வியாழன், டிசம்பர் 10, 2015

வானொலியின் அருமை



வானொலியின் அருமை, பெருமை பற்றி சென்னைவாசிகள் மறுபடியும் உணர ஒரு வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

நகரின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமலிருந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் பழைய வானொலிப் பெட்டிகளைத் தேடியெடுத்து ஒலிபரப்புகளைக் கேட்டனர்.
வானொலி நிலையங்களும் நிலைமைக்கு ஏற்ப செயற்பட்டன. அவதிக்குள்ளானவர்கள் வானொலி நிலையங்களை அழைத்து தங்கள் நிலை பற்றிக் கூறினார்கள். உணவு, குடிநீர், மீட்புப்படை உதவிகளைக் கோரினார்கள்.

பல பண்பலை வானொலி நிலையங்கள் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு, 24 மணி நேரமும் வெள்ள நிலைமை பற்றி தகவல்களை ஒலிபரப்பின.

ஆலந்தூரைச் சேர்ந்த தேவி என்ற பெண்மணி தான் வழமையாக சமையல் செய்யும்போது வானொலியில் பாடல்கள் கேட்பதாகவும் ஆனால் தனது ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் அந்த சிறிய பெட்டி எவ்வளவு அற்புதமானது என்பதை தான் முன்னர் உணரவில்லை என்றும் கூறினார்.

நேயர்கள் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி நிலைமைகளை உடனுக்குடன் நேரடியாக தகவல் கொடுத்தார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கும் இத் தகவல்கள் பயனளித்தன. வெள்ளிக்கிழமை (4/12) நண்பகல் வெள்ளத்தில் மூழ்கியிருந்த சைதாப்பேட்டை பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் மக்கள் ஆரவாரம் செய்து அத்தகவலை வரவேற்றனர். 
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் இந்த முக்கிய இணைப்புப்பாலம் புதன்கிழமை தொடக்கம் பல அடி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

தொலைபேசி இல்லாமல் இருந்தவர்களுக்கு வானொலி நிலையங்கள் தகவல் பரிமாற்ற நிலையங்களாகவும் செயற்பட்டன. குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களைப்பற்றிக் கேட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லின.

பல அறிவிப்பாளர்கள் நீண்ட நேரம் பணியாற்றினார்கள். அறிவிப்புகள் சரியான ஆட்களுக்கு, சரியான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

வானொலி நிலையங்கள் மூலமாக உதவித்தொகைகளும் வந்து சேர்ந்தன. சிக்காகோவில் உள்ள எஸ். ராஜேஷ் என்ற சென்னைவாசி வெள்ள நிவாரண நிதியாக தன் நண்பர்களிடம் பணம் திரட்டி 4,000 டாலரை ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

வானொலி நிலையங்களும் தங்கள் ஊழியரை அனுப்பி வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்தன.
(தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா http://bit.ly/1OJ6UEo)
நன்றி: திரு. உமாகாந்தன்

ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது?

ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ

வயதான தாயை நினைத்து ஏங்கும் மகள். கர்ப்பமாக உள்ள மனைவியை நினைத்து வருத்தப்படும் கணவன். வேலைக்கு சென்ற தாயை தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் உள்ள குழந்தைகள் என எல்லோரும் அகதிகளாக தொடர்பற்று தனித்துவிடப்பட்டோம். இப்போது சரி. தொலைபேசி, செல்பேசி, இணையம் எல்லாம் நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் நம் கையின் ஆறாவது விரலாக இருந்த செல்பேசி அதற்குள்ளே இருந்த இணையம், டார்ச் லைட், எஃப்.எம், என எல்லாவுமாய் இருந்தது நம்மை கைவிட்டது. அப்போது மட்டும் செய்திகளை தெரிந்துக் கொள்ள நமது தாத்தா, பாட்டி பயன்படுத்திய வானொலி பெட்டி, தொடர்பு கொள்ள ஹாம் ரேடியோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
“சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் ஊடகத்தில் பணிபுரிபவர்களிடமே ஹாம் ரேடியோ இல்லை. ஹாம் ரேடியோ இருந்திருந்தால் மக்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ பிரச்சனைகள அரசுக்காவது உடனடியாக தெரிவித்திருக்கலாம். அரசே இந்த வெள்ளத்தில் செயலற்று போனதற்கு காரணம் தொடர்புகள் அறுந்து போனதுதான்.”, என சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியரும் வானொலி மற்றும் ஹாம் ரேடியோ ஆராய்ச்சியாளருமான டாக்டர்.தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
பேராசிரியர். தங்க ஜெய்சக்திவேல்
பேராசிரியர். தங்க ஜெய்சக்திவேல்
ஏன் முக்கியம் ஹாம் ரேடியோ?
மொபைல் கம்யூனிகேஷனை எப்பவும் நம்ப முடியாது. மின்சார பிரச்சனைகள் இருக்கும். சென்னையில் இருக்கின்ற 4,500 டவர்களில் 4,000 டவர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அப்புறம் எப்படி செல்லில் தொடர்பு கொண்டு பேச முடியும்? இதை எல்லோரும் பயன்படுத்த முடியும். அவசரமான காலங்களில் முக்கியமாக சுனாமி ஏற்பட்ட நேரத்தில் அகில இந்திய வானொலிக்கு தொடர்பு கொள்ள உதவியதே ஹாம் ரேடியோக்கள் தான்.
“சென்னையில் 50 பேர் ஹாம் ரேடியோ பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எங்கெல்லாம் தொடர்பில்லாமல் உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக செயல்பட்டார்கள்”, என்று இந்த வெள்ளத்தில் ஹாம் ரேடியோ எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார், பேராசிரியர்.
வானொலி கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன ஹாம் வானொலி? போலீஸ்லாம் கையில வச்சிக்கிட்டு “ஓவர், ஓவர்”னு சொல்லுவாங்களே அதுவா? அது வாக்கி டாக்கியாச்சே? என்கிறீர்களா! இல்லை ஹாம் வானொலி என்பது வேறு. பூவரசம் பீப்பி படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதில் அந்த நான்கு குழந்தைகளும் ஒரு பெரிய விசயத்தை ஹாம் ரேடியோ மூலம்தான் சாதிப்பார்கள்.
வாக்கி டாக்கி என்பது 500 மீட்டர் முதல் 1 கி.மீ வரை உள்ள சுற்றளவில் தனது சக்தியை பொருத்து மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் சாதனம். ஆனால், ஹாம் ரேடியோ என்பது 10 கி.மீ வரை செயல்படக்கூடியது. போலீசார் வைத்திருப்பதன் பெயர் வாக்கி டாக்கி அல்ல. வயர்லஸ் வானொலி. இந்த வயர்லஸ் வானொலி போன்றதுதான் ஹாம் ரேடியோ.
28TY_AMATEUR_RADIO_1501389f
ஹாம் ரேடியோவை வாங்க உடனேயே புறப்படுறீங்களா? கொஞ்சம் இருங்கள். அதை எப்படி வாங்குவது என்பதையும் பேரா.ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
“எல்லோரும் ஹாம் ரேடியோவை வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு உரிமம் வாங்க வேண்டும். ஹாம் ரேடியோ மற்றும் அதற்கான லைசென்ஸையும் பெறுவதற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்கள் சென்னையில் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்கள் குறைவாகத்தான் வருகிறார்கள். இப்பொழுது கூட கோபாலபுரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிந்த அளவுக்கு இதனை ஊடகவியலாளர்களும் அது சார்ந்து படிக்கும் தொடர்பியல் மாணவர்களும் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.”
வானொலி இந்த வெள்ளக்காலத்தில் எப்படி செயல்பட்டது?
நம்முடைய அகில இந்திய வானொலி வெள்ள காலத்தில் நன்றாக செயல்பட்டது. தங்களது உடைமைகளை இழந்தவர்கள், அதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களை ஒன்றைணைத்து ஒரு பாலமாக வானொலி செயல்பட்டது. இப்பொழுது நீங்கள் வானொலி மார்க்கெட்டுக்கு சென்று வானொலி வாங்க வேண்டும் என்றால் கூட வானொலி பெட்டியே இல்லை. ஏனென்றால், நாம்தான் வானொலி பெட்டியே வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டி விட்டோமே.
images
இனி என்ன செய்வது? உடனடியாக ஹாம் ரேடியோ பெறுவதற்கான முயற்சிகளை எடுங்கள். தாத்தா, பாட்டி உபயோகித்த வானொலியை தூசு தட்டுங்கள்.

வியாழன், நவம்பர் 19, 2015

மந்திரி தந்திரி!–30 -விகடன் டீம் - ஜெயலலிதா

By vayal on 

2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரபரப்பு கூடியிருந்த நேரம். தே.மு.தி.க., இடதுசாரிகள் எல்லாம் சேர்ந்து அ.தி.மு.க தலைமையில் ‘மெகா கூட்டணி’ உருவாகியிருந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகி, கூட்டணிக் கட்சிகள் முரண்டு பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், திடீரென்று அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. கூட்டணிக் கட்சிகள் அரண்டுபோயின. தமிழகத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இப்படி நடந்தது இல்லை. என்ன செய்வது எனத் தெரியாமல், கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்த…  ‘ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது’ என அறிவித்தார்கள். ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் அ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அந்த அப்பாடக்கர் யார் என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வேட்பாளர் பட்டியல் மட்டுமா தெரியாமல் ரிலீஸ் ஆனது? ‘எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போனார்கள்’ என அறிக்கைவிட்டு மீடியாவை மிரளவைத்தார். ‘ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ எனச் சொல்லி, நீதிமன்றத்தையே கிடுகிடுக்கவைத்தார். ‘சசிகலாவோடு இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை’ என அதிரடி செய்வார். ஆனால், அடுத்த சில மாதங்களில் மொத்த மன்னார்குடி குழுவினரும் கார்டனில் கோலோச்சுவார்கள். மந்திரிகளைப் பந்தாடுவார்; அமைச்சரவையைக் கலைத்துப்போட்டு ரம்மி ஆடுவார்; கார்டனில் அமர்ந்துகொண்டு கோட்டையை இயக்குவார்; கொடநாட்டில் இருந்தபடி தமிழ்நாட்டைத் தெறிக்கவிடுவார்; கட்சிக்காரர்களை ‘எப்போது பதவி பறிபோகுமோ?’ என்ற பதற்றத்திலேயே வைத்திருப்பார்… இதுதான் ஜெயலலிதா; இவர்தான் ஜெயலலிதா! 
‘நடிகை நாடாள முடியுமா?’ என எதிரணியினர் முழங்கிக்கொண்டிருந்தபோது, அதை மெய்ப்பித்துக்காட்டியவர். நடிகை, கொள்கைபரப்புச் செயலாளர், எம்.பி., சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர், முதலமைச்சர்… என ஜெயலலிதாவின் பயணம் நீண்ட நெடியது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இப்போதும் உயிர்ப்புடன் இருப்பதற்கு ஒரே காரணம் ஜெயலலிதா மட்டும்தான்.
1991, 2001, 2002, 2011, 2015 என… ஜெயலலிதா முதல்வர் அரியணையில் அமர்ந்திருப்பது இது ஐந்தாவது முறை. இடையில் சொத்துக்குவிப்பு வழக்கினால் சுமார் எட்டு மாத காலம் ஓ.பி.எஸ். தமிழக முதல்வராக இருந்தார். அப்போதும் ‘மக்கள்’ முதல்வராக ஜெயலலிதாதான் இருந்தார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் முதல்வராக ஜெயலலிதா சாதித்தது என்ன? காவல் துறைக்கு அமைச்சராக, ஒட்டுமொத்தத் துறைகளுக்கும் தலைமை நிர்வாகியாக ஜெயலலிதா சாதித்தாரா… சறுக்கினாரா?
விதி 110… அறிவிப்புகள் 181
‘பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளைப் பற்றி ஓர் அமைச்சர், சபாநாயகரின் இசைவுடன் அறிக்கை ஒன்றை அளிக்கலாம். அந்த அறிக்கையின் மீது அப்போது எந்தவித விவாதமும் இருத்தல் கூடாது’ – தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 இப்படித்தான் விவரிக்கிறது. ஆனால், எந்தப் பொது முக்கியத்துவமும் இல்லாத, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் மட்டுமே 110-ன் கீழ் வெளியிடப்படு கின்றன. இந்த நான்கு ஆண்டு காலத்தில்
181 அறிவிப்புகளை 110-ன் கீழ் வெளியிட்டிருக்கிறார் ஜெயலலிதா. 110 என்ற விதியை கடைக்கோடி தமிழன் வரை பிரபலப்படுத்தியதில் ஜெயலலிதாவின் பங்கு மகத்தானது. ஆனால், அந்த அறிவிப்புகள் ஏதாவது செயல்வடிவம் பெறுகின்றனவா?
‘வீட்டு வசதி வாரியத்தின் மூலம் 2,160 கோடி ரூபாய் செலவில் 311 ஏக்கரில் சென்னை திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார். இதுவரை எந்தத் துணைக்கோள் நகரத்தையும் காணவில்லை. இந்தத் திட்டத்துக்கு வரைபடம் தயாரிக்கும் பணியே இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ‘கேளம்பாக்கம் அருகில் துணை நகரம் அமைக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்தார். உடனே ஜெயலலிதா காட்டமாக அறிக்கைவிட்டார். ‘கருணாநிதி வீட்டில் உள்ள பெண்டு பிள்ளைகள், பேரன் பேத்திகள், மறைந்த முதல் மனைவியின் உறவினர்கள், அவர்கள் வழி வந்த உறவினர்கள், இருக்கும் மனைவியின் உறவினர்கள் ஆகியோர் முதலில் கோபாலபுரத்தைவிட்டும், சி.ஐ.டி காலனியைவிட்டும் வெளியேறி ஜனநெருக்கத்தைக் குறைத்தாலே, துணை நகரத்துக்கு அவசியம் இல்லாமல்போய்விடும்’ என்றார். பிறகு அவரே திருமழிசை துணை நகரத் திட்டத்தை அறிவித்து, அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறது.
‘மதுரை விமான நிலையத்துக்கு அருகில் 586 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும்கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைக்கப்படும்’ என்பது 110-ன் கீழான இன்னோர் அறிவிப்பு. இதுவரை வரைபடம் தயாரிக்கும் பணிகூட முடியவில்லை.  ‘தமிழகத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்’ என்றார். நிலம் கையகப்படுத்துவதற்கான வழிகளைக்கூட இப்போதுதான் ஆராயத் தொடங்கியிருக்கிறது சி.எம்.டி.ஏ.
ஓடாத மோனோ ரயில்!
கருணாநிதி மெட்ரோ ரயிலுக்கு அடிக்கல் நாட்டியபோது, ‘மெட்ரோ ரயிலைவிட மோனோ ரயில்தான் பெஸ்ட்’ என பக்கம் பக்கமாக அறிக்கைவிட்டு மட்டம் தட்டினார் ஜெயலலிதா. ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடினார். ‘சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். கிழக்கு தாம்பரம் வழியாக வண்டலூரில் இருந்து வேளச்சேரி வரையிலும், போரூர் வழியாக பூந்தமல்லியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், வளசரவாக்கம் வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரையிலும் செல்லக்கூடிய மூன்று வழித்தடங்கள் கொண்டதாக மோனோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது’ என 2011-ம் ஆண்டில் அறிவித்தார் ஜெயலலிதா. அத்துடன் ‘மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்’ என ஜிகினாக்களைத் தொங்கவிட்டார். எல்லாமே பஞ்சர்தான்.
நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 35 அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் ஆறு பணிகள்தான் முடிக்கப்பட்டிருக்கின்றன. ‘மாமல்லபுரத்தில் 10 கோடி ரூபாய் செலவில் பல ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பலுடன்கூடிய கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என 2012-ம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் அப்படியே இருக்கிறது. ‘திட்டம் சாத்தியமா?’ என்கிற சாத்தியக்கூறு அறிக்கை தயாரித்துவிட்டு திட்டத்தை அறிவிப்பதுதான் நடைமுறை. ஆனால், இவர்கள் ரிவர்ஸில் பயணிக்கிறார்கள். இந்த உண்மை இப்படி இருக்க… 110 விதி அறிவிப்புகளை எல்லாம் சேர்த்து ‘விதியை மாற்றிய விதி’ என்ற தலைப்பில் புத்தகமாகப் போட்டிருக்கிறது அரசு.
மின்சார வெட்டு வாரியம்?
தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மக்கள், அ.தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த மின்வெட்டு ஒரு முக்கியக் காரணி.  ஆட்சிக்கு வந்த பிறகு 2011-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த தொழில் கூட்டமைப்பினரின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, ‘அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15,140 மெகாவாட் அனல் மின்சாரம், 5,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம், 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் என மொத்த மின் உற்பத்தித்திறன் 23,140 மெகாவாட் அளவுக்கு உயரும்’ என பந்தக்கால் போட்டார். ‘தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம்’ என்றார். எதுவும் நடக்கவில்லை.
‘2013-14ம் ஆண்டில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க செலவழிக்கப்பட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இரண்டு ஆண்டுகள் இப்படி வெளிச்சந்தையில் வாங்கும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலே 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும்’ என்கிறார்கள் எதிர்க் கட்சியினர். இப்போது கிடைத்திருப்பதோ, கடன் சுமை மட்டும்தான். தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவது ஊழலுக்குத்தான் வழிவகுக்கும்’ என எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டும் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை அரசு. ‘அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு புதிய மின் திட்டம்கூட உருவாக்கப்படவில்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்கள்கூட தாமதப்படுத்தப்படுகின்றன’ எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. டெண்டர் கேட்பதில் தாமதம், அதைத் திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், டெண்டர் மீது முடிவெடுப்பதில் தாமதம் என அனைத்துக் கட்டங்களிலும் மெத்தனம்.
உடன்குடி மின்திட்டம் நிறைவேற்றுவதில் நடந்த குளறுபடிகள் ஊர் அறிந்தவை. 2007-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2012-ம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால் எட்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தொடங்கிய புள்ளிக்கே வந்து நிற்கிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் 80 கோடி ரூபாய் வீணானதுதான் மிச்சம்.
கேபினெட் கலைப்புகள்!
இந்தியாவிலேயே முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதன் முழுப் பெருமிதமும் ஜெயலலிதாவையே சேரும். நான்கரை ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ‘முன்னாள்’கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவரை 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டிருக்கிறது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்களை முதலமைச்சர் மாற்றலாம். அது அவரது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை சகட்டுமேனிக்குப் பயன்படுத்துகிறார் ஜெயலலிதா. அமைச்சரவையைப் பந்தாடுவது ஜெயலலிதாவின் விளையாட்டுக்களில் ஒன்று.  2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவோடு 34 பேர் பதவி ஏற்றனர். அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை முழுமையாக அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலருக்கு மீண்டும் பதவி கொடுப்பதற்கு என்ன பெயர்? ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.பி.வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா, ஆனந்தன் என நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சர் ஆனவர்கள் பலர். பள்ளி கல்வித் துறைக்கு கடந்த நான்கரை ஆண்டுகளில் சி.வி.சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி.வீரமணி என ஆறு பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். பெண் புகாரில் சிக்கி பதவி இழந்த ஆனந்தன், மூன்றே மாதங்களில் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் கேபினெட்டை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடுவது இல்லை.
ஆலோசகர்களா… அதிகார மையங்களா?
முக்கியப் பதவியில் இருப்பவர்களை டம்மியாக்கிவிட்டு ‘ஆலோசகர்கள்’ என்ற பெயரில் இன்னோர் அதிகார மையத்தை உருவாக்கினார். தலைமைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி என உயர் பதவிகளுக்கும் ‘ஆலோசகர்கள்’ நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலாளராக இருந்த தேபேந்திரநாத் சாரங்கி ஓய்வு பெற்ற அடுத்த நாளே ‘ஆலோசகர்’ என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற ஷீலா பாலகிருஷ்ணனும் ஓய்வுக்குப் பிறகு ஆலோசகர் ஆக்கப்பட்டார். காவல் துறை தலைமை இயக்குநராகப் பணி நீட்டிப்பில் இருந்து ஓய்வுபெற்ற ராமானுஜம், அரசின் ஆலோசகராக அமர்த்தப் பட்டார். வெங்கடரமணன், ஷீலா ப்ரியா ஆகியோர் ஓய்வுக்குப் பிறகும் முதலமைச்சரின் செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.
இந்த ஆலோசகர்கள் பதவியும் பதவி நீட்டிப்புகளும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை டம்மி ஆக்கியதோடு, சீனியாரிட்டியைக் குலைத்து பதவி உயர்வுகளையும் தடுத்து நிறுத்தியது. தற்போது பொறுப்பில் இருப்பவர்களுக்குத் திறமை இல்லை என்பதுபோல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்குப் பதவி கொடுத்து அனைத்து அரசு சலுகைகளையும் அதிகாரத்தையும் தொடர்ந்து அனுபவிக்க வகைசெய்து கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
ஏட்டிக்குப் போட்டி!
சென்னைத் துறைமுகத்தில் இருந்து, மதுரவாயல் வரையில் பறக்கும் சாலைத் திட்டம் கடந்த தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்டது. 30 சதவிகிதப் பணிகள் முடிந்திருந்த நிலையில், ‘கூவம் ஆற்றில் நீர் தடைபடும்’ எனச் சொல்லி திட்டத்தை நிறுத்தினார் ஜெயலலிதா. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், சென்னையின் புறவழிச் சாலையில் இருந்து துறைமுகத்துக்கு எளிதாக சரக்குகளைக் கொண்டுபோயிருக்க முடியும். கார் தொழிற்சாலைகளில் இருந்து துறைமுகத்துக்கு கார்களை அனுப்புவதில் பிரச்னை தீர்ந்திருக்கும். இப்படி முதலீட்டுக்கான எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதுதான் கொடுமை.
ஜெயலலிதாவின் ஏட்டிக்குப் போட்டி அரசியலின் இன்னொரு முகம், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியது. கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் முறைகேடு எனச் சொல்லி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. நான்கரை ஆண்டுகள் முடியப்போகிறது. எந்த முன்னேற்றமும் இல்லை. ரகுபதி கமிஷனுக்காக 1.53 கோடி ரூபாய் செலவானதுதான் மிச்சம். ‘கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போகிறேன்’ என ஜெயலலிதா சொன்னதும் நீதிமன்றம் குட்டு வைத்தது. அதனால் நூலகம் காப்பாற்றப்பட்டபோதும், அந்த நூலகத்தை முடக்குவதுபோல புதிய புத்தகங்கள் வாங்காமலும், அடிப்படை வசதிகளைச் செய்யாமலும் அரங்கத்தைப் பூட்டிவைத்தும் பழிதீர்த்தார் ஜெயலலிதா.
காவல் துறையா… ஏவல் துறையா?
காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா, அதைச் சரியாக நிர்வகிக்கவில்லை என்பதற்கு சந்திசிரிக்கும் சட்டம் – ஒழுங்கே சாட்சி. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்’ எனப் போராடிய பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை காக்கிகள் நடத்திய விதம் மனசாட்சியுள்ள அத்தனை பேரையும் முகம் சுளிக்கவைத்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியான யுவராஜ், போலீஸுக்கு தண்ணிகாட்டியதை மறக்க முடியுமா? இந்திய வரலாற்றிலேயே தேதியும் இடமும் குறித்து போலீஸில் சரண்டர் ஆனது யுவராஜ் மட்டும்தான். 
‘ஸ்காட்லாந்து யார்டு’ என மார்தட்டிக்கொண்டிருந்த தமிழ்நாடு காவல் துறை ‘டாஸ்மாக் கார்டாக’ மாறி ஒயின் ஷாப்களை காவல் காத்தது காக்கிகள் வரலாற்றில் கரும்புள்ளி. முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விசாரித்து ஒரு துரும்பையும் கண்டுபிடிக்கவில்லை. சி.பி.ஐ விசாரணை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் கால அவகாசம் கேட்பதற்குத்தான் காக்கிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது. 
‘உ.பி., மேற்கு வங்கத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சிவகங்கையில் ஒரு சிறுமி மீது காவல் துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை மறக்க முடியுமா? தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் இன்னொரு முகம் கௌரவக் கொலைகள். சிவகங்கை, உசிலம்பட்டி, சாத்தூர், சீவலப்பேரி… என வரிசையாக கௌரவக் கொலைகள் அரங்கேறின. இந்தக் குற்றங்களைத் தடுப்பதைவிட மறைப்பதில்தான் அதிக அக்கறை காட்டியது காவல் துறை.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசுப் பேருந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், தீயிட்டு எரித்தனர். விளாத்திகுளத்திலும் விருதுநகர் காரியாப்பட்டியிலும் பஸ்கள் எரிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும் அலுவலகங்களும் தப்பவில்லை. இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்தது போலீஸ். ‘மரக்காணம் வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க 100 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்’ எனக் கூறி, அதை வசூலித்துத் தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஜெயலலிதா ஏற்படுத்தினார். ஆனால், அ.தி.மு.க நடத்திய வன்முறைகளுக்கு எந்த நடவடிக்கையும் பாயவில்லை. ‘அ.தி.மு.க-வின் நான்கரை ஆண்டு ஆட்சிக் காலத்தில் 9,000 கொலைகளும் 88,500 கொள்ளைகளும் நடந்திருக்கின்றன’ என்கிறார் ராமதாஸ். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் குற்றங்கள் மற்றும் பதிவுசெய்யப்படும் வழக்கு விவரங்களை காவல் துறை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், அந்தத் தகவல்கள் வெளியாவதை நிறுத்திவிட்டார்கள்.
தமிழ்நாடு போலீஸ் சம்பாதித்துவைத்திருக்கும் இன்னொரு பெயர் ‘வேடிக்கை போலீஸ்’. சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலில் ஆரம்பித்த இந்த வேடிக்கை, இப்போது வரை தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயலலிதாவை விமர்சித்தபோது தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க-வினர் இளங்கோவன் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு கொடுத்த போலீஸ், அ.தி.மு.க-வினர் சத்தியமூர்த்தி பவனை ஷிஃப்ட் போட்டு அடித்து நொறுக்கியபோது, கைகட்டி வேடிக்கை பார்த்தது. வேறு எதையும் உருப்படியாகச் செய்யவே இல்லையா? ஏன் இல்லை… சேலம் மேற்குச் சரக குற்றப்பிரிவு உதவி கமிஷனர் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி10 நாட்கள் லீவு போட்டுவிட்டு, ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் கரைவேட்டி கட்டிக்கொண்டு களத்தில் நின்றார். அவர் கரை வேட்டி கட்டி செய்த வேலையை மற்றவர்கள் காக்கியை அணிந்துகொண்டு செய்கிறார்கள், அவ்வளவுதான்!
ஒளிரும் டாஸ்மாக்… மிளிரும் மிடாஸ்!
படிக்கவைக்கவேண்டிய அரசு, குடிக்கவைக்கும் அவலத்தைக் கண்டித்து போராடிய சசிபெருமாள் செல்போன் கோபுரத்தில் ஏறி, தன் உயிரையே இழக்க நேர்ந்தது. ‘மூடு… டாஸ்மாக்கை மூடு…’, ‘ஊருக்கு ஊரு சாராயம், தள்ளாடுது தமிழகம்…’ என பாடல்கள் பாடிய கோவன், தேசத் துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 
‘பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் கள்ளச்சாராயப் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கொள்கை’ எனச் சொல்லி டாஸ்மாக் கடைபரப்பி மக்களின் சமூகப் பொருளாதார நலனை(!) மேம்படுத்தும் ஆட்சியை இந்தியாவில் வேறு எங்குமே பார்க்க முடியாது. ‘மதுவை விற்று மக்களைக் கொல்லும் அதிகாரம் சமூக விரோதிகளுக்கு இல்லை. எங்களுக்கு மட்டுமே உண்டு’ என்பதை உரக்கச் சொன்னது ஜெயலலிதாவின் ஆட்சிதான்.
சரக்கு விற்றே ஆண்டுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ‘கல்லா’ கட்டும் அளவுக்கு கரன்சி இங்கே புரள்கிறது. ‘சமூக விரோதிகளிடம் பணம் குவிந்துவிடக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு மிடாஸும் எலைட்டும் எஸ்.என்.ஜெ-வும்தான் மஞ்சள் குளிக்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான் நான்கு புதிய மதுபான ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. முந்தைய தி.மு.க ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் டாஸ்மாக் வருவாய் உயர்ந்தது. ஜெயலலிதா ஆட்சியின் கடின உழைப்பால், ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உயர்ந்துகொண்டிருக்கிறது.
மொத்தம் 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு சரக்கு சப்ளை செய்கின்றன. டாஸ்மாக் கொள்முதலில் மிடாஸுக்குத்தான் முதல் இடம். இது யாருடைய நிறுவனம் என்பது ஊரறிந்த செய்தி. மது வருவாய் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, போலி மதுபானம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க 10581 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி சேவையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் முறைகேடுகளைச் சொல்வதற்கு எந்த ஓர் இலவச டோல்ஃப்ரீ நம்பரையும் காணோம்.
‘அரசு எடுத்துவரும் நடவடிக்கையால் 2011-ம் ஆண்டு முதல் கள்ளச்சாராய சாவுகளே இல்லை’ எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறது அரசு. சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்பத்தில் பெண்கள் துன்புறுத்தப்படுதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு… இவற்றை எந்தக் கணக்கில் சேர்ப்பது? உங்களின் டாஸ்மாக் சரக்கை அருந்திவிட்டுதானே திருவள்ளூர் சோழவரம் அம்பேத்கர் நகர், கிருஷ்ணகிரி தொட்டமஞ்சி ஊராட்சி தொடகரை கிராமம்… என சிறுமிகள் சீரழிக்கப்பட்டனர்? டாஸ்மாக் மதுவால்தானே கிருஷ்ணகிரி கல்லூரி மாணவி கூட்டாக வன்புணர்ச்சி செய்யப்பட்டார்?
முறைகேடுகள், ஊழல் புகார்கள்!
முட்டையில் தொடங்கி தியேட்டர் வரை முறைகேடு புகார்கள் வகைதொகை இல்லாமல் அணிவகுக்கின்றன. ‘டாப் 10 ஊழல் பெருச்சாளிகள்’ என பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் சினிமா போல டிரெய்லர்  வெளியிடுகிறார்கள். ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கரன்சி வெறிக்கு உயிரையே விலையாகக் கொடுத்தார் முத்துக்குமாரசாமி. டிரைவர் வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் பணம் வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆட்களும் காட்டிய அடாவடியில்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக பலரும் பேசினார்கள். அடிமட்டத்தில் அல்ல, அமைச்சரவைக்குள்ளேயே புகார்கள் புரையோடிப்போனபோதும் ஜெயலலிதா பக்கத்து மாநிலத்தில் நடந்த விவகாரம்போல கண்டும்காணாமலும் இருந்தார். எதிர்க்கட்சிகளும் மீடியாவும் விவகாரத்தை வெளிச்சம் ஆக்கியபோதுதான் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார்.
முட்டையில் பூஜ்ஜியம்!
தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவாக 68 லட்சம் பேர் பயன்பெறும் பெரிய திட்டமான சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்குவதில் ஏகப்பட்ட கோல்மால்கள். வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளை கொள்முதல் செய்கிறது அரசு. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக டெண்டர்கள் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட வரையில் பிரச்னை இல்லை. திடீரென்று இந்தக் கொள்முதல் முறை மாற்றப்பட்டது. தமிழ்நாடு முழுக்க ஒட்டு மொத்தமாக டெண்டர் விடும் முறையைக் கொண்டுவந்தனர். ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப்பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்கவேண்டும். அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ‘இவை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு’ என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பினாலும் அரசுத் தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.
சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்குக்  கிடைக்கும் முட்டைகளை, அதைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்தது. ‘ ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு முட்டை சப்ளை செய்கிறது’ என விலாவாரியாக எடுத்துவைத்தும் ஜெயலலிதா அசரவில்லை.
ஆவின் கபளீகரம்!
ஆவின் நிர்வாகத்தில் நடந்த மிகப் பெரிய முறைகேடு, பால் கலப்பட விவகாரம். தென் சென்னை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த வைத்தியநாதன்தான் இந்த முறைகேட்டின் சூத்திரதாரி. ஆவின் பாலை டேங்கர் லாரிகளில் கொண்டுவரும்போது, வழியில் நிறுத்தி பாலைத் திருடிவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்யப்பட்டுவந்தது. இப்படிப் பல ஆயிரம் லிட்டர் பால் தினம்தோறும் கொள்ளைபோனது. அதிக அளவில் தண்ணீர் கலந்ததை மறைக்க பல்வேறு ரசாயனப் பொருட்களைக் கலந்து, தரமற்றப் பாலை பொது மக்களுக்கு விநியோகித்தார்கள்.
ஆவின் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்த வைத்தியநாதன், டேங்கர் லாரி கான்ட்ராக்ட் எடுத்து  பல வாகனங்களுக்கு அதிபராகி பெரும் செல்வந்தராக மாறினார். விவகாரம் வெடித்து வேறு வழி இல்லாமல் வைத்தியநாதனை கட்சியில் இருந்து கட்டம் கட்டினார் ஜெயலலிதா. ‘ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து முறையான விசாரணை நடத்தப்படாவிட்டால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்’ என சென்னை உயர் நீதிமன்றமே எச்சரிக்கும் அளவுக்குப்போனது நிலைமை.
கோகோ கோலா கோல்மால்!
‘எங்கோ ஓர் ஆலையின் சங்கு ஒலிக்கும்போது ஒரு கிராமத்தின் அழிவு ஆரம்பமாகிறது’ என்பார்கள். ‘ஓர் ஆலை உருவாகிறது என்றால், பலருடைய பாக்கெட் நிரம்பப்போகிறது’ எனப் புரியவைத்துவிட்டது கோகோ கோலா விவகாரம். அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்தின் அடாவடி அத்துமீறலுக்கு நேரடி சாட்சி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை கோகோ கோலா ஆலை விவகாரம். சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா ஆலை அமைக்க, பல சலுகைகளை வழங்கி ஒப்பந்தம் போட்டது அரசு. கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்… என ஆலைக்கு எதிராக பெரிய கொந்தளிப்புகள் நடந்தன. ‘கோகோ கோலா நிறுவனத்துக்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை’ என சட்டமன்றத்தில் சொன்னார் வெங்கடாசலம். ஆதாரத்தை
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அள்ளிப்போட்டதும் அமைச்சரின் பொய் அம்பலம் ஏறியது. ‘இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சரா… இல்லை கோகோ கோலா நிறுவனத்துக்கு முகவரா?’ என போர்க்கொடி தூக்கினார் இளங்கோவன். வேறு வழி இல்லாமல் கோகோ கோலா தொழிற்சாலைக்குத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.
பகாசுர கிரானைட் கொள்ளை!
16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையைக் கண்டுபிடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பினார் மதுரை கலெக்டராக இருந்த சகாயம். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக சகாயத்தைப் பந்தாடினார் ஜெயலலிதா. சகாயம் அறிக்கை மீடியாவில் வெளியானபோதுதான் கிரானைட் கொள்ளையின் முகம் ஊருக்குத் தெரிந்தது. கிரானைட் முறைகேட்டை விசாரிக்க சகாயத்தை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனால் ஜெயலலிதா அரசு, நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை. அரசை எச்சரித்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகுதான், விசாரணைக்கு ஒப்புக்கொண்டது அரசு. ஒப்புக்கொண்டார்களே தவிர, இப்போது வரை ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் ‘எலும்புக்கூடுகளைக் களவாடிவிடுவார்கள்’ என தமிழ்நாடு போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம் சுடுகாட்டில் படுத்துக் கிடந்தார். 
கிரானைட் கொள்ளை யால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மோசடிக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறது அரசு. கிரானைட் விவகாரத்தில் அரசு காட்டும் சண்டித்தனம் சந்தேக அதிர்வலைகளை உண்டாக்குகிறது. 
பருப்பு கொள்முதல் ஊழல்
பருப்பு கொள்முதல் முறைகேடு, உணவுத் துறையில் நடக்கும் ஊழலுக்கு ஒரு சாம்பிள். ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட பருப்பில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ‘வெளிச்சந்தையில் குறைந்த விலையில் பருப்பு வகைகள் கிடைக்கும் நிலையில், உளுத்தம் பருப்பும் துவரம் பருப்பும் கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டால், அரசுக்கு  730 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ஓர் ஆண்டுக்கான பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்வதால், சந்தையில் பருப்பு விலை குறையும்போது அரசுக்குக் கூடுதல் இழப்பு ஏற்படும். பருப்பு கொள்முதலில் மட்டும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசுக்கு 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். ஏதோ ஒரு நன்றிக் கடனுக்காக குறிப்பிட்ட நிறுவனத்துக்கு மட்டும் ஆர்டர் வழங்கப்படுவது ஏன்?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் டாக்டர் ராமதாஸ்.
தாது மணல் கொள்ளை!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு, கடத்தப்படுவதாக புகார் எழ… ‘சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என அப்போதைய தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார், அரசுக்குப் பரிந்துரை செய்தார். இதனால் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ‘அந்த ஆய்வு அறிக்கையை ஏன் இதுவரை வெளியிடவில்லை?’ என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியும் கண்டுகொள்ளப்படவில்லை. 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை நீடிக்கும் நிலையில் வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ் வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க நீதிமன்றத்தால் தடை நீக்கப்பட்டிருக்கிறது.
ரேஷன் அரிசி கடத்தல்
‘தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி கடத்தப்படுகிறது’ என அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. 2011-12ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 லட்சம் டன் அரிசியில் 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாகச் சொன்னது அந்த அறிக்கை. இதன் மதிப்பு 610 கோடி ரூபாய்.
கர்நாடகாவுக்காகக் கள்ள மௌனம்!
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு… என தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளில் துணிவான சட்டப் போராட்டம் நடத்துவதில் ஜெயலலிதா முன் நின்றார். காவிரியின் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடவைத்தார். கேரளா, ஆந்திரா, கர்நாடகா என சுற்றியிருக்கும் மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சிக்கும்போது எல்லாம் ஜெயலலிதாவின் அறிக்கைகளில் அனல் பறக்கும். இவை எல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியான 2014-ம் ஆண்டு செப்டம்பர் வரையில்தான். நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு, ஜெயலலிதாவின் குணம் மாறிப்போனது.
கர்நாடகா மேக்கேதாட்டூவில் அணை கட்டும் விவகாரம் பற்றி எரிந்தபோது, ஜெயலலிதாவிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. விவசாயிகள் ஒன்று திரண்டு பந்த் நடத்தியபோது அதற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் கர்நாடகாவைக் கண்டிக்கும் வாசகங்கள் இல்லை. இலங்கையைக் கண்டித்து தீர்மானங்கள் போட முடிந்தவர்களால் கர்நாடகாவைக் கண்டிக்க முடியாமல்போனதற்குக் காரணம், கர்நாடகாவில் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கு அல்லாமல் வேறு என்ன?
பரணில் தூங்கும் விருதுகள்!
சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்… என தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த விருதுகளை 2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையில் ஆறு ஆண்டுகளாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருது, திரைப்படங்களுக்கு அரசு மானியம், சின்னத்திரை விருதுகளும்கூட நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன.
சினிமா விருதுகளுடன் வழங்கப்படும் அறிஞர் அண்ணா, கலைவாணர், ராஜா சாண்டோ, எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன், சிவாஜி கணேசன், தியாகராஜ பாகவதர் பெயர்களிலான விருதுகளையும் பரணில் கட்டிவைத்துவிட்டார்கள். 
விரயமாகும் மக்கள் பணம்!
விளம்பரத்தால் திரைப்படங்களை ஓட்டலாம்… அரசாங்கத்தை ஓட்ட முடியுமா? முடியும் என்பதற்கு ஜெயலலிதா ஆட்சிதான் முன்னுதாரணம். ‘நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை’ தொடங்கி ஒவ்வோர் ஆண்டும் சாதனை விளம்பரங்களுக்கு கோடிகளில் கரன்சிகள் கொட்டப்பட்டன. முதல் ஆண்டு சாதனைக்கு 29 கோடி ரூபாய் தொடங்கி, இப்போது நான்கு ஆண்டு சாதனைக்கு 20 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருக்கிறது.
கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதால் 76.04 கோடி ரூபாய் கூடுதல் செலவு. இப்படி மாற்றப்பட்ட மருத்துவமனையை நேரில் போய் திறக்காமல் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்தத் திறப்பு விழா விளம்பரச் செலவு மட்டும் 1.74 கோடி ரூபாய்!
100 நாள் சாதனை மலர், ஓராண்டு சாதனை, ஈராண்டு சாதனை என ஆண்டுக்கு ஒரு மலர், ‘அம்மாவின் எழுச்சிமிகு உரைகள்’, ‘அம்மாவின் அமுத மொழிகள்’, ‘அம்மாவின் முத்தான கதைகள்’ போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் புகழ் பாடின. அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பில் வெளியிடப்படவேண்டிய இந்தப் புத்தகங்களை எல்லாம் அரசு சார்பில் வெளியிட்டு மக்கள் பணத்தை வீணடித்தார்.
மீடியா தொடர்பு!
2011-ம் ஆண்டு தேர்தலில் வென்ற குஷியில் இருந்த ஜெயலலிதா, பத்திரிகையாளர்களிடம், ‘நமக்குள் ஓர் ஒப்பந்தம் வைத்துக்கொள்வோம். போகும்போது வரும்போது எல்லாம் என்னிடம் பேட்டி கேட்காதீர்கள். வாரத்துக்கு ஒரு முறை அதாவது செவ்வாய்க்கிழமை தோறும் உங்களைச் சந்திக்கிறேன்’ எனச் சொன்னார். சொன்னதுபோல அடுத்த செய்வாய்க்கிழமை சந்தித்தார். அதன் பிறகு மீடியாவை டீலில் விட்டார். இந்த நான்கு ஆண்டு காலத்தில் நடந்த அதிகாரபூர்வ பிரஸ்மீட்களின் எண்ணிக்கை ஐந்து மட்டும்தான். ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னைக்காக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு, டெல்லியில் நடந்த பிரஸ்மீட்கள், எம்.பி தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோது ஒரு சந்திப்பு… அவ்வளவுதான். திட்டமிடப்படாத மீடியா சந்திப்புகளும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. மீடியாவோடு தொடர்பு இல்லாமல் ஒரு முதலமைச்சர் இந்தியாவில் இருக்க முடியாது. அந்தச் சாதனையையும் படைத்துவிட்டார் ஜெயலலிதா.
விஷன்… இல்லை மிஷன்!
‘தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போகிறேன்’ – ஜெயலலிதா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அதற்கு செயல்வடிவம் கொடுக்கப்போவதாகச் சொல்லி ‘தொலைநோக்குத் திட்டம் – 2023’-ஐ (விஷன்-2023) 2012-ம் ஆண்டில் வெளியிட்டார். இரண்டு வருடங்கள் கடந்து 2014-ம் ஆண்டில் அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். உடனே அமைச்சர்கள் கனவே நனவாகிவிட்டதுபோல வார்த்தை மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டார்கள். ஆனால், 15 லட்சம் கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள், செங்கல்பட்டு – தூத்துக்குடி, தூத்துக்குடி -  கோவை, கோவை – செங்கல்பட்டு இடையே 24 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் முக்கோண ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள், 25 ஆயிரம் கோடி ரூபாயில் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், 1,60,985 கோடி ரூபாயில் தொழில் துறைத் திட்டங்கள், 25,000 கோடி ரூபாயில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்… என, காட்டப்பட்ட கலர் மத்தாப்புகள் எப்போது எரியும் என்பது அம்மாவுக்குத்தான் வெளிச்சம்.
‘மாணவன் ஒருவன் தேர்வு எழுதிக்கொண்டிருந்தான். கேள்வித்தாளில் ‘தென்னை மரத்தைப் பற்றி 30 வரிகளில் கட்டுரை ஒன்று எழுதுக!’ என இருந்தது. அந்த மாணவனோ அரைகுறைப் பேர்வழி. ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதும் இல்லை; நன்றாகப் படிப்பதும் இல்லை. தென்னை மரத்தைப் பற்றி, அவனுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், பசுவைப் பற்றி அரைகுறையாகப் படித்துவைத்திருந்தான். ஆகவே அவன் எழுதினான்… ‘பசு இருக்கிறதே பசு, அதற்கு நான்கு கால்கள் உண்டு, இரண்டு கொம்புகள் உண்டு, ஒரு வால் உண்டு. அது புல்லைத் தின்னும்…’ இப்படியே 29 வரிகள் பசுவைப் பற்றி எழுதிவிட்டு கடைசியாக ‘இந்தப் பசுவை, தென்னை மரத்தில் கட்டுவார்கள்’ என எழுதினான். தலைப்பு ‘தென்னை மரம்’, எழுதியது பசுவைப் பற்றி! எப்படி இருக்கிறது கதை?’ ஒருமுறை ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதைதான் இதுவும். ஜெயலலிதா சொன்னது ஒன்று, செய்தது வேறு… வேறு என்ன சொல்ல! ஆனால், அவர் நம்மிடம் மீண்டும் மீண்டும் கேட்கிறார் மிரட்டலாக… ‘செய்வீர்களா… நீங்கள் செய்வீர்களா?’
ஓட்டு போட்டதைப் பற்றி சொல்கிறாரோ?

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து நடந்தபோது, ‘அரசு அனுமதி கொடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. தனியார் நிறுவனம், விதிகளை மீறி கட்டடம் கட்டியிருக்கிறது’ எனச் சொன்னார் ஜெயலலிதா. விசாரணை கமிஷனும் இதைத்தான் வழிமொழிந்தது. ‘ஜெயலலிதாவிடம் பூங்கொத்து கொடுக்கவேண்டும் என்றால், கூடை வடிவப் பூங்கொத்துதான் தர வேண்டும்; இரண்டு அடி தள்ளி நின்று நீட்ட வேண்டும்; முதலமைச்சர் தொட்டுத் தந்து, உதவியாளர் வந்து வாங்கும் வரையில் அந்தப் பூங்கொத்தைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள வேண்டும். போட்டோவுக்கு இந்த பொசிஷனில் இருந்துதான் போஸ் தர வேண்டும்…’ என்றெல்லாம் பூங்கொத்துத் தருபவர்களுக்கு விதிகள் போடப்படுகின்றன. ‘முதலமைச்சருக்கு அளிக்கப்படும் பூங்கொத்தில் பிசிறுகள் இருக்கிறதா… ஸ்டாப்ளர் பின் எதுவும் உள்ளதா… பூக்களில் முட்கள் இருக்கின்றனவா?’ என எல்லாவற்றையும் பரிசோதிப்பார்கள். முதலமைச்சருக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கு இத்தனை ரூல்ஸ் போடுபவர்கள், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டப்படும்போது எங்கே சென்றிருந்தனர்? பூங்கொத்தைவிட மனித உயிர்கள் மலிவாகிவிட்டனவா? 

வியாழன், நவம்பர் 05, 2015

கணக்கில்லா கம்பெனிகள்… குவியும் சொத்துக்கள்!- ஜூ.வி. டீம்


புதிய இளவரசர்கள்!  மிடாஸ் முதல் ஃபீனிக்ஸ் வரை
பூனை சூடுபட்டால் மறுபடி அந்தப் பக்கம் போகாது. ஆனால், மனிதரின் பணத்து ஆசை போகுமா?
போகாது என்பதற்கு உதாரணம் இவை.
வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீது 1997-ம் ஆண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 18 ஆண்டுகள் சட்டப் போராட்டங்கள் நடந்து… நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று.. அதன்பிறகு கர்நாடக உயர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. ஆனாலும் விவகாரம் முற்றுப் பெற்றுவிடவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பாக இதன் மேல்முறையீடு மனு விசாரணை நடக்க இருக்கும் நிலையில்… இப்போது வெளியில் கசிந்திருக்கும் ஆவணங்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன.
யார் யார்?
சசிகலா, இளவரசியின் குடும்பத்தினர் பெயர்களைத் தாங்கித் தொடங்கப்பட்டு இருக்கும் பல்வேறு நிறுவனங்கள், அதில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றிய ஆவணங்களை மொத்தமாக மத்திய உளவுத் துறை அள்ளிச் சென்று உள்ளது.
சசிகலாவின் மூத்த அண்ணன் பெயர் சுந்தரவதனன். அவருக்கு அனுராதா, டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி ஆகிய மூன்று வாரிசுகள் உண்டு. இதில் பிரபாவதியின் கணவரான டாக்டர் சிவக்குமார் பெயர், இந்த ஆவணங்களில் அதிகமாக வலம் வருகிறது. டாக்டர் வெங்கடேஷ், அவரது மனைவி ஹேமா வெங்கடேஷ் ஆகியோர் பெயர்களும் இடம்பெறுகின்றன.
இளவரசிக்கு கிருஷ்ணப்​பிரியா, சகீலா ஆகிய இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில், கிருஷ்ணப்பிரியாவின் கணவரான கார்த்திகேயனின் பெயர் அதிகமாக இடம்பெற்று உள்ளது. திருச்சியைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் இந்த கார்த்திகேயன்.
ஜெயலலிதாவின் உதவி​யாளரான பூங்குன்றன் பெயரும் அதிகம் உள்ளது.
எம்.நடராசனின் சகோதரியான ஆண்டாள் என்பவரின் மகனான குலோத்துங்கன் பெயர், சில நிறுவனங்களில் இடம்பெற்று உள்ளது.
2015-ம் ஆண்டு வெளியான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ஜெயலலிதாவோடு ஒரே வீட்டில் வசிக்கும் சசிகலா, இளவரசி மற்றும் அவர்களுடைய உறவினர்கள்தான் இந்தப் புதிய சொத்துக்களை நிர்வகித்து வருபவர்களாகவும், அவற்றை இயக்கும் சக்திகளாகவும் இருந்து வருகின்றனர்.
ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங்
2005-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. 2011 டிசம்பரில் ‘ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி. மற்றொருவர், பூங்குன்றன்.
அதாவது இந்தக் காலகட்டத்தில் தான் சசிகலா குடும்பத்தினர் அ.தி.மு.க-வை விட்டு நீக்கப் படுகிறார்கள். அப்போது, ‘சோ’ ராமசாமி இதனுள் சேர்க்கப்​படுகிறார். பூங்குன்றன் போயஸ் கார்டன் ஊழியர். போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரும் கடிதங்​கள், பத்திரிகைச் செய்திகளை ஜெயலலிதாவின் பார்வைக்குக்​கொண்டு செல்பவர். இவருடைய தந்தை பெயர் புலவர் மகாலிங்கம். ‘நமது எம்.ஜி.ஆர்.’ பத்திரிகையில் பணியாற்றியவர். பூங்குன்றனும், சோ ராமசாமியும்தான் ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தனர். நவம்பர் 2012-ல் சோ ராமசாமி இந்த நிறுவனத்தில் இருந்து விலகிவிடுகிறார். அதாவது சசிகலா, மீண்டும் உள்ளே வந்த பிறகு சோ விலகிவிடுகிறார். அதன்பிறகு, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் என்ற இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக ஆகின்றனர்.
இந்த ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தின் சேர்மன் சசிகலா. 2014-ம் ஆண்டு, சேர்மன் சசிகலாவின் முன்னிலையில், இளவரசியை மற்றொரு ‘சேர் பெர்சன்’ என்று அறிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதோடு, இளவரசி எந்த நாளில் சசிகலா முன்னிலையில் ‘சேர் பெர்சன்’ என்று நியமிக்கப்படுகிறாரோ அன்றுதான் ‘ஹாட் வீல்ஸ்’ நிறுவனத்தின் பெயர், ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று மாற்றப்பட்டது. அதுதான் தற்போது வேளச்சேரி ‘ஃபீனிக்ஸ்’ மாலில் உள்ள நவீன வசதி படைத்த தியேட்டர்கள். (இதற்கான ஆதாரம் 7ம் பக்கத்தில்   காட்டப்பட்டு உள்ளது.) இளவரசியின் மகன் விவேக் ஜாஸ் சினிமாவின் சி.இ.ஓ. என காட்டப்பட்டிருக்கிறார்.
சந்தனா எஸ்டேட்ஸ்
1995-ல் சுதபத்துலு பாஸ்கர ராவ், அடப்பல வீர வெங்கடபாஸ்கர ராவ், அடப்பா நரசிம்ம ராவ், சுதபத்துலு வெங்கட ராம ராவ் என்பவர்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி நடத்திய நிறுவனம்தான், ‘சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்.’ அதன்பிறகு இந்த நிறுவனம் அவர்களிடம் இருந்து கைமாறி உள்ளது. ஒரு காலத்தில் போயஸ் தோட்டத்தையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த ராவணன், இந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்துள்ளார். பிறகு, அவர் வெளியேறி உள்ளார். அவர் வெளியேறியதும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி இந்த நிறுவனத்தின் இயக்குநராக உள்ளே வந்துள்ளார். (ஹாட் வீல்ஸ் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது மாதிரியே சோ சேர்க்கப்பட்டு பின்னர் விலகி உள்ளார்.) பிறகு, மீண்டும் ஒருகட்டத்தில், சோ ராமசாமி வெளியேறுகிறார். பூங்குன்றன் இயக்குநர் ஆகிறார். இடைப்பட்ட காலத்தில் சில நாட்கள்  தமிழ்மணி என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். போயஸ் கார்டனில் இருந்து சசிகலா, ராவணன் ஆகியோர் வெளியேற்றப்பட்டபோது இந்த தமிழ்மணி, நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி நடைபெற்ற, ‘மியூஸிக்கல் சேர்’ போட்டியில், கடைசியில் இப்போது கார்த்திகேயன் மற்றும் டாக்டர் வி.எஸ்.சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக அமர்ந்து இருக்கிறார்கள்.
ரெயின்போ ஏர்
ஆகஸ்ட் 1, 2009-ல் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ‘ரெயின்போ ஏர்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன் பங்குதாரர்கள் வி.ஆர்.குலோத்துங்கன், சவுந்தரபாலன், கார்த்திகேயன். இது 38-16, ஜியான் அபார்ட்மென்ட்ஸ், 38, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர் சென்னை- 17 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. (இதே முகவரி 18 நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது) நாம் நேரில் போய்ப் பார்த்தபோது, அங்கு எந்த நிறுவனமும் இல்லை. ஆனால், குலோத்துங்கன் என்பவர் அங்கு வசிக்கிறார். ஒரு பெரிய அபார்ட்மென்டில் உள்ள ஒரு  வீடு அது. குலோத்துங்கனின் செக்யூரிட்டி மட்டும் இருக்கிறார்.
லைஃப் மெட்
கோபாலபுரத்தில் ‘லைஃப் மெட்’ என்ற மருத்துவமனை உள்ளது. இதன் முகவரி, பழைய எண் 32. புதிய எண் 12. கான்ரான் ஸ்மித் சாலை, கோபாலபுரம், சென்னை-86. ஜனவரி 2011-ல் ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குநர்கள் திருநாராயணன் அருண்குமார், ஹேமா வெங்கடேஷ், டாக்டர் கே.எஸ்.சிவக்குமார் ஆகியோர்.
மேவிஸ் சாட்காம்
1998-ம் ஆண்டு மேவிஸ் சாட்காம் நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், பிரபாவதி சிவக்குமார், சசிகலாவின் மற்றொரு அண்ணன் விநோதகனின் மகன் கே.வி.மகாதேவன் ஆகியோர் ஆரம்பத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர். தொடக்கத்தில் இதன் முதலீடு ரூ.21.20 கோடி. அதன்பிறகு, டாக்டர். வெங்கடேஷ் (அ.தி.மு.க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையை தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்) இந்த நிறுவனத்தின் இயக்குநராக சிறிது காலம் இருந்துள்ளார். அதன்பிறகு, டி.டி.வி.தினகரனின் மனைவி அனுராதா தினகரன், மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, அ.தி.மு.க.
எம்.பி-யாக இருந்த பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் சிறிது காலம் இந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு, பூங்குன்றன், பிரபாவதி சிவக்குமார், மனோஜ் பாண்டியன், பழனிவேலு ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களில் பழனிவேலு என்பவர் சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் சகோதரர்.
இந்த நிறுவனத்தின் கீழ்தான், ‘ஜெயா’ தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அவற்றின் குழுமச் சேனல்களையும் இந்த நிறுவனம்தான் ஒளிபரப்புகிறது. மேவிஸ் சாட்காம் என்பது நிறுவனத்தைப் பதிவு செய்வதற்காக கம்பெனி பதிவாளரிடம் கொடுக்கப்பட்ட பெயர்.
கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்
2002-ம் ஆண்டு, ராஜ் ஹெச்.ஈஸ்வரன், ஹரி ஈஸ்வரன் ஆகியோர் தொடங்கிய நிறுவனம் இந்த ‘கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்.’ இதன் முதலீடு தொடக்கத்தில் 5 லட்ச ரூபாய்.
பத்திரிகை, செய்தித்தாள், வார இதழ், புத்தகம் அல்லது இதர வடிவிலான ஊடகம் தொடங்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2004-ல் இந்த நிறுவனத்துக்குப் புதிதாக வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன், அவருடைய சகோதரர் ஜெகதீசன், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இயக்குநர்களாக பொறுப்பேற்று உள்ளனர். இதையடுத்து, 29 மார்ச் 2008-ல் வைகுண்டராஜனும், நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ராஜ் ஹெச்.ஈஸ்வரனும் ராஜினாமா செய்துள்ளனர். அதன்பிறகு வைகுண்டராஜனின் சகோதரர் ஜெகதீசன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். அதன்பிறகு, பூங்குன்றன் இந்த நிறுவனத்துக்கு இயக்குநராகி உள்ளார். 2012-ம் வருடம், கார்த்திகேயன் மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகி இன்னும் தொடர்கின்றனர்.
மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்
எம்.நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனும், டாக்டர் சிவக்குமாரும் சேர்ந்து தொடங்கிய நிறுவனம்தான் மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ் நிறுவனம். 2008, பிப்ரவரி மாதம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளது. பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைத் தயாரிக்கும் நிறுவனம்தான் இது.
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ்
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் இது சேர்க்கப்படவில்லை. எப்படியோ அப்போது இந்த நிறுவனம் தப்பி உள்ளது. இதன் ஆரம்ப முதலீடு 50 லட்ச ரூபாய். நிறுவனத்தின் தொழில் நோக்கம், அசையும் அசையாச் சொத்துக்களின் பேரில் நிதி வழங்குவது, கடன் வழங்குவது. அதன்பிறகு, 2002-ம் ஆண்டு, தங்கம், முத்து, பவளம், வைரம் வைடூரியம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு கடன் வழங்கலாம் என்று தொழில் நோக்கம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பிறகு, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 2001-ல், இந்த நிறுவனத்தில் இருந்து விலகி, இரண்டு பேர் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் டாக்டர் சிவக்குமார். மற்றொருவர் அனந்தராமன். 2008-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் முதலீடு 6 கோடியே ஆறரை லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள், கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார் மற்றும் பூங்குன்றன் ஆகியோர். இந்த நிறுவனத்தின் சார்பில் ஜெயலலிதாவுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்து உள்ளனர்.
மேலும் சில நிறுவனங்கள்!
1. காட்டேஜ் ஃபீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்
இதில் டாக்டர் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் இந்த நிறுவனத்தில் தொடர்பு உடையவர்களாக உள்ளார்கள்.
15.06.2012-ம் தேதியில் இருந்து இவர்களுக்கு இந்த நிறுவனத்துடன் தொடர்பு உள்ளது.
2. வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்
வைகுண்டராஜன் சுப்பிரமணியன், சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  23.04.2012 முதல் தொடர்பு உள்ளது.
3. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு  15.06.2012 முதல் தொடர்பு உள்ளது.
4. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார் பெயர் 14.06.2004 தேதியில் இருந்தும் கார்த்திகேயன் பெயர் 23.01.2012-ம் தேதியில் இருந்தும் இருக்கிறது.
5. அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரது பெயர்களும் 15.06.2012 முதல் உள்ளன.
6. ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்
வெங்கடாச்சலம், சங்கர்ராமன் ஆகிய இருவரும் 02.12.2013-ம் தேதியில் இருந்தும் கே.எஸ்.சிவக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் 15.06.2012-ம் தேதியில் இருந்தும் தொடர்பில் உள்ளனர்.
விசாரணை வளையம்?
சில மாதங்களுக்கு முன் டெல்லியில் வைத்து, சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்தபோது, ‘‘சொத்துக்குவிப்பு வழக்கு என்பது 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையிலான முறைகேடுகளுக்காக மட்டுமே போடப்பட்டது. இந்தக் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. அது சம்பந்தமாகத் தகவல்களைத் திரட்டி வருகிறேன். புது வழக்கை தாக்கல் செய்வேன்” என்று கூறினார். அப்போது முதலே அவர் தகவலைத் திரட்ட ஆரம்பித்து மத்திய அரசிடம் அந்த ஆவணங்களை ஒப்படைத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கப்பிரிவு போன்ற துறைகள் கண்கொத்திப் பாம்பாக இதனைக் கவனிக்க ஆரம்பித்து உள்ளன. தேர்தல் அஸ்திரங்களில் இதுவும் ஒன்றாக மாறலாம்.
– ஜூ.வி. டீம் 

எந்தெந்த நிறுவனங்கள்?
18 ஆண்டு தலைவலிக்குப் பிறகு மீண்டு வந்து, (உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வராவிட்டாலும்!) மீண்டும் பிரச்னை தரக்கூடிய நிறுவனங்களாக எழுந்து நிற்பவற்றில் சில…
1.  ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட்
2.  சந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட்
3. ரெயின்போ ஏர் நிறுவனம்
4.  லைஃப்மெட்
5.  மேவிஸ் சாட்காம்
6.  கியூரியோ ஆட்டோ மார்க்ஸ்
7.  மிடாஸ் கோல்டன் ப்ரூவரிஸ்
8. ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ்
9.  காட்டேஜ் பீல்டு ரிஸார்ட்ஸ் லிமிடெட்
10.  வேர்ல்ட் ராக் பிரைவேட் லிமிடெட்
11.  சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
12. மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ்
பிரைவேட் லிமிடெட்
13.  அவிரி ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்
14.  ஃபேன்ஸி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்
15.  ஜாஸ் சினிமாஸ்
– இவற்றுக்குக் கீழே கிளை நிறுவனங்களாகப் பல உள்ளன.
கடன் பெற்றுள்ள நிறுவனங்கள்!
ஸ்ரீஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு நிறுவனம், ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். இதில், ஜெயா பிரின்டர்ஸ் என்ற நிறுவனம் 76 லட்சமும், ஜெ. ஃபார்ம் ஹவுஸ் என்ற நிறுவனம் 58 லட்சமும், மகாலெட்சுமி என்ற நிறுவனமும் மகாலெட்சுமி திருமண மண்டபமும் 28 லட்சமும் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எல்லாம் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் என்று நிரூபிக்கப்பட்டவை. அதாவது, அவர்களுடைய நிறுவனங்கள் அவர்களுடைய மற்ற நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று, அவர்களுக்கே கடன் கொடுக்கும் தொழில் செய்துவருகின்றன. அது எப்படி என்பதற்கு ஆதாரமாக ஜெயா ஃபைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளவர்களையும் முதலீடு செய்தவர்களையும் பார்த்தால் புரியும்.
1.ஜெயலலிதா, 2.வி.கே.சசிகலா, 3.இளவரசி, 4.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 5.ஃபேன்சி டிரான்ஸ்போர்ட்ஸ், 6.க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், 7.ஜெயா பிரின்டர்ஸ், 8.ஜெயா ரியல் எஸ்டேட்ஸ், 9.லெக்ஸ் ப்ராப்பர்டீஸ் அண்டு டெவலப்பர்ஸ், 10.ஸ்ரீஹரி சந்தானா ரியல் எஸ்டேட்ஸ், 11.ராயல் வேலி ஃப்ளிடெக் எக்ஸ்போர்ட்ஸ், 12.அவிக்னா அக்ரோ, 13.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 14.அவிரி ப்ராப்பர்ட்டிஸ், 15.பரணி ரிசார்ட்ஸ், 16.காட்டேஜ் ஃபீல்ட் ரிசார்ட்ஸ், 17.கோவிந்தராஜன், 18.ஹாட் வீல்ஸ் இன்ஜினீயரிங், 19.ஜெயா இன்வெஸ்ட்மென்ட் ஏஜென்சி, 20.வி.ஆர்.குலோத்துங்கன்
சத்யம் அதிபர் மீது நில அபகரிப்புப் புகார்
சென்னை, நுங்கம்பாக்கம், காசி கார்டன், குமரப்பா தெருவில், அடிபள்ளி கந்தசாமி செட்டி அண்டு செஞ்சு வெங்கடசுப்பு குருவஜம்மா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் பொருளாளர் எதிஸ் குப்தா.
இவர் 2013-ம் ஆண்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், தங்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான 16  கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு இன்றைய தேதியில் பல கோடி ரூபாய். ஆனால், அதை தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் சம்பந்தியான உமா மகேஸ்வரி எங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையைக் கொடுத்து அபகரித்துக்கொண்டார். அப்படி அபகரித்துக்கொண்ட நிலத்தில், 2.5 கிரவுண்டை சூசய் ஆனந்த் ரெட்டி என்பவருக்கு விற்றுவிட்டார். அதை சூசய் ஆனந்த் ரெட்டி அவருடைய உறவினரான ஸ்வரூப் ரெட்டிக்கு விற்றுவிட்டார். ஸ்வரூப் ரெட்டி என்பவர் சத்யம் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்.
இப்போது, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டவும் செய்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, உமா மகேஸ்வரியும் சூசய் ஆனந்த் ரெட்டியும் கைதுசெய்யப்பட்டனர். சத்யம் சினிமாஸ் இயக்குநர் ஸ்வரூப் ரெட்டி கைதுசெய்யப்படவில்லை. ஆனால், செப்டம்பர் 2013 – அன்று அவருடைய பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, அக்டோபர் 23, 2015

மந்திரி தந்திரி – 27 !விகடன் டீம் எம்.எஸ்.எம்.ஆனந்தன்


முதலில் ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவு…
எம்.ஜி.ஆர் தலைமையில் அ.தி.மு.க ஆட்சி நடந்துகொண்டிருந்த 80-களின் இறுதி. திருப்பூரில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அ.தி.மு.க-வினருக்கும் இடையே மோதல் வெடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்து இளைஞர்களும் கோதாவில் குதித்தனர். அதில் ஒருவர், பொதுக்கூட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க-வின் கொடிக் கம்பங்களை ஆக்ரோஷமாக வெட்டி வீழ்த்தினார். பிறகு அ.தி.மு.க-வினர் புகார் அளிக்க, அந்த வாலிபர் மீது வழக்கு பாய்ந்தது.
இப்போது ஒரு சமீப நிகழ்வு…
இப்போதைய அ.தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஓர் அமைச்சர் மீது எகிடுதகிடாகப் புகார் தெரிவித்தார் ஒரு பெண். அந்த அமைச்சர் தன்னிடம் இருந்த பணத்தையும் மோசடி செய்ததோடு, நம்பிக்கைத் துரோகமும் செய்துவிட்டதாக ஊடகங்களில் மன்றாடினார். முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட்டு அமைச்சருக்கு எதிராகக் குரல்கொடுத்தார். ம்ஹும்… எந்தப் பலனும் இல்லை. ‘அமைச்சர் பந்தா’வுடன் வலம்வந்துகொண்டிருக்கிறார் அந்தப் பெண்ணால் குற்றம்சாட்டப்பட்டவர்.
வாலிபராக கம்யூனிஸ்ட் கலகம்செய்து அ.தி.மு.க கொடிக்கம்பத்தை வெட்டியவரும், இப்போது பரபரப் புகார்களுக்குப் பின்னரும் அ.தி.மு.க-வில் அமைச்சராக வலம்வருபவரும் ஒருவரே… அவர்தான் வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்!
அரசியலில் பதவி கிடைப்பதும் அதைத் தக்க வைத்துக்கொள்வதும் பெரும் சூதாட்டத்துக்கு நிகரானது. ஆனால், ஆனந்தன் ஏதேதோ காய் நகர்த்தி அந்தச் சூதாட்டத்தில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். அது எப்படி?
காம்ரேட் டு கழகம்!
திருப்பூர், முருங்கப்பாளையம்தான் ஆனந்தனின் பூர்விகம். பாரம்பர்ய கம்யூனிஸ்ட் குடும்பம். சித்தாந்தம், சோஷலிசம் பேசும் குடும்பத்தில் வளர்ந்த ஆனந்தனும் ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்க’த்தில் உறுப்பினராக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கப் பிடிக்கவில்லை. ஏதேதோ பல வேலைக்குப் பிறகு லாரி ஓட்டுநர் ஆனார். கோவை டு குஜராத் ரூட்டில் சரக்கு வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த கம்யூனிஸ்ட் கலகம் எல்லாம் அரங்கேறியது; வழக்கும் பாய்ந்தது. அதோடு வேலையிலும் ஒரு பெரும் சிக்கல். அனைத்தையும் சமாளிக்க ஒரே உபாயமாக, ‘ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டால் வழக்கு பிரச்னையில் இருந்து தப்பிவிடலாம்’ எனத் தீர்மானித்து ‘தோழர்’ அவதாரம் கலைத்து ‘ரத்தத்தின் ரத்தம்’ ஆனார்! 
சிவப்புச் சட்டை போட்டு ‘ஜிந்தாபாத்’ முழக்கம் போட்டவர், அ.தி.மு.க-வுக்குத் தாவிய பிறகு நெற்றியில் குங்குமப்பொட்டு, மணிக்கட்டில் காவிக்கயிறு என பக்திமான் ஆனார். கட்சியிலேயே ஐக்கியமாகிவிட்டதால் அ.தி.மு.க கொடிக் கம்பங்களை வெட்டி வீழ்த்திய வழக்கும் வாபஸ் ஆனது.
ஆனந்தன் கட்சியில் சேர்ந்த சமயம் திருப்பூர் பகுதி அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது ‘திருப்பூர்’ சிவசாமி. அதனால் சிவசாமியின் நம்பிக்கைக்கு உரியவராகச் செயல்பட்டார் ஆனந்தன். 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ-வாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசாமி,  தன்னைத் தாண்டி தொகுதிக்குள் யாருக்கும் செல்வாக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆனந்தனை வளர்த்தெடுத்தார். நகரச் செயலாளர் பதவி கிடைக்கச் செய்தார். தன் நிழலிலேயே ஆனந்தனுக்கு அரசியல் பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். ஆனால், திடீரென சிவசாமி மீது அ.தி.மு.க தலைமைக்கு அதிருப்தி ஏற்பட, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனந்தன், துரிதமாக வியூகம் வகுத்தார். சிவசாமி வகித்த ‘மாவட்டச் செயலாளர்’ பதவிக்கு குறிவைத்தவர், சிவசாமியிடம் கற்றுக்கொண்ட வித்தையை அவர் மீதே பிரயோகித்தார். ஆங்காங்கு காய் நகர்த்தி, சிவசாமியை வீழ்த்தி, மாவட்டச் செயலாளர் ஆனார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்றார். மீண்டும் சில காய் நகர்த்தல்கள்.
சில மாதங்களிலேயே அமைச்சரவையில் இடம்பிடித்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆனார். தன் சகோதரி மகனின் காதல் விவகாரம், உட்கட்சிப் பூசல், ஒரு பெண் சுமத்திய ‘விவகாரமான’ புகார் எல்லாம் சேர்ந்து, ஆனந்தனின் அமைச்சர் பதவியைப் பறித்தன; தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவியும் பறிபோகும் என்ற நிலை. மீண்டும் வியூகங்கள் வகுத்தார். மா.செ பதவியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, ‘பவர் சென்டர்’களைப் பிடித்து மூன்றே மாதத்தில் மீண்டும் அமைச்சர் ஆனார் ஆனந்தன். இந்த அளவுக்கு ஆர்வம், சிரத்தையை அமைச்சர் துறை செயல்பாடுகளில் காட்டியிருக்கிறாரா? 
துறையில் சாதித்தது என்ன?
ஒருகாலத்தில் சென்னை மத்திய கைலாஸம் வரை 5,000 ஹெக்டேர் பரப்பளவுக்குப் பரந்து விரிந்திருந்தது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். ஆனால், இப்போது பெருங்குடிக்கு அருகில் வெறும் 500 ஹெக்டேர் பரப்பளவுக்குச் சுருங்கிவிட்டது. அரசின் அலட்சியம், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதம், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் சதுப்பு நிலப் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிகொடுத்துக்கொண்டே இருக்கிறோம். அரசே இங்கே குப்பைகளைக் கொட்டி சதுப்பு நிலத்தைச் சமாதி ஆக்குவதும் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், குப்பைகளைக் கொட்டுவது நின்றபாடு இல்லை. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இன்றைக்கும் பறவைகளின் சொர்க்கபுரி. ஆனால், அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. ‘ஒருகாலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 80 சதுர கிலோமீட்டர் நீளமும், 3 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக ஒருகாலத்தில் இருந்தது. இங்கே ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்தன. இந்த நிலத்தை பலர் ஆக்கிரமித்துவிட்டதால் சதுப்பு நிலத்தின் அளவு குறைந்துவிட்டது’ என வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் சொன்னார். அதோடு, ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முதலில் எவ்வளவு சுற்றளவு கொண்டதாக இருந்தது, இப்போது நிலத்தின் அளவு எவ்வளவு, நிலத்தை யார் எல்லாம் ஆக்கிரமித்திருக்கிறார்கள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, இந்த நிலத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கொட்டுகிறதா?’ என, சரமாரியாகப் பல கேள்விகளைக் கேட்டு, அதற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார். வனத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட பதில், ‘பள்ளிக்கரணையில் 2 ஆயிரத்து 380 ஏக்கர் சதுப்பு நிலம் இருக்கிறது. இதில், சுமார் 25 ஏக்கர் நிலத்தை 682 பேர் ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்திருக்கிறோம். இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பலர் பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள்’ என நீண்டது பதில். குப்பைகள் கொட்டுவது தொடர்பான கேள்விக்கு ‘மாநகராட்சிதான் பதில் அளிக்க வேண்டும்’ எனச் சொல்லி மழுப்பியது. அந்தப் பதிலில் அதிருப்தியான நீதிபதி, ‘நான் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையாகப் பதில் அளிக்கவில்லை. நிலம் தொடர்பான முழுமையான விவரங்கள் அறிக்கையில் இல்லை’ என்றார். அதற்கு எல்லாம் கவலைப்படவில்லை வனத் துறை.
சூழல்… சுழல்..!
ஒருபக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் ‘சூழல் சுற்றுலா’வை ஊக்குவிக்கப்போவதாகத் திட்டமிடும் அமைச்சர் ஆனந்தனின் அக்கறையை என்னவென மெச்ச?! இயற்கையைக் கண்டுகளிக்க பல்வேறு வனப் பகுதிகளைத் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. தொட்டபெட்டா போன்ற சிகரங்களும் கடலோரச் சமவெளிகள் சிலவும் வனங்களில்தான் அமைந்திருக்கின்றன. சரணாலயங்கள், தேசியப் பூங்காக்கள், முத்துப்பேட்டை, பிச்சாவரம் போன்ற சதுப்பு நிலப் பகுதிகள் மற்றும் கடலோர மணற்குன்றுகள் உள்ளிட்ட வனப் பகுதிகளை, இயற்கையின் அடிப்படையில் ‘சூழல் சுற்றுலா’வாக மாற்றுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால், கண்டறிவதோடு நிறுத்திக்கொண்டார்கள். அவற்றை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், 25 சூழல் சுற்றுலாத் தலங்கள் தேர்வுசெய்யப்பட்டன. ஆனால், மேற்கொண்டு பணிகள் எதுவும் முடுக்கிவிடப்பட்டதாகத் தெரியவில்லை!
அல்லாடும் வன உயிரினங்கள்!
நகரமயமாதல், மக்கள்தொகைப் பெருக்கம்… போன்ற காரணங்களால் வன உயிரினங்களின் வாழ்விடங்கள் சுருங்கிவருகின்றன. இதனால் அந்த இடங்களைவிட்டு உயிரினங்கள் மனித வாழ்விடங்களுக்கு இடம்பெயர்கின்றன. பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுவதோடு, மனித உயிர் இழப்புகளும் நேர்கின்றன. இப்படி எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் உரிய தடுப்புகள் அமைத்தல், தீவன வளங்களைப் பெருக்குதல், வனங்களில் குடிநீர் வசதி செய்து தருதல் அவசியம். ஆனால், அதைச் செய்யாததால் உயிர் இழப்புகள் தொடர்கதையாக இருக்கின்றன. வன எல்லைகளை ஒட்டி சூரிய மின்வேலி மற்றும் யானை புக முடியாத அகழி போன்ற தடுப்புகள் அமைக்கும் திட்டம் போன்றவை இன்னும் முழுமையடையாமல்தான் இருக்கின்றன. யானைகள் தங்களது உணவு மற்றும் வாழ்வாதாரத் தேவைகளைத் தேடி இடப்பெயர்ச்சி மேற்கொள்ள ஏதுவாக, அவற்றுக்கு உரிய 13 வழித்தடங்களை வன உயிரின நிபுணர் குழு கண்டறிந்திருக்கிறது. அதோடு சரி. அவற்றை வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் துரிதப்படுத்தப்படவில்லை!
களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை மற்றும் சத்தியமங்கலம் போன்ற நான்கு புலிகள் காப்பகங்கள், ஐந்து தேசியப் பூங்காக்கள், 15 வன உயிரினச் சரணாலயங்கள், 14 பறவைகள் சரணாலயங்கள்… என 22,877 சதுர கிலோமீட்டர் தூரத்துக்குப் பரந்து விரிந்திருக்கிறது தமிழ்நாட்டின் வனப் பரப்பு. தமிழ்நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் இது 17.59 சதவிகிதம். சந்தனமரம், யானை தந்தம், செம்மரக் கடத்தல்கள் தொடங்கி, வனவிலங்குகளை வேட்டையாடுதல் வரை வனத் துறை கொள்ளை பற்றிய செய்திகள், தொடர்ந்து வட்டமடிக்கின்றன. ஆனால், இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரிய அளவில் இல்லை. ஆந்திர வனப் பகுதிக்குள் மட்டும் அல்ல… தமிழ்நாட்டின் சேலம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளிலும் செம்மரக் கடத்தல் நடக்கின்றன என்பது மறுக்க முடியாத நிகழ்வுகள்!
பட்டர்ஃப்ளை பார்க் நாடகம்!
திருச்சியின் முக்கியமான சுற்றுலாத் தலம் முக்கொம்பு. இதைத் தவிர சுற்றுலாத் தலம் என சொல்லிக்கொள்ள வேறு எதுவுமே திருச்சி பகுதியில் இல்லை. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றபோது, ‘சினிமா தியேட்டருடன்கூடிய வண்ணத்துப்பூச்சி பூங்கா ஸ்ரீரங்கம் தொகுதியில் 12 கோடி ரூபாயில் அமைக்கப்படும்’ என அறிவித்தார். ஸ்ரீரங்கம் – மேலூர் காவிரி ஆற்றின் கரையின் மேல் அணைக்கட்டுக் காப்பு வனப் பகுதியில் வனத் துறைக்குச் சொந்தமான 25 ஏக்கர் பரப்பில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க  அடிக்கல்லும் நாட்டினார் ஜெயலலிதா. அந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இரண்டு ஏக்கரில் நட்சத்திர வனம், செயற்கைக் குளங்கள், நீர்வீழ்ச்சிகள், மூங்கில் குடில்கள், மலர்வனம், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள திரையரங்கம், செயற்கைப் புல்வெளிகள், குழந்தைகள் விளையாட தனி இடம், மலைவாழ் மக்கள் வசிக்கும் மாதிரி குடிசைகள், செயற்கை நீரூற்று, பார்வையாளர்கள் சுற்றிவர நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபாதை, நீர்த் தாவரங்கள் கொண்ட குட்டைகள், சிறு மரப் பாலங்கள், வண்ணத்துப்பூச்சிகளின் மாதிரி உருவங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டன. அதோடு வண்ணத்துப் பூச்சிகள் வளர்ச்சிக்கு உதவும் தாவரங்களும் பல இடங்களில் இருந்து இந்தப் பூங்காவில் நடப்பட்டன.
அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனத்தைப் பாதுகாக்கும் வகையில், ஆசியாவிலேயே மிகப் பெரிய வண்ணத்துப்பூச்சிப் பூங்காவாக உருவாக்கும் முனைப்பில் மூன்று ஆண்டுகளாகப் பணிகள் நடந்துவந்தன. அதிகாரிகள் ஆய்வு, அமைச்சர்கள் விசிட் எனத் தடபுடல் மேற்பார்வையும் அரங்கேறியது. ஆனால், பூங்கா திறந்தபாடு இல்லை. ‘அடுத்த மாதம் திறக்கப்படும்’ என்பதையே ஆறு மாதங்களுக்கும் மேலாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இடையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவி பறிப்பு, சிறை அடைப்பு,  மேல் முறையீடு வழக்கு, விடுதலை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்… என, பரபரப்பு களைகட்டியதில், ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தை மறந்தேவிட்டார். ‘நல்லதாப்போச்சு’ என வனத் துறை அதிகாரிகளும் ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவை மறந்துவிட்டார்கள்.  பூங்கா அமைக்கச் செலவான மக்களின் கோடானுகோடி ரூபாய் வரிப் பணமும் பாழ்!
சரி, இதை எல்லாம் வனத் துறை அமைச்சர் ஆனந்தன் கண்டுகொள்ள மாட்டாரா? அவருக்குத்தான் ‘அம்மா’வைச் சுற்றி பட்டாம்பூச்சியாகப் படபடக்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதில், பட்டாம்பூச்சிப் பூங்காவாது… தோட்டமாவது!

‘அம்மா’வுக்கும் மேலே!
அ.தி.மு.க-வில் அனைவருக்கும் ‘அம்மா’தான் தெய்வம். ஆனால், ஆனந்தனுக்கு அந்தத் தெய்வத்தைவிடவும் அதிமுக்கிய மானவர்… லதா. மாவட்ட மகளிர் அணி பொறுப்பில் இருக்கும் லதாதான், ஆனந்தனுக்கு மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ ஸீட், அமைச்சர்… என பதவிகள் கிடைக்க காரணமாக இருந்தவராம். மன்னார்குடியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளராக ஆதிக்கம் செலுத்திவந்த ராவணனை, ஆனந்தனுக்கு அறிமுகப்படுத்திவைத்தவரும் லதாதானாம். ஆனந்தன் எல்லா முடிவுகளையும் லதாவிடம் கேட்டுத்தான் எடுப்பார். மன்னார்குடி ஆட்களை கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கிய சமயம், லதா மீதும் நடவடிக்கை பாய்ந்தது. அப்போதும்கூட அவரோடு ரகசிய நட்பு பாராட்டினாராம் ஆனந்தன்! 

காதல்… மோதல்… கலாட்டா!
தன் அக்கா மகன் காதல் விவகாரத்தை ஆனந்தன் கையாண்ட விதம், அவருக்கும் பெரும் சிக்கலை உண்டாக்கியது. மர நிறுவனம் ஒன்றை நடத்திவந்த  ஆனந்தனின் சகோதரி மகன் கோகுல், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். ‘வேற்று மதப் பெண்ணை எப்படிக் காதலிக்கலாம்…’ என கோகுலை ஆனந்தன் கண்டிக்க, காதல் ஜோடி தப்பி ஓட, ஆனந்தன் தரப்பினர் அவர்களை இடைவிடாமல் துரத்த, மிரட்சியில் விஷம் குடித்தனர் காதலர்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில், கோகுலை மட்டும் அழைத்துப்போனது ஆனந்தன் தரப்பு. காதல் ஜோடி கேரளாவில் திருமணம் செய்துகொண்ட ஆதாரங்களை அதட்டி மிரட்டிப் பிடுங்கிக்கொண்டார்களாம். பெண் தரப்பினர் போலீஸிடம் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இடையில் கோகுலுக்கு ரகசியமாகத்  திருமணத்தை நடத்தி முடித்ததாகத் தகவல் தந்தியடிக்க, உயர் நீதிமன்றப் படியேறியது வழக்கு. ‘ஆனந்தனின் அமைச்சர் பதவியைப் பறிக்க இந்த காதல் பஞ்சாயத்தும் ஒரு காரணம்’ என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்! 

பெண் பாவம் பொல்லாதது..!
ஜெயலலிதா முன்னிலையில் மாற்றுக் கட்சியினரை அ.தி.மு.க-வில் சேர்த்தார் ஆனந்தன். அந்த நிகழ்வில், ஒரு பெண்ணுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. ஜெயலலிதாவின் வலதுப் பக்கத்தில் அமைச்சர் ஆனந்தனும், இடதுப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். ஆனால், அந்தப் பெண்தான் பின்னர் ஆனந்தன் மீது அதிரடிப் புகார்கள் கிளப்பினார். அவர்… ‘திருப்பூர்’ ஜெயமணி.
கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழும் ஜெயமணி, திருப்பூரில் ‘பனியன்’ நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். ஜெயலலிதா படம்போட்ட பனியன் ஆர்டர்களை ஜெயமணிக்கு அமைச்சர் கொடுத்தார். அப்படியே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் நடந்தது ஜெயமணி வார்த்தைகளிலேயே… ‘சென்னையில் கார்மென்ட் ஷோரூம் திறக்க, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒதுக்கித்தருவதாகச் சொல்லி, ஒரு கோடி ரூபாயை என்னிடம் இருந்து வாங்கினார். ஆனால், பதிலுக்கு எதையும் அவர் செய்யவில்லை. இந்த நிலையில், ‘நம்மைப் பற்றி கார்டனுக்கு நிறையப் புகார்கள் போயிருக்கின்றன. அவற்றை ஒன்றும் இல்லாமல் ஆக்கவேண்டும் என்றால், கார்டனில் ஒருவரை நீ அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்’ என்றார். நான் அதற்கு மறுக்கவும், என்னை மிரட்டத் தொடங்கினார். ஒருகட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற என்னைக் காப்பாற்றி, திருப்பூருக்கு அனுப்பிவைத்தார். ‘என் பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்’ எனக் கேட்டேன். அதையும் தரவில்லை. அவர் என்னவெல்லாம் செய்தார், செய்துகொண்டிருக்கிறார் என்பதற்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை வைத்து நான் என்ன செய்வேன் என அவருக்குத் தெரியாது’ எனப் பொருமுகிறார் ஜெயமணி.
ஜெயமணி விவகாரம் பரபரப்பான நிலையில் சிறிது காலம் கடந்து அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார் ஆனந்தன். ஆனால், அடுத்த மூன்றே மாதங்களில் ஆனந்தன் மீண்டும் அமைச்சரானார். ஆனந்தன் மீண்டும் அமைச்சர் ஆகவிருக்கிறார் எனச் செய்தி பரவவும், சென்னைக்கு வந்த ஜெயமணி போயஸ் கார்டன் ஏரியாவில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரையும் அவரது குடும்பத்தினரையும் குண்டுகட்டாகத் தூக்கி காரில் ஏற்றி, அங்கு இருந்து அப்புறப்படுத்தியது போலீஸ்!

எதிர்த்தால்…
தன்னை வளர்த்துவிட்ட திருப்பூர் சிவசாமியை ஓரங்கட்டியதோடு, மீண்டும் அவர் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் ஆனந்தன் ஏக உஷார். மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து சிவசாமி நீக்கப்பட்ட பிறகு, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விரட்டியடித்து தன் இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டார். சிவசாமி மட்டும் அல்ல வேறு யாருமே தனக்குக் கீழே முளைத்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இத்தனைக்கும் ஒவ்வொரு மாதமும் ஆனந்தன் மீது நூற்றுக்கணக்கில் புகார்கள் குவியுமாம். ஆனாலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது. தன் மீது அதிகப் புகார்களைத் தட்டிவிட்ட திருப்பூர் மாவட்ட வழக்குரைஞர் அணி இணைச் செயலாளர் மணிவண்ணனை, கட்சியைவிட்டே தனியாகக் கட்டம் கட்டிவிட்டார் ஆனந்தன். இதனால் உள்ளூரில் ஆனந்தனுக்கு எதிராக யாரும் முண்டா தட்டுவது இல்லை. மாவட்டச் செயலாளர் தேர்தலில் ஆனந்தனை எதிர்த்து மனு செய்தவர்கள், இரண்டே பேர் என்பது அதற்கு ஓர் உதாரணம்!

உறவுகளுக்கே பதவிகள்!
மனைவி லட்சுமிக்கு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் இயக்குநர் பதவி, 23 வயதே ஆன அக்கா மகன் கோகுலுக்கு, ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் தொடக்க வேளாண் விற்பனை சங்கத் தலைவர் பதவி, அமைச்சரின் உறவினரான தி.மு.க கிளைச் செயலாளர் மனைவி வசந்திக்கு திருப்பூர் கூட்டுறவு வசதி சங்கத் தலைவர் பதவி, அவரது மகன் பார்த்திபனுக்கு உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் பதவி என ஆனந்தனின் உறவினர்களுக்கே ஒட்டுமொத்த கோட்டாவும் ஒதுக்கப்படுகிறது எனப் பொருமுகிறார்கள் ர.ர-க்கள்! 

திருப்பூரில் மல்லுக்கட்டு!
திருப்பூரில் ஆனந்தனுக்குக் கடும்போட்டி கொடுப்பவர் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி. மாநகராட்சியில் தன் அதிகாரத்தைப் பாய்ச்ச, துணை மேயராக தன் ஆதரவாளர் குணசேகரனைக் கொண்டுவந்தார் ஆனந்தன். மாநகராட்சியில் தலையிட முயன்ற ஆனந்தனை நேரடியாக எதிர்த்தார் விசாலாட்சி. இதனால் இருவருக்கும் இடையே  தொடர் முஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடிட்டல் மோதல்!