வெள்ளி, ஜூன் 30, 2017

‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை

கைபர், போலன் கணவாய்களின் வழியாகப் படையெடுத்து வந்தவர்களே ‘ஆரியர்’ என்பது ஐரோப்பியர்களின் கட்டுக்கதை. நான் பலவிடங்களில் அதைக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். இருந்தும், 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்துக்குசு மலைகளைக் கடந்து வந்த ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தை கைப்பற்றினரென நம்மவரும் கிளிப்பிள்ளைப்போல் ஒப்புவிக்கின்றனர்.
எனக்குத் தெரிந்த வரையில், கைபர், போலன் கணவாய்களின் ஊடாக இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு எல்லையைக் கடந்துவந்து சிந்துவெளி பகுதிகளின்மேல் போர் தொடுத்தவன் மாசிடோனியக் கிரேக்கன் அலெக்சாண்டர் மட்டுமேயாவான். இதற்குத் தெளிவான வரலாற்றுச் சான்றுகள் உண்டு.
கி. மு. 326ஆம் ஆண்டில் சிந்துவெளிப் பகுதியின்மேல் அலெக்சாண்டர் நடத்திய படையெடுப்பு இத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. சிந்துவெளியிலிருந்த தமிழரசுகளை அலெக்சாண்டர் ஒழித்துக்கட்டினான். அங்குப் பேச்சு வழக்கிலிருந்த தமிழ்மொழி கட்டு குலைந்து கெட்டுத் திரிந்ததும், அலெக்சாண்டரின் படையெடுப்பால் வந்த வினை. அதன் விளைவாக, கந்தார நாட்டில் தமிழ் வரிவடிவத்தைத் தழுவிக் ‘கரோத்தி’(Karoshti) வரிவடிவம் தோன்றியது. வடஇந்தியாவைத் தமிழர்கள் இழக்க அலெக்சாண்டரின் படையெடுப்பே முற்றுமுதல் காரணம்.
பாக்கித்தானிலிருக்கும் பலுச்சித்தானில் போலன் கணவாய்க்கு அருகில் ‘மெஃகர்கர்’ (Mehrgarh) எனும் நகரம் இருக்கிறது. அங்கு தோன்றிய ‘மெஃகர்கர் நாகரிகம்’, கி. மு. 7000க்கும் கி. மு. 3200க்கும் இடையில் சிந்து ஆற்றின் மேற்குப்புறத்தில் விளங்கிய உழவு நாகரிகமெனச் சொல்லப்படுகிறது. ‘மழவர்கள்’ அல்லது ‘மள்ளர்கள்’ (Malava/Malloi/Mallis) எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்கள் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டதாகவும் கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பாக்கித்தானின் ‘சுவாத்’ பள்ளத்தாக்கிலிருக்கும் ‘அசுப்பசுயோய்’ (Aspasioi) பழங்குடிகளை எதிர்த்துப் போரிட்டபோது, அவர்களில் ஒருவன் எய்த ஈட்டியால் அலெக்சாண்டர் புண்பட்டான். ‘அசகெனோய்’ (Assakenoi) பழங்குடியினருடன் பல நாட்கள் போரிட்டு ‘மாசகம்’ (Massaga), ‘அரணம்’ (Aornos) முதலான கோட்டைகளைப் படாத பாடுபட்டுப் பிடித்த அலெக்சாண்டர், அங்கெலாம் கொலைவெறியாடினான்.
சீலம் ஆற்றங்கரையில் ‘போரசு’ (Porus) எனும் மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றதாகவும் சொல்கின்றனர். அலெக்சாண்டர் படையெடுத்து வந்தபோது, ‘சமற்கிருதம்’ எனும் மொழியே இல்லை. ஆயினும், போரசின் உண்மையான சமற்கிருதப் பெயர் ‘புருசோத்தமன்’ என்று இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் கதை விடுகின்றனர். போரசு, உள்ளபடியே ஒரு தமிழ் மன்னனென ஆய்வுகள் காட்டுகின்றன. தக்கசீலத்தை ஆண்டுவந்த ‘அம்பி’ (Omphis) எனும் மன்னன் தம் சொந்த இனத்தாரையே காட்டிக்கொடுத்துவிட்டு அலெக்சாண்டருக்குத் துணைபோனதாக கிரேக்க, உரோம வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர்.
போரசுடன் நடத்திய போருக்குப்பின் பாக்கித்தானிலிருக்கும் சீனாப் ஆற்றங்கரையில் ஆண்டுவந்த ‘மழவர்’ அல்லது ‘மள்ளர்’களின் ‘மழவர்தானத்தை’ அலெக்சாண்டர் தாக்கினான். அம் ‘மழவர்தானம்’தான் இன்று ‘முல்தான்’ எனப்படுகிறது. மழவர்களுடன் போரிடும்போது, முறிந்த கோட்டைச் சுவரிலிருந்து கீழே குதித்த அலெக்சாண்டரின்மேல் மழவன் ஒருவன் அம்பு எய்தான்; சுருண்டு விழுந்த அலெக்சாண்டரை அவனது மெய்க்காவலர்கள் காப்பாற்றினர்.
சிந்துவெளித் தமிழ்ப் பழங்குடிகள் காட்டிய கடும் எதிர்ப்பாலும், போரில் புண்பட்டதாலும் கீழைக்கங்கைக்கரை நாடுகளின்மேல் படையெடுக்கும் அலெக்சாண்டரின் எண்ணம் கைகூடவில்லை. மேலும், மாசிடோனியப் படைஞர்கள் நாட்டிற்குத் திரும்ப வேண்டுமெனக் கலகம் செய்தனர். இதனால், தம் படையெடுப்பைச் சிந்துவெளியுடன் நிறுத்திக்கொண்டு நாடு திரும்பும் வழியில் பாபிலோனில் அவன் இறந்தான். சுருங்க சொல்லின், அலெக்சாண்டரை முறியடித்து நாடு திரும்ப வைத்தவர்கள் தமிழர்களேயாவர்.
அலெக்சாண்டர் படையெடுப்பின்போது, கீழைக்கங்கைக்கரைப் பகுதியில் கங்கையாற்றில் ஒரு தீவாயிருந்த ‘கங்கரிடை’ (Gangaridae) நாட்டை ‘நந்தர்கள்’ ஆண்டுவந்தனர். ‘கங்கரிடை நாடு’ என்பது தமிழ்ப்பெயர். கங்கரிடை நாட்டைத்தான் ‘மகதநாடு’ என்கின்றனர். ‘நன்னர்’ எனும் தமிழ்ப் பெயரின் திரிபே ‘நந்தர்’ என்பதாகும். நன்னர்கள் தமிழ் வேளிர்க்குடியினராயிருந்திருக்க வேண்டும். அந் நந்தர்களை ‘ஆந்திரக்கோட்டசு’ அல்லது ‘சந்திரக்கோட்டசு’(Andracotus or Sandracotus) என்பான் கைப்பற்றி ‘மோரிய’ அரசை நிறுவியதாக கிரேக்க வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 'ஆந்திரக்கோட்டசு' (ஆந்திரக்கோட்டை) ஒரு வடுகன் என்பதைத் ‘தமிழரின் தொன்மை’ எனும் நூலில் நான் விரிவாக எழுதியுள்ளேன்.
கடை விரித்தேன், கொள்வாரில்லை!
அலெக்சாண்டருக்குப்பின் - அதாவது, அலெக்சாண்டர் இறந்த 323ஆம் ஆண்டுக்குப்பின் - கி. மு. 180ஆம் ஆண்டில் ‘டெமெட்ரியசு’ (Demetrius) எனும் ‘கிரேக்கப் பாக்டீரிய’ (Greeco-Bacteria) அரசன் சிந்துப்பகுதியின்மேல் படையெடுத்து ‘இந்தியக் கிரேக்கப்’ பேரரசை (Indo-Greek Empire) அங்கு நிறுவினான். அவனது ஆட்சிப்பரப்பு இன்றையை குசராத் உள்ளிட்ட சிந்துவெளிப் பகுதி முழுமையையும் உள்ளடக்கியிருந்தது. (வரைபடம்)
‘இந்தியக் கிரேக்க’ ஆட்சியின்கீழ்ச் சிந்துவெளியில் கிரேக்கருடன் இனக்கலப்பும் மொழிக்கலப்பும் ஏற்பட்டது. சிந்துவெளியில் பேசப்பட்டுவந்த தமிழும் திரிந்து கலப்புமொழிகள் உருவாயின. அதேபோழ்து, கீழைக்கங்ககைக்கரையிலிருந்து கங்கரிடை (மகத) நாட்டிலும் தமிழ் கெட்டுத் திரிந்தது. ‘அரைமகதம்’, ‘சூரசேனி’ முதலான பாகத (பிராகிரத) மொழிகள், கொச்சையான பேச்சு வழக்கு மொழிகளாகத் தோன்றின. புத்தர்களும் அருகர்(சைனர்)களுமே அதற்குக் காரணமாயினர். புத்தர்கள் ‘பாழி’ எனும் செயற்கை மொழியையும் தோற்றுவித்தனர்.
சிந்துவெளிப் பகுதியிலும் கீழைக்கங்கைக்கரையிலும் தமிழரசுகள் வீழவும் தமிழ் வழக்கொழிந்து பாகத மொழிகள் தோன்றவும் முதற்பெரும் காரணம் அலெக்சாண்டரின் படையெடுப்பேயாகும். ஆரியக் கோட்பாடும் திராவிடக் கோட்பாடும் கைகோத்துக்கொண்டு அந்த மாபெரும் உண்மையை மூடி மறைத்தன.
கொச்சையான பாகத மொழிகளைத் திருத்தமுறச் செய்ய எண்ணி (‘செவ்வனே செய்யப்பட்டது’ எனும் பொருள்படும்) ‘சமற்கிருதம்’ எனும் செயற்கை மொழி கி. பி. 2ஆம் நூற்றாண்டளவில் தோற்றுவிக்கப்பட்டது. மகாயான புத்தர்களாலும் அருகர்(சைனர்)களாலும் வடுகப் பிராமணர்களாலும் அது முனைப்புடன் போற்றி புரக்கப்பட்டது; வளர்க்கப்பட்டது.
சமற்கிருதம் சேரலத்தில் (கேரளத்தில்) தோற்றுவிக்கப்பட்டதாக பாவாணர் ஒரு நூலில் கூறியுள்ளார். (எந்த நூலில் அது வருகிறது என்பது நினைவில் இல்லை.) வேறு சிலரோ, குமரி மாவட்டத்தில்தான் சமற்கிருதம் தோற்றுவிக்கப்பட்டதெனக் கூறுகின்றனர்.
மேற்போந்த மெய்ம்மைகளை யெல்லாம் திறந்த மனத்துடன் அலசி ஆராய்ந்து தமிழரின் உண்மையான வரலாற்றைப் புத்தமைக்க வேண்டும்.
-- குணா

No automatic alt text available.

புதன், ஜூன் 21, 2017

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)!!!


கடன் பட்டிருந்தால்…
“கடனானதற்குப் பிறகு சிலர், இப்படியாகி விட்டதே, நான் என்ன பாவம் செய்தேனோ’ என்று புலம்பிக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் ‘இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாது, இப்படி செய்ததால் தான் இப்படி ஆனது’ என்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் “கோபம், டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக் கொண்டும், சபித்துக் கொண்டும் இருப்பர்.
இன்னும் சிலர், கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.
நண்பர்களே! கடந்தவை கடந்தவைதான். அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்க. இந்த அனுபவத்தை வைத்து மீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும். செல்வம் குவிக்க முடியும். அந்த ஆற்றல் எல்லோரிடமும் இருக்கிறது. இதை உணருங்கள்.
கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால், எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும். மனச்சக்தி வீணாகும். அது உங்கள் ஆக்க அறிவு செயல்படுவதைத் தடை செய்யும்.
கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம், அதை ஒரு சவாலாக மாற்றுங்கள். எழுந்து நில்லுங்கள். உங்களால் ஜெயிக்க முடியும்!
(என்னுடைய “தோல்வியிலிருந்து வெற்றிக்கு’ நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)
கடன் அதிகமாய் இருந்தால், வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால், உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள். சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம். கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல் உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள். பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.
கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர். “சொன்ன தவணைக்கு கொடுக்க முடியுமோ, முடியாதோ, என்னாகுமோ’ என்ற மன உளைச்சலில் இருப்பர்.
நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள். மீண்டும் திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள். இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அது பிரச்சனையாகாது.
ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால், அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால் வரும்போது எப்படி வருவார்? அது உங்களுக்கே தெரியும்.
ஆகவே, சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்தியுங்கள்.
மீண்டும், மீண்டும் எண்ணுங்கள். “பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன்’ என்று செயல்படுங்கள். உங்களால் முடியும்!
கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
‘Think Yourself Rich’ என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.
அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள். மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள். பணம் உங்களுக்கு நிறையக் கிடைப்பது போலவும், அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும், அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும், நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு, நிம்மதி சந்தோசத்துடன் வீடு திரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள். இப்பொழுது கண்களை விழித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சியைக் காலையிலும், மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில் பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.
கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.
வாழ்த்துக்கள்!
கடனை வசூலிக்கும் முறைகள்
1. கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும். அந்த நாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும். மாறாக, இந்தப் பணம் வராது, இவர் திருப்பிக் கொடுக்க மாட்டார் என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.
ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார், நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றி பழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள். “கறக்காத பாலும், கேட்காத கடனும் திரும்ப வராது’ அதேபோலக் கொடுத்த கடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பி வரும்’.
2. “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களே, இப்படி இருந்து கொண்டிருக் கிறார்களே’ என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்த வேண்டும்.
நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து “அவரிடம் செல்வம் பெருக வேண்டும். அவர் பணத்தை திருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும். அவன் நன்றாக இருக்க வேண்டும்’ என்று தினமும் வாழ்த்துங்கள். இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்து, பணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத் தூண்டி செயல்படுத்த வைத்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும். நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.
இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.
வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்க. ஒவ்வொரு முறையும் வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.
அமைதியாக அமர்ந்து கொள்ளவும். கண்களை மூடிக்கொள்க. மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1 வரை தலைகீழாக எண்ணிக்கொள்க. இப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக் கொண்டு வருக.
நீங்கள் அவரிடம் செல்வது போலவும், அவரிடம் பணம் கேட்பது போலவும், அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக் கொடுத்து விடுவது போலவும், நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும் காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும். பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.
இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுது, ஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும் சூழ்நிலை உருவாகும்.
இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறது. எதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது.
கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும். இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்த நம்பிக்கையை பலப்படுத்தும்.
பணத்தைக் கேட்கும் முறை
கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுது, பணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர் கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.
“எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு, நீ கொடுக்க மாட்டே, இந்தப் பணம் போனது போனதுதான். இனிமேல் எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இல்லை. நீ அநியாயமா ஏமாத்தற, இப்படியெல்லாம் செய்தால் நீ உருப்பட மாட்ட….’இவ்வாறு சொல்லக்கூடாது. ஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.
‘உங்களை நம்பித்தான் கொடுத்தேன். அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர். அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம் உங்களுக்குக் கிடையாது. அது எனக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான் கொடுத்தேன். ஆனால், இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறது. பணத்தை வாங்கிய உங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது, நாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று 100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன். நம்புகிறேன். நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம் உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!
ஆகவே, நண்பர்களே! இவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச் சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.
“யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்’. நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன் நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.
பணம் வசூலாகாவிட்டால்…
மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாது. வேறொரு ஏதேனும் ஒரு ரூபத் திலோ, தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.
ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறது. ஒருவர் உழைத்த உழைப்பினால் சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாது. பணமாக வராவிட்டாலும், அது வேறு ஏதேனும் நன்மையாகவாவது மாறும். ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில் திரும்பக் கிடைக்கும். ஆகவே, இழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல் தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.
புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள். இழந்தது 5 இலட்சம், ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன். அது என்னால் முடியும் என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம், ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாக மாற்றுங்கள். வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்!
Author: சூரியன்
http://thannambikkai.org/2009/08/01/2850/