வியாழன், ஜனவரி 21, 2016

ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன
கனவுத் தொழிற்சாலையின் அதிபரான சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள், கற்பனையாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் அதை நிஜமாக்குவதிலும் வல்லவர்கள். அறிமுகமான அடுத்த நாளிலிருந்தே, அதிக நாள் பழகியது போல நட்புறவாடுவீர்கள். இதுதான் உங்களின் பலமும் பலவீனமும். உங்கள் ராசிக்கு அதிபதிதான் துலாத்திற்கும் அதிபதியாவார். அவரே உங்களின் கடன், நோய், எதிரி ஸ்தானமான ஆறாம் இடத்திற்கும் அதிபதியாக வருகிறார். எனவே, உங்களுக்கு நீங்களே எதிரியாவீர்கள்.
உங்கள் வாயைப் பிடுங்கி, நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை வைத்து பேசுவதற்காகவே ஒரு கூட்டம் இருக்கும். யாரோ சிலருக்காக சொல்கிற வார்த்தைகள் எல்லோருக்கும் உண்டானதாக மாறிவிடுவதுண்டு. அதேபோல நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால், அவரோடு உறவாடிக் கெடுக்கவும் செய்வீர்கள். சுக்கிரன் உங்களின் எதிரி ஸ்தானத்திற்கு அதிபதியாக இருப்பதால், இதமாகவே பழி வாங்குவீர்கள். ஒருபோதும் மூர்க்கம் காட்ட மாட்டீர்கள். அதேபோல, ‘இவரால் ஆபத்து’ என்று தெரிந்தாலும் வெளியிலிருந்து பார்ப்போருக்கு நெருங்கிய நண்பர்கள்போல ஒரு தோற்றத்தை காட்டிக் கொண்டே இருப்பீர்கள்.
நண்பர்களைத் தரம் பிரிப்பதில் அறிவுபூர்வமாக சில நேரம் நடந்துகொண்டாலும், சிறுபிள்ளைத்தனமாகப் பேசி சிக்கிக் கொள்வீர்கள். பலவீனங்களை மறைக்கத் தெரியாது. நட்புக்காக ரொம்பவும் வளைந்து கொடுப்பீர்கள். அப்படி இறங்கிப்போவதை சிலர் தங்களுக்கு சாதகமாகவும் எடுத்துக் கொண்டு உங்களை எளிதாக வீழ்த்துவார்கள். ‘‘பத்து வருஷமா பழகறோம். ஜாமீன் கையெழுத்து கூட போடமாட்டேன்றியே. எப்படி பேங்க்ல லோன் கொடுப்பான்’’ என்று பேசினால் மாட்டிக் கொள்வீர்கள். பொலபொலவென்று யாரேனும் கண்ணீர் விட்டுப் பேசினால் நீங்களும் அழுது பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எண்ணிப் பார்க்காமல் கொடுப்பீர்கள். தாமதமாகத்தான் மனிதர்களைப் புரிந்து கொள்வீர்கள். நாற்பதுக்கு மேல்தான் உள்ளர்த்தத்தோடு பேசும் திறனே வரும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளும்போது புறந்தள்ளப்படுவீர்கள்.
யாராவது குற்றம் சுமத்தும் முன்பேயே, ‘அப்படி நினைச்சுப்பாங்களோ... இப்படி நினைச்சுப்பாங்களோ...’ என மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உங்களுக்கு உடலால் ஏற்படும் நோயை விட, மனதால் உடலுக்கு நீங்களாக உண்டாக்கிக் கொள்ளும் நோய்கள்தான் அதிகம். வெளியூருக்கு செல்லும்போது பர்ஸை மறந்தாலும் மறப்பீர்களே தவிர, தலைவலி மாத்திரையை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். அந்த அளவுக்கு தலைவலியால் அவதிப்படுவீர்கள். ஆனாலும், தண்ணீரைக் கண்டால் பாய்ந்து விடுவீர்கள். சொந்த ஜாதகத்தில் சுக்கிரனோடு குரு, ராகு, செவ்வாய் இருந்தால் பால்வினை நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, தாம்பத்ய விஷயங்களில் கவனம் வேண்டும். அதேபோல உடல் பருமனாகும்போதே கவனம் காட்ட வேண்டும். ரிஷப ராசியினருக்கு பெரும் தொந்தரவு ஏற்படுவதற்கு முன்பு உடற்பருமன் சட்டென்று கூடும். உங்களில் பலர் உடற்பருமனை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வீர்கள். அதேபோல பெண்கள் ஆபரேஷன் செய்துகொள்ளும்போது நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பின்னாளில் பிரச்னை வேறுமாதிரி பெரிதாகக் கூடும்.
‘வளர்த்த கடா மார்பில் பாய்கிறது’ என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். உங்களுக்கு எதிரிகள் வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்கள் என்று பார்த்தோமல்லவா? ‘என் புள்ளை மாதிரி வளர்த்தேன். அவனே எனக்கெதிரா விளையாடறானா’ என்று நீங்கள் பேசும் அளவுக்கு எதிரிகள் வெளிவருவார்கள். உங்கள் பட்டறையிலிருந்து வெளியேறியவர்கள்தான் உங்களுக்கு எதிராக மாறுவார்கள். உங்களின் நிழல்போல இருப்பவரிடம்தான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, ஒரே நபரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்காமல், பிரித்துக் கொடுத்து வேலை வாங்கினால் நல்லது. பெரும்பாலும் நீங்கள் நல்லது செய்யப் போய், அது தீங்கானதாக மாறுவதுதான் அதிகம். ‘‘உன் உதவியே வேணாம். எனக்கு என் வாழ்க்கையை பார்த்துக்கத் தெரியும்’ என்று வார்த்தைகளால் சூடுபட்ட பிறகே நீங்கள் மாறுவீர்கள். அதுவரை கொஞ்சம் வெகுளியாகத்தான் வலம் வருவீர்கள்.
உங்களைப் பொறுத்தவரையில் வழக்கு என்றால் அது வீடு, மனை குறித்த வழக்குகள்தான் வரும். புது வீட்டை வாங்கினால் கூட வழித் தகராறு வரும். நீங்கள் கிராமத்தில் இருந்தால் வாய்க்கால், வரப்பு சண்டை வரும். நகரத்தில் இருந்தால் உங்கள் வீட்டு பால்கனியிலிருந்து வெளியேறும் நீர் அடுத்த வீட்டில் கொட்டுவதால் சண்டை மூளும். பொதுவாகவே ரிஷப ராசியினர் அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுப் பட்டாவிலுள்ள நிலங்களை வாங்கும்போது விரைவிலேயே தனிப் பட்டாவாக உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையெனில் பொதுச் சொத்தில் இருப்பவர்கள் ஏதேனும் வழக்குகள் போடும்போது நீங்களும் சிக்கிக் கொள்வீர்கள். மறந்துபோய்க்கூட கோயிலுக்கு அருகேயுள்ள வீடுகளையோ, நிலங்களையோ வாங்காதீர்கள். அப்படி வாங்க நேர்ந்தால், எல்லாம் சரியாக இருக்கிறதா என கண்கொத்திப் பாம்பாக பாருங்கள்.
வாகன விபத்துகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை எதிர்கொள்ள நேரும். பழைய வண்டியை வாங்கவே வேண்டாம். வேறு வழியின்றி வாங்கினால், வில்லங்கம் ஏதும் இருக்கிறதா எனப் பாருங்கள். கண்டெய்னர், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு அருகே செல்லும்போது கவனமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும். பள்ளி வளாகங்களுக்கு அருகே கவனமாக வாகனம் ஓட்டுங்கள்.
உங்களுக்கு கடன் பிரச்னை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அது வாகனக் கடனாக இருந்தால் நல்லது. ஏனெனில், உங்கள் ராசிநாதனாக வாகனகாரகன் சுக்கிரன் வருவதால், அப்படியே விட்டுவிடலாம். இதைத்தவிர தனகாரகனான குரு அஷ்டமாதிபதியாக வருவதால், திடீர் செலவுகள் வரும். ஆறு மாதங்களில் செலுத்த வேண்டிய கடனை ஒரே மாதத்தில் தரச் சொல்லி கடன் கொடுப்பவர் கழுத்தை பிடிப்பார். வாழ்க்கைத்துணை வழி சொந்தங்களால் உங்களில் பலர் கடனாளியாவீர்கள். ‘‘நல்லது, கெட்டதுக்கு செய்முறை பண்ணியே போண்டியாகிட்டேன்’’ என்று உங்களில் பலர் கூறுவதுண்டு. காலத்திற்குத் தகுந்தாற்போல எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று யோசித்துச் செய்ய வேண்டும்.
எப்போதுமே வீட்டுப் பத்திரங்களை வைத்து கடன் வாங்கக் கூடாது. தங்கத்தை வைத்து வாங்குங்கள். பாசம் வைத்து ஏமாறுவது தனியென்றால், பணம் கொடுத்து ஏமாறுவதுதான்
அதிகமிருக்கும். யாராவது பத்து ரூபாய் கேட்டால், ‘‘எங்கிட்ட ரெண்டு ரூபாதான் இருக்கு’’ என்று சொல்லப் பழகுவது நல்லது. இப்படி சொல்லிக் கொடுத்தால் நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று தெரியும். எனவே, கடன் கொடுக்கும்போது ‘கொடுத்தால் வருமா’ என்று மட்டும் நன்கு யோசித்துவிட்டு அப்புறம் கொடுங்கள். நீங்கள் கல் பதித்த தங்க நகைகளாக வாங்கிப் போடுவது நல்லது. வெறும் தங்கமாக வாங்கினால் உங்களிடம் தங்காது. இல்லையெனில் அடகுக் கடைக்கு அடிக்கடி படையெடுத்தபடி இருக்கும்.
நீங்கள் அரசியலில் இருந்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பீர்கள். ஆளுங்கட்சியினரின் குற்றங் குறைகளைப் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். குற்றங்கள் மட்டும்தான் உங்களுக்கு முதலில் தெரியும். இளைஞராக இருக்கும்போதே அடிக்கடி உண்ணாவிரதம், ஊர்வலம் என்று போராட்டக் களத்தில் இருப்பீர்கள். மிக முக்கியமாக பெண்களுக்கான பிரச்னைகளை முன்னின்று தீர்ப்பீர்கள். பாலியல் வன்முறை, பெண்கள் வன்கொடுமை போன்றவற்றிற்கு எதிராகக் கடுமையாகக் கொதித்தெழுவீர்கள். தண்டனை வாங்கித் தராமல் தூங்க மாட்டீர்கள். மத்திம வயதில்தான் எல்லோரையும் புரிந்து கொள்வீர்கள். ‘‘நீ குதிரையா இருந்தாலும் இருந்துக்க. கழுதையா இருந்தாலும் இருந்துக்க. ஆனா, கழுதையா இருந்துக்கிட்டு குதிரை மாதிரி நடிக்காத. நீ நீயாகவே இரு’’ என்று சூட்சுமமாகப் பேசுவீர்கள்.
உங்கள் ராசிக்குரியவரே ஆறாம் இடத்திற்கு உரியவராக வருவதால், அதுவும் சுக்கிரனே உங்களுக்கு நன்மையும் தீமையும் சமமாகச் செய்வதால், பெருமாளை வழிபடுவது நல்லது. அதிலும் வைணவ குரு மக்களுக்கோ அல்லது சீடப் பரம்பரைக்கோ உபதேசித்த தலமெனில் உங்களுக்கு இன்னும் சிறப்பாகும். அப்படிப்பட்ட தலமே திருக்கோஷ்டியூர் ஆகும். இங்குதான் ராமானுஜர் தன்னுடைய குருவின் வார்த்தையை மீறி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் நாமத்தை மக்களுக்கு உபதேசித்தார். எந்த குரு தனக்கு தீட்சை வழங்கினாரோ, அவரே யாருக்கும் அவ்வளவு எளிதாக உபதேசம் செய்யக் கூடாது என்றும் தடுத்தார்.
ஆனால், ‘தான் உபதேசம் செய்து நரகத்திற்கே சென்றாலும் மக்களுக்கு நன்மை ஏற்படட்டும்’ என்று ராமானுஜர் மக்களுக்கு உபதேசித்தார். இத்தலத்தில் அருளும் உற்சவ மூர்த்தியான சௌமிய நாராயணப் பெருமாளையும், உரக மெல்லணையான் எனும் திருப்பெயரோடு விளங்கும் பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசித்து வாருங்கள். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும், வருவதற்கு முன்னரே தடுத்துக்கொள்ள நினைத்தாலும், நீங்கள் செல்ல வேண்டிய தலம் திருக்கோஷ்டியூர் ஆகும். காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவிலும், காரைக்குடி-சிவகங்கை பாதையில் திருப்பத்தூரி லிருந்து 5 கி.மீட்டரில் உள்ள அரியக்குடி சென்றும் இத்தலத்தை அடையலாம்.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக