள்.
உள்மனதில் உறங்கிக் கிடக்கும் மிருகத்தை உசுப்பிவிடும் இடமே ஆறு ஆகும். உங்களுக்கு ஆறாம் இடமாக புதன் வருவதால், எதிராளியின் பலம் தெரியாமல் வாதப் பிரதி
வாதங்கள் வேண்டாம். புதன் மறைந்திருப்பதால் எங்கு என்ன பேசினாலும், வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டுப் பேசி புதனிடமிருந்து காத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் ஆழ்மனதில் அடங்கியிருக்கும் அளப்பரிய ஆற்றலை வீர்யப்படுத்தி வெளிப்படுத்தும் இடமும் ஆறாம் இடமே ஆகும். எனவே, எத்தனை சந்தேகங்கள் வந்தாலும் பரவாயில்லை... விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நிறுத்தாதீர்கள். சமூகத்தில் யாரும் அக்கறை காட்டாத விஷயங்களில் ஆராய்ச்சி புத்தியோடு ஈடுபடுங்கள். பள்ளிக் காலங்களில்கூட எவரும் அவ்வளவு எளிதாக தேர்ந்தெடுக்காத படிப்பைத் தேர்ந்தெடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
இந்த ஆறாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் ஆவதால், அந்த இடத்திற்கு புதன் அதிபதியாவதால் எவரும் கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை நீங்கள் கவனித்து கண்டுபிடிப்பீர்கள். ஒருவரின் போராட்ட குணத்தை தீர்மானிக்கும் இடமாகவும் ஆறாமிடம் அமைவதால் தொடர்ந்து போராடுவீர்கள். ஆனால், அதை விவேகத்தோடு செய்யுங்கள். நெருக்கடி நேரங்களில் சொந்த முடிவுகளை விட உங்களின் உண்மையான நலன் விரும்பிகளின் ஆலோசனைப்படி நடங்கள். புத்திக்குரிய புதன், உங்களின் அவசரத்துக்கு உதவ மாட்டார். பல புத்தகங்கள் படித்தும் பெறமுடியாத அறிவையும் அனுபவத்தையும் உங்கள் வாழ்வில் ஒரே பிரச்னையால் அனுபவப்பட்டு தெரிந்து கொள்வீர்கள். அதுவும் பொருளோ பணமோ சம்பந்தப்பட்ட பிரச்னையாக அது இல்லாமல், மன உளைச்சலை அதிகப்படுத்தும் பிரச்னைகளிலிருந்தே அதிக பாடம் படிப்பீர்கள்.
உங்களுக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். ஆனால், தொலை தூரப் பயணமெனில் நீங்கள் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது. அதீத சிந்தனை வயப்பட்டவராக நீங்கள் இருப்பதால், கவனம் சிதறும் வாய்ப்பு அதிகம். கியர் இல்லாத வண்டியை வைத்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் பழைய வாகனங்களை விலை கொடுத்து வாங்காதீர்கள். இப்படி செகண்ட் ஹேண்ட் வண்டியை வாங்கும்போது விபத்துகள் ஏற்படும்.
உங்களின் சொந்த ஜாதகத்தில் ராசி அல்லது லக்னத்திற்கு எட்டிலோ, பன்னிரெண்டிலோ புதன் மறைந்தால் நல்லது. புதனால் ஏற்படக்கூடிய மேலே கண்ட பிரச்னைகள் அனைத்தையும் தவிர்க்கலாம். சொந்த ஜாதகத்தில் புதனும் குருவும் சேர்ந்திருந்தால், தந்தைக்கும் பிள்ளைகளுக்குமிடையே எப்போதும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். யாரும் யாருக்கும் எதிர்பார்த்தபடி இருக்க மாட்டார்கள்.
பாதகாதிபதியாக சனி வருகிறது; எனவே புதனோடு சனி சேர்ந்திருந்தால் பொதுக் காரியங்களில் சட்டென்று ஈடுபடாமல் மறைமுக உதவிகளை செய்ய வேண்டும். இதே புதன் சூரியனோடு சேர்ந்திருந்தால் மிகவும் நல்லது. ஆனால், சந்திரனோடு சேர்ந்திருந்தால் அம்மாவின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். எப்போதும் மருந்தும் கையுமாகவே தான் இருப்பார். மேலே சொன்னதெல்லாம் சொந்த ஜாதகத்தைப் பொறுத்த விஷயமாகும்.
உங்களுக்கு நடப்பது எந்த தசையாக இருந்தாலும் சரிதான்... புதன் மற்றும் சனி புக்தி நடைபெறும் காலத்தில் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உதாரணமாக செவ்வாய் தசை நடக்கும்போதே புதன் புக்திக்கான காலமும் வரும். அப்போது எடுக்கும் முடிவுகளில் கவனத்தோடு இருக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சரிதான்; அல்லது வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நீங்கள் செல்ல வேண்டிய தலமே செம்பனார்கோயில் ஆகும். இங்குள்ள சொர்ணபுரீஸ்வரரையும் அம்பாளையும் வழிபட, பிரச்னைகள் தீர்ந்து போகும். தட்ச யாகத்தின்போது இத்தலத்திலிருந்துதான் வீரபத்திரர் சென்றார் என்கிறது தலபுராணம். மேலும், உங்களின் பிரச்னைகளை தீர்க்கும் கிரகமாக சூரியன்தான் விளங்குகிறார். எனவே, சூரியன் வழிபட்ட கோயில்கள் எதுவாக இருந்தாலும் சென்று தரிசிக்கலாம். அப்படித்தான் இத்தலத்தில் துவாதச ஆதித்யர்கள் எனும் பன்னிரெண்டு சூரியர்கள் தீர்த்தத்தை உருவாக்கி, அதில் நீராடி இத்தல ஈசனை வழிபட்டார்கள். எனவே, சூரியர்களின் முழு சாந்நித்திய சக்தி இலங்கும் இத்தலத்திற்குச் செல்லுங்கள். கடன், நோய் மற்றும் எதிரிகள் தொல்லை உங்களுக்கு இருக்காது. இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக