வெள்ளி, ஆகஸ்ட் 07, 2015

மந்திரி தந்திரி – 14


அந்த ஆட்டோ சென்று நின்ற இடத்தில் கட்சிக்கொடி தோரணங்கள், மேடை, மைக்செட்… என அ.தி.மு.க பொதுக்கூட்டம் களைகட்டியிருந்தது. வட்டச் செயலாளர் தொடங்கி மாவட்டம் வரை பேசி முடித்த பிறகு, மைக் முன்பாக நாற்காலி ஒன்றைப் போட்டார்கள். அதில் அந்தச் சிறுமியை நிறுத்தினார்கள். மைக்கை தன் உயரத்துக்குச் சரிசெய்துகொண்ட அந்தச் சிறுமி, அதன் பிறகு பேசியது பக்கா அரசியல். அதிலும் தன் பேச்சில்
தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கருணாநிதியைச் சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்தஅந்தச் சிறுமிக்கு வயது 15. எங்கு தி.மு.க பொதுக்கூட்டம் நடக்கிறதோ, அங்கு மறுநாள் அந்தச் சிறுமியை வைத்துப் பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தது அ.தி.மு.க. எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து, அதை ராகம் போட்டு முழங்கி, ரத்தத்தின் ரத்தங்களை உற்சாகத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. 1970-களில் மதுரை சுற்றுவட்டாரத்தில் அ.தி.மு.க மேடைகளில் பொறிபறக்க முழங்கிய அந்தச் சிறுமிதான், இன்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி!
மதுரை சூறாவளி!
வளர்மதிக்குப் பூர்வீகம், மதுரை அச்சம்பத்து. பிறந்து, வளர்ந்து படித்தது எல்லாம் மதுரையில். தி.மு.க உறுப்பினராக இருந்த வளர்மதியின் அப்பா, எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அப்போது பள்ளி மாணவியான அவரது மகள் வளர்மதி, பேச்சுப் போட்டிகளில் பரிசுகளைக் குவித்துக் கொண்டிருந்தாள். அவர், மகளின் திறமையை கட்சி மேடையில் காட்சியாக்கினார். அரசியல் மேடைகளில் ஆரவார வரவேற்பு. 10-ம் வகுப்புக்குப் பிறகு வளர்மதி படிக்கவில்லை.
கட்சி தொடங்கிய பிறகு, 1974-ம் ஆண்டு சென்னை திருவான்மியூரில் அ.தி.மு.க-வின் மாநாட்டை நடத்தினார் எம்.ஜி.ஆர். அந்த மாநாட்டில் எம்.ஜி.ஆர் முன்பு முழங்கினார் வளர்மதி. இறுதியாக பேசிய எம்.ஜி.ஆர்., ‘மதுரை வளர்மதி, திருப்பூர் மணிமாறன் ஆகியோரின் பேச்சுக்கள் என்னை ரொம்பவே கவர்ந்தன. இவர்களை கழகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். அவரது அந்த உத்தரவு, உடனே அமலுக்கு வந்தது. அ.தி.மு.க பொதுக்கூட்டங்களில் பேசும் வாய்ப்பு வளர்மதிக்குக் குவிந்தது. தமிழ்நாடு முழுக்க அ.தி.மு.க மேடைகளில் அனல் கிளப்பினார் வளர்மதி. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கோலம் போடும் அளவுக்கு ஒருகட்டத்தில் உயர்ந்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த வளர்மதியை, சென்னை அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளான கு.க.செல்வம், ‘மயிலை’ ஜெகன், ‘தி.நகர்’ சாமிநாதன் ஆகியோர் கட்சியில் அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அழைத்துச் சென்றனர். வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வளர்மதி, அடுத்தடுத்து க.ராசாராம், ஆர்.எம்.வீரப்பன் என அப்போதைய அ.தி.மு.க ஜாம்பவான்களின் ‘குட்புக்’கில் இடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆர்.எம்.வீரப்பனின் தீவிர ஆதரவாளராக மாறி, அவரைத் தனது அரசியல் குருவாகவே ஏற்றுக்கொண்டார். கட்சிக்குள் விறுவிறு வளர்ச்சி இருந்தாலும், ‘நட்சத்திர மேடைப் பேச்சாளர்’ என்ற அந்தஸ்தைத் தாண்டி ‘மக்கள் பிரதிநிதி’ என அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை வளர்மதியால். காரணம்… அவரது இளம் வயது. அதனாலேயே சீனியர்களைத் தாண்டி அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
எம்.ஷி.ஆருக்குத் தெரியாமலேயே எம்.எல்.ஏ.!
உடல்நலக் குறைவு காரணமாக எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவச் சிகிச்சையில் இருந்த 1984-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆச்சர்ய அதிசயமாக, தொகுதிக்கு மட்டும் அல்லாமல், சென்னைக்கே சம்பந்தம் இல்லாத வளர்மதி, மயிலாப்பூர் அ.தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்டார். எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்ததால், வேட்பாளர்கள் தேர்வை ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட சீனியர்களே பார்த்துக்கொண்டனர். அதனால் 27 வயதிலேயே பேச்சாளர் வளர்மதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழ்நாட்டிலேயே இல்லாமல், எம்.ஜி.ஆர் ஜெயித்த அந்தத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க, வளர்மதியும் ‘மக்கள் பிரதிநிதி’ ஆனார். அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர் திரும்பிவந்த பிறகுதான், அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. அப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றார்கள். ‘என்ன… நீயும் இவங்களோடு வந்திருக்க?’ என அங்கே வளர்மதியைப் பார்த்து எம்.ஜி.ஆர் கேட்க, ‘அண்ணே… நானும் எம்.எல்.ஏ ஆயிட்டேண்ணே!’ என வளர்மதி சொன்னதை ‘ரியாக்ஷன்’ காட்டாமல் ஏற்றுக்கொண்டு சிரித்தாராம் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்தான் பா.வளர்மதி.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ‘ஜா’, ‘ஜெ’ என அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தது. ‘ஜா’ அணியின் ஆணிவேர் ஆர்.எம்.வீரப்பன். அவரது சிஷ்யையான வளர்மதி எங்கே இருப்பார்? ‘ஜா’ அணியில்தானே! 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ‘ஜா’ அணியை வெற்றிபெற வைக்க, தமிழ்நாடு முழுக்கப் பிரசாரம் போனார் வளர்மதி. அப்போது ‘ஜா’ அணியில் இருந்த காளிமுத்து, ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். அவர் அப்படிப் பேசியதை, தமிழ்நாடு முழுக்கச் சென்று வழிமொழிந்ததில் வளர்மதிக்கு முக்கியப் பங்கு உண்டு. அதுவும் தி.நகர் பஸ் ஸ்டாண்டு அருகே வளர்மதி பேசிய பேச்சு நாராசம். ‘ஜெயலலிதா எப்போதும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக முடியாது’ என அப்போது ஜெயலலிதாவை ஏகத்துக்கும் விமர்சித்த அதே வளர்மதிதான் இப்போது, ‘இதயதெய்வம் அம்மாதான்… மற்றவர்கள் எல்லாம் சும்மாதான்…’ என லாலி பாடுகிறார்.
ஆன்மிக வியூகம்!
1991-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தபோதும், வளர்மதிக்கு ஏறுமுகம் இல்லை. ‘ஜெ அணி’யிலேயே இருந்து அ.தி.மு.க-வில் தொடர்ந்த புலவர் இந்திரகுமாரி, அமைச்சர் செல்வாக்கோடு கட்சியில் வலம்வந்துகொண்டிருந்தார். அவரை மீறி வளர்மதியால் வளர முடியவில்லை. ஜெயலலிதாவின் அபிமானம் பெற எப்படி எப்படியோ முட்டி மோதிப்பார்த்த வளர்மதி, இறுதியில் கையில் எடுத்த அஸ்திரம்தான் ஆன்மிகம். திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு வாராவாரம் சென்று வழிபட்டு, கோயில் பிரசாதத்தை கார்டனுக்குக் கொண்டுவந்து கொடுப்பார். இப்படி பல கோயில் பிரசாதங்களைக் கொண்டுபோய்க் கொடுத்தபோதுதான் சசிகலாவுடன் நெருக்கமானார். அதன் பிறகே கட்சியில் வளர்மதிக்கு லிஃப்ட் கிடைத்தது.
தேனாம்பேட்டை தாமஸ் ரோட்டில் உள்ள குடிசை மாற்று வாரியத்தின் 180 சதுரஅடி வீட்டில் ஒருகாலத்தில் வாடகைக்கு இருந்த வளர்மதி, அதே குடிசை மாற்று வாரியத்தின் தலைவர் ஆனார்.
1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியில் இந்திரகுமாரியின் செல்வாக்கு சரிய… அந்த இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் வளர்மதி. கட்சி அலுவலகத்துக்கு ஜெயலலிதா வரும்போதெல்லாம், வாசலில் தலைவியின் கண்ணில் படும்படி நிற்பார். ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் தன் பேச்சு தவறாமல் இடம்பெறும்படி பார்த்துக்கொண்டார். அப்படி கூட்டங்களில் பேசும்போது, கருணாநிதியை சகட்டுமேனிக்குத் திட்டித்தீர்ப்பார் வளர்மதி. அதை ஜெயலலிதா வெகுவாக ரசித்தார். அ.தி.மு.க பொதுக்குழுக்களில் யார் பேச வேண்டும் என்பதை ஜெயலலிதாதான் முடிவுசெய்வார். அந்தப் பட்டியலில் வளர்மதி பெயரை ஜெயலலிதா தவறாமல் ‘டிக்’ அடிக்கத் தொடங்கினார். ஒருமுறை பொதுக்குழு மேடையிலேயே, ‘சசிகலாவுக்குக் கட்சியில் பதவி தரவேண்டும்’ எனச் சொல்லி சசிகலாவிடமும் ‘ஸ்கோர்’ வாங்கினார். தலைமைக் கழகப் பேச்சாளர், மகளிர் அணிச் செயலாளர், இலக்கிய அணிச் செயலாளர் எனப் படிப்படியாக முன்னேறினார். சசிகலா கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு அருகில் வளர்மதிதான் இருப்பார். கட்சியில் பெருகிய இந்தச் செல்வாக்கு, 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வளர்மதிக்கு ஸீட் கிடைக்கச் செய்தது. அதில் ஓர் ஆச்சர்யம்… வளர்மதியின் ‘அரசியல் குரு’ ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராகவே ஆலந்தூரில் நிறுத்தப்பட்டார்.
அசரவில்லை வளர்மதி. குருவை வீழ்த்தி இரண்டாவது முறை எம்.எல்.ஏ. ஆனவர், முதல்முறையாக அமைச்சரும் ஆனார். அடுத்த ஐந்து வருடங்கள் ‘தாயே’ எனத் தலைவியைப் பாராட்டியும் ‘****’ என தி.மு.க உறுப்பினர்களைத் திட்டியும், அரசியல் பண்ணிக்கொண்டிருந்தார். 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்றவர், 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று வென்றார். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. சசிகலாவின் நெருங்கிய உறவினர் ஒருவரைச் சந்தித்தார். சில மாதங்களுக்குப் பிறகு செல்வி ராமஜெயத்தின் பதவி பறிபோக, அந்த இடத்தை நிரப்பினார் வளர்மதி. அதன் பிறகான அமைச்சரவை மாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொண்டே இருக்கிறார் பா.வளர்மதி.
‘மக்கள்’ அமைச்சர்!
அரசியலில் எப்படியோ ஆன்மிகத்தில் வளர்மதி ‘மக்கள் அமைச்சர்’தான். மந்திரி என்கிற பந்தா இல்லாமல் கோயில்களுக்குச் சென்று வருவார். மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்வார். வீட்டுக்கு அருகே இருக்கும் சிவன் கோயிலுக்கு தவறாமல் செல்வார். அப்போது யாரிடமும் பேச மாட்டார். ரோபோ போல சென்றுவிட்டு வருவார். தினம் சிவனுக்கு 100 ரூபாய் நோட்டு தட்டில் விழும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சனிக்கிழமைகளில் வருகை தவறாது. அப்படி ஒரு சமயம் போனபோது பார்த்தசாரதியை முன்னே நின்று தரிசித்தார். அப்போது, ‘உயரமானவங்க எல்லாம் முன்னாடி போய் நின்னுக்கிட்டா நாங்க எப்படி சாமியைப் பார்க்கிறது? கொஞ்சம் பின்னாடி வாங்க..’ என்றார் பக்தர். வளர்மதி திரும்பிப் பார்த்தபோதுதான் பக்தருக்கு ‘மந்திரி’ என்பது தெரிந்தது. பக்தர் அமைதியானாலும், வளர்மதி அவருக்குப் பின்னால் போய் நின்றுகொண்டு சாமியை வணங்கிச் சென்றார்.
துறையில் சாதித்தது என்ன?
மாற்றுத்திறனாளிகளின் நலனும் வளர்மதி வசம்தான் இருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் இந்த ஆட்சியில் நடத்தப்பட்ட விதம் கடும் கண்டத்தை உண்டாக்கியது. ‘பார்வையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் சதவிகிதத்தைக் குறைக்க வேண்டும். நிவாரண உதவித் தொகையை உயர்த்த வேண்டும்’ என ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தை, துளிக் கரிசனம்கூட இல்லாமல், இரும்புக் கரம் கொண்டு அடக்கியது அரசு. நாள்தோறும் உண்ணாவிரதம், சாலை மறியல் எனப் பல கட்டப் போராட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அரங்கேற்றியபோது, மனிதநேயம்கூட இல்லாமல் நடந்துகொண்டனர் போலீஸார். போராட்டத்தில் பங்கேற்ற பல மாற்றுத்திறனாளிகளை, இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியே அழைத்துச்சென்று விடுவது, சுடுகாட்டில் இறக்கிவிடுவது என, ‘துறை’யின் உத்தரவை செவ்வனே நிறைவேற்றியது காவல் துறை. ஜெயலலிதாவே விவகாரத்தில் தலையிட்டு ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்’ எனச் சொன்னதால், அப்போது போராட்டத்தைக்
கைவிட்டனர் மாற்றுத்திறனாளிகள். ஆனால், அந்த வாக்குறுதிகள் காற்றோடு போனதுதான் மிச்சம்!
முட்டை முறைகேடுகள்!
தமிழ்நாட்டிலேயே மிக அதிகபட்சப் பயனாளிகளாக 68 லட்சம் பேர் பயனடையும் திட்டம் ‘சத்துணவுத் திட்டம்’. அந்தத் திட்டத்தின் கீழ் முட்டை வழங்க 1989-ம் ஆண்டு கருணாநிதி உத்தரவிட்டார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை எனத் தொடங்கிய திட்டத்தில் இப்போது, வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வழங்கப்படுகின்றன. அங்கன்வாடி, சத்துணவு மையங்கள் என 97,058 மையங்களில் 68.54 லட்சம் பேருக்கு சத்துணவு வழங்கப்பட்டுவருகிறது. கலப்படம் இல்லாத உணவான முட்டை கொள்முதலில் ஏகப்பட்ட கோல்மால்கள் அரங்கேறின. வாரத்துக்கு மூன்றரைக் கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்கிறது அரசு. வழக்கமான மாவட்ட அளவிலான டெண்டர் மூலம் நடந்துவந்த முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டு, மாநில அளவில் மாற்றப்பட்டன.  ‘ஏழு வருடங்கள் முட்டை அல்லது இதர உணவுப் பொருள் வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வழங்குவதில் அரசிடம் 90 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என, புதுப்புது விதிமுறைகளை உண்டாக்கினர். இதனால் பல முட்டை உற்பத்தி யாளர்கள் டெண்டரில் கலந்துகொள்ள முடியாத நெருக்கடி, செயற்கையாக உருவாக்கப்பட்டது. ‘குறிப்பிட்ட சில நிறுவனங்கள் பயனடையும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடு இது’ எனப் புகார் எழுந்தது. இதனால் மாவட்ட அளவில் இயங்கிவந்த பல சிறிய கோழிப் பண்ணை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு முட்டையும் 46 கிராம் எடை இருக்க வேண்டும். கெட்டுப்போன முட்டைகளை வழங்குவதைத் தடுக்க, வாரத்துக்கு மூன்று முறை முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். முட்டையின் மீது ‘தமிழ்நாடு அரசுக்காக’ என வைக்கப்படும் சீல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் இருக்க வேண்டும் என, முட்டை கொள்முதலில் நிறைய விதிமுறைகள் உண்டு. ஆனால், அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. குறைவான எடையில் தரம் இல்லாத முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகப் புகார்கள் குவிகின்றன. சராசரி மார்க்கெட் விலையைவிட சத்துணவு முட்டையின் விலை அதிகம், விலை நிர்ணயத்தில் முரண்பாடுகள், முட்டை உற்பத்தியாளர்களிடம் அரசு நேரடியாகக் கொள்முதல் செய்வது இல்லை, கொள்முதல் விதிமுறை மீறல்கள்… என முட்டை முறைகேடுகளைப் பட்டியலிட்டன எதிர்க்கட்சிகள். ‘கான்ட்ராக்டருக்கு அரசு தரும் தொகையும், கான்ட்ராக்டர் முட்டை உற்பத்தியாளருக்குத் தரும் பணமும் மாறுபட்டிருக்கிறது. சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கும்போது அதிக விலைக்கு டெண்டர் விடுவது ஏன்? முட்டையின் சில்லறை விலையைவிட சத்துணவுத் திட்டத்துக்கு சப்ளையாகும் முட்டை விலை மிக அதிகமாக இருப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு 80 கோடி ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்படுகிறது. எடை குறைவான முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்க முடியாது என்பதால், அதைச் சத்துணவு திட்டத்துக்குத் தள்ளிவிடும் கொடுமையும் நடக்கிறது. மாவட்டங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகக் கிடங்குகளுக்கு முட்டைகள் அனுப்பப்பட்டு, அங்கு இருந்து சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்துச் செலவாக ஒரு முட்டைக்கு 8 பைசா செலவழிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் டெண்டர் வழங்கப்பட்டபோது, இந்தப் போக்குவரத்துச் செலவு குறைவுதான். முட்டைகளை ஒப்பந்தப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யாமல், ஐந்து நாட்களுக்கு உரிய முட்டைகளை ஒரே நேரத்தில் சப்ளை செய்வதால், ஒப்பந்ததாரருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. கெட்டிக்காரத்தனமாக சத்துணவு அமைப்பாளர்களிடம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை முட்டைகளை சப்ளை செய்வதாகக் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஒப்பந்ததாரர்கள், அதிகமான கமிஷன் பார்க்கிறார்கள்’ என முறைகேடுகளை அடுக்கின எதிர்க்கட்சிகள். ஆனால் அரசோ, ‘முட்டை கொள்முதல் செய்வது அரசின் கொள்கை முடிவு. முந்தைய முறையில் நிறையத் தவறுகள் நடந்தன. அவற்றைக் களைய வேண்டும் என்பதற்காகத்தான், புதிய முறை கொண்டுவரப்பட்டது. முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை’ என்கிறது.
இத்தனை பிரச்னைகளுக்கு நடுவில் அமைச்சர் பா.வளர்மதி என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?
‘கிழிந்த ஜிப்பா, உடைந்த தகர டப்பாவுடன் சென்னைக்கு வந்தவர் கருணாநிதி’ என சட்டமன்றத்தில் முழங்கி, தன் தலைவியை மனம் குளிரவைப்பார். ‘அன்னக் காவடியாக வந்தவரே… மஸ்டர் ரோல், பூச்சி மருந்து, கோதுமை பேரம், வீராணம் குழாய், ஸ்பெக்ட்ரம்… என ஊழல்களால் கோடிகளை உலக அளவு குவித்தவரே… ஆண்டியாகக் களம் புகுந்து, அம்பானியை வென்றவரே! ஆண்டிமுத்து ராசாவைத் தூண்டிவிட்டு அலைவரிசைக் கொள்ளையால் ஆசியப் பணக்காரர் ஆனவரே… நாஞ்சிலார் சொன்ன கருவின் குற்றமே… நாளை உனக்குக் காத்திருக்கு ஸ்பெக்ட்ரமே!’ எனக் கவிதை எழுதுவார். அமைச்சர் பதவிக்கான செயல்பாடுகளைவிட, அமைச்சர் பதவி முக்கியம் அல்லவா!
யார் பெஸ்ட்… போட்டி!
வளர்மதிக்கும் மற்றோர் அமைச்சர் கோகுல இந்திராவுக்கும் இடையே ஜெயலலிதாவிடம் ‘ஷொட்டு’ வாங்க அதகள அக்கப்போரே நடக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுவதில் ‘யார் பெஸ்ட்?’ என்பதில் தொடங்கி, ஜெயலலிதாவின் விடுதலைக்காக யாகம், பூஜைகள் நடத்துவது வரை ஒருவரை ஒருவர் ‘பீட்’ செய்யப் பார்க்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானபோது, அழுதுகொண்டே லட்டு சாப்பிட்டார் வளர்மதி. சளைக்காமல் கோகுல இந்திராவும் மாலை மாலையாகக் கண்ணீர் வடித்தார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நடத்திவந்த ‘சமநீதி’ பத்திரிகையில் வேலை பார்த்த பாலசுப்பிரமணியனைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார் பா.வளர்மதி.
வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனும் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், வளர்மதி மீது எந்தப் புகார் போனாலும் அது புஸ்வாணம் ஆகிவிடும். கட்சி அலுவலகத்துக்குப் போகும் புகார்களுக்கு, அங்கே இருக்கும் மகாலிங்கம் செக் வைத்துவிடுவாராம்.
‘தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை’ என்கிற புலம்பல்கள் ஆயிரம்விளக்கில் எதிரொலிக்கின்றன. இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் விநியோகம்கூட முழுமை அடையவில்லையாம். ‘தொகுதிக்குள் மாதம் ஒரு முறை விழாவை நடத்த வேண்டும்’ என அங்கே இருக்கிற கவுன்சிலர்களுக்கு உத்தரவு போடப்படுகிறதாம். ‘கைக்காசைப் போட்டு விழா நடத்தவேண்டியிருக்கிறது’ என, கட்சிக்காரர்கள் புலம்புகிறார்கள்.
டிரான்ஸ்ஃபர், டெண்டர் என, கட்சிக்காரர்கள் விண்ணப்பங்களோடு போனால், இனிக்க இனிக்கப் பேசுவார். ஆனால், ‘நான் வெறும் அமைச்சர்தான். அதிகாரம் எல்லாம் கிடையாது’ எனச் சொல்லி மழுப்பி அனுப்பிவிடுவாராம்.
இப்போது யார் யாரோ டாலரிலும் கம்மலிலும் மூக்குத்தியிலும் வளையல்களில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு போஸ் கொடுக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் முன்னோடி வளர்மதிதான். பெரிய டாலர் செயினில் ஜெயலலிதாவின் படத்தைப் போட்டு, அதை புடவைக்கு மேலே நன்றாகத் தெரியும்படி முதல்முதலாக அணிந்தது இவரே.
அமைச்சர் பங்களா வேண்டாம் எனச் சொல்லி, கே.கே.நகர் வீட்டிலும் ஈக்காட்டுத்தாங்கல் பங்களாவிலும் வசிக்கிறார்.
அந்த நான்கு மாவட்டங்கள்!
வளர்மதி பிறந்தது மதுரை; அரசியல் செய்வது சென்னை; முதன்முறையாக அமைச்சராக உதவியது காஞ்சிபுரம். வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியனின் சொந்த மாவட்டம் கடலூர். இந்த நான்கு மாவட்டங்களிலும் வளர்மதிக்கு அரசியல் செல்வாக்கு உண்டு.
நிழல்கள்!
ஆயிரம்விளக்கு தொகுதியில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் கவுன்சிலர் சிவராஜ்தான், அமைச்சருக்கு ஆல் இன் ஆல். அவர் கண் அசைவின் படிதான் வளர்மதி செயல்படுகிறார் எனக் குற்றச்சாட்டு படிக்கிறார்கள் கட்சியினர். நிர்வாகிகள் நியமனம் தொடங்கி தொகுதிக்குள் நடைபெறும் அனைத்து டீலிங்குகளும் சிவராஜ் மூலமே அரங்கேறுகின்றன. தொகுதிக்கு சிவராஜ் என்றால், அரசு நிர்வாகத்துக்கு சங்கர். சீனியர் பி.ஏ-வான இவர், டிரான்ஸ்ஃபர், டெண்டர் போன்ற வேலைகளைப் பார்த்துக்கொள்கிறார். ‘சங்கரைப் பார்த்தால் காரியம் நடக்கும்’ என்கிறார்கள் கோட்டைவாசிகள். இவர்கள் இருவரும் வளர்மதியின் இரு கண்கள்.
‘போட்டோவைத் தூக்கிப் பிடி!’
தான் இருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் போட்டோ இருப்பது தெரியாமல், ஒரு புகைப்படம்கூட வெளிவந்துவிடக் கூடாது என்பதில் வளர்மதி ரொம்பவே உஷார். வழிபாடு என்றாலும், அரசு நிகழ்ச்சி என்றாலும் வளர்மதியின் அருகே ஜெயலலிதாவின் பெரிய படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பார். அதற்காகவே சிலரைப் பணியில் அமர்த்தியிருக்கிறார். மாணவர்களுக்கு வளர்மதி லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி. லேப்டாப் ஸ்க்ரீனிலேயே ஜெயலலிதாவின் படம் தெளிவாகத் தெரிந்த நிலையிலும், வழக்கம்போல் ஜெயலலிதாவின் படத்தை ஒருவர் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். ஜெயலலிதா விடுதலைக்காக வளர்மதி நடத்திய ஆன்மிக வைபவங்களிலும் இந்த ‘போட்டோ செஷன்’ இடம்பெற்றது. எத்தனை முணுமுணுப்புகள் கிளம்பினாலும், முகம் சுளிக்காமல் ஜெயலலிதா போட்டோவை கோயில் கோயிலாகத் தூக்கிக்கொண்டு போனார் வளர்மதி!
வரலாறு முக்கியம் அமைச்சரே!
ஜெயலலிதாவின் தெய்வ பக்தியை, தனது அரசியல் முதலீடாகப் பயன்படுத்தித்தான் முன்னுக்கு வந்தார் பா.வளர்மதி. அதனாலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜாமீனில் இருந்த காலத்தில், வளர்மதியின் ஆன்மிக அவதாரம் உச்சத்துக்குப்போனது. திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்றார். வடபழநி முருகனுக்கு 1,067 லிட்டர் பாலாபிஷேகம், அசோக் நகர் பிடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்துக்கு பசுவும் கன்றும் தானம், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம், தேனாம்பேட்டை சாய்பாபா கோயிலில் 108 தேங்காய் உடைப்பு… என, பல ஆன்மிகக் கச்சேரிகளை நிகழ்த்தினார். அந்த ஆன்மிகக் கடமைகளுக்கு நடுவே கிடைக்கும் சைடு கேப்களில்தான் அமைச்சர் வேலை பார்த்தார்!

நீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா?

நன்றி: இணையப்பத்திரிக்கைகள்

தி.நகரில் உள்ள ஒரு பெரிய கடையில், கருப்பட்டிக் காபிக்கு மிகப் பெரிய க்யூ. விலை அதிகம் என்றாலும், பலரும் காத்திருந்து அதை வாங்கிக் குடித்தனர். ஆர்கானிக் பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு ஸ்டேட்டஸ் என்ற அளவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, முன்பு கவனிப்பாரின்றிக் கிடந்த கருப்பட்டி விலைகூட பல மடங்கு ஏறிவிட்டது.
பாலீஷ் செய்யப்பட்ட அரிசி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள், ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ் என கவனத்தைச் செலுத்திய நம் மக்கள், இப்போது கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், பனை வெல்லம், கருப்பட்டி, பூச்சிக்கொல்லி ரசாயனம் கலக்காத ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று தேடித்தேடி வாங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், தெரு முனைக் கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை ஆர்கானிக், பாரம்பரியப் பொருட்களுக்கு மவுசு அதிகரிக்கிறது.
இப்படி, தெருவுக்குத் தெரு ஆர்கானிக் பொருட்கள் விற்பனை நடப்பதால், எது உண்மையான ஆர்கானிக் என்றே தெரிவதுஇல்லை. ஆர்கானிக் என்றால், செழுமையே இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் உள்ளது. ரசாயனம் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் காய்கறிகள் என்பதால் விலையும் மிக அதிகம் என்று சொல்லி அதிக விலைக்கு விற்கின்றனர். இந்த கடைகளில் விற்கப்படுவது உண்மையான ஆர்கானிக் பொருட்களா, ஆர்கானிக் பொருட்களை வாங்குவது எப்படி என்று பலருக்கும் சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது.
ஆர்கானிக் பொருட்களை கண்டறிவது எப்படி?
வடிவம்: இயற்கையாக இருக்கும் எதுவும் ஒரே அளவில், ஒரே நிறத்தில் இருக்காது. வடிவத்தில் மாறுபடும். சாக்கில் போட்டு கொண்டுவரும்போது, இடிபட்டு, நசுங்கி, அழுக்காகத்தான் வரும். காய்கறிகள், பறித்து ஒரு நாளுக்குள் சிறிது சுருங்கித்தான் போகும். வெண்டைக்காய், கத்திரிக்காயில் 20 சதவிகிதம் பூச்சிகள் இருக்கும். 10 மாம்பழங்கள் வாங்கினால், இரண்டில், வண்டு இருக்கத்தான் செய்யும். எனவே, இத்தகைய பொருட்களை பார்த்து வாங்கிப் பயன்படுத்தலாம். பூச்சி, புழு எதுவும் இல்லை என்றால், அதில் பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பூச்சி, புழுக்களே பயந்து ஒதுங்கிய காய்கறிகளின் அழகைப் பார்த்து வாங்குவது ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
சுவை: பாலிஷ் செய்யப்பட்ட அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை மறுநாள் வைத்தால், நொதிந்துபோய், ஒருமாதிரியான வாடை  வரும். இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசியில் சமைத்தால், சீக்கிரத்தில் கெடாது. பருப்பில் செய்யும் குழம்பு மணமும் சுவையும் வித்தியாசமாக இருக்கும். எண்ணெய், உப்பு, வெல்லத்தில்கூட வித்தியாசம் தெரியும். ஆர்கானிக் உணவைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். பழைய சோற்றை மறுநாள் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும். எனவே, ஆர்கானிக் என்று சொல்லும் பொருளை ஒருமுறை வாங்கி சமைத்துப் பார்த்து, ருசியின் வேறுபாடு தெரிந்தால் மட்டும் வாங்கலாம். நிறைய  சமையல் நிபுணர்கள் ஆர்கானிக் பொருட்கள் மூலம் சமைக்கப்படும் உணவின் சுவை, நிறம், ஃபிளேவர் நன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். எனவே, சமைத்துப் பார்க்கும்போதுதான் அதன் வித்தியாசத்தை உணர முடியும்.
பழங்கள், காய்கறிகள், கீரைகள் பளிச் நிறத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நம்மை வசீகரிக்கத்தான் ரசாயன உரம் கலக்கப்படுகிறது.
ஆர்கானிக் காய்கறி, பழங்கள் ஒரு சில நாட்கள் மட்டும்தான் வைத்திருக்க முடியும். இதுவே பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள், வெந்தயம், மற்றும் பழங்கள் என 70 சதவிகிதம் காய்கறி, பழங்களை நாமே வீட்டில் பயிரிட முடியும். பயிரிட்ட 21 நாட்களில் கீரைகளைப் பறித்துக் கொள்ளலாம். தோட்டம் போட விரும்புபவர்களுக்கு விதைகளையும் ஆலோசனைகளையும் தமிழக அரசு தோட்டக்கலைத் துறையே தருகிறது.
ஆர்கானிக் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளைத் தேடிச் சென்று மொத்தமாக வாங்கலாம். தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பட்டியலை சேகரித்து அவர்களிடம் வாங்கலாம். இயற்கை முறையில் விளைவிக்கும் விவசாயிகள், உள்ளூர்ச் சந்தை மற்றும் விவசாயிகள் சந்தைக்கு சென்று விற்பனை செய்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து பொருட்களை வாங்கலாம். கிராமங்களில் நடக்கும் வாரச்சந்தைகளுக்குச் சென்றாலே, இயற்கை விவசாயப் பொருட்களை வாங்க முடியும்.
இயற்கையோடும் இயற்கை விவசாயத்தோடும் இணைவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வு வசப்படும்.

கருணாநிதி எம்.ஜி.ஆர். மதுவிலக்கு மன்னன் யார் ?

நன்றி: இணையப்பத்திரிக்கைகள்


’தமிழ்நாட்டையே குடிக்க வைத்துக் கெடுத்தார்’ எனக் குற்றம் சாட்டப்படும் மு.கருணாநிதி, ‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்’ எனப் பகிரங்கமாக அறிவித்துவிட்டார். தமிழ் மக்களின் நவீன ‘அம்மா’வாக அவதாரம் எடுத்திருக்கும் ஜெயலலிதா இதைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் மௌனம்காப்பது மட்டும் அல்லாமல், இன்னும்… இன்னும் புதுப்புது மதுக் கடைகளைத் திறப்பதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக இவரும் தேர்தலுக்கு முன்னதாக இந்த அஸ்திரத்தை எடுக்கக்கூடும். கருணாநிதி அறிவித்திருப்பதும், ஜெயலலிதா அறிவிக்க இருப்பதும் தமிழ் மக்களுக்கு புதிது அல்ல. ‘பழைய மொந்தையில் புதிய கள்’ அவ்வளவுதான்!

அந்த மழை நாளில்…
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்துசெய்யப்பட்ட நாள்: 30.8.1971
23 ஆண்டுகளாக அமலில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தது அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி… அப்போது ஏக இந்தியாவில் தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மட்டும்தான் மதுவிலக்கு அமலில் இருந்தது. ‘மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார். ‘தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கருணாநிதி கேட்டார். ‘இது மதுவிலக்கைப் புதிதாக அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ எனப் புதிய விளக்கம் சொன்னார் இந்திரா. காங்கிரஸை வீழ்த்திவிட்டுவந்த கருணாநிதிக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். நிதி தராத மத்திய அரசுக்குப் பாடம் கற்பிக்கவே மதுவிலக்கு ரத்து என அறிவித்தார் கருணாநிதி.
கோவை தி.மு.க பொதுக்குழுவில் கருணாநிதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு, மதுவிலக்கு ரத்து என அறிவிக்கப்பட்டது. மதுவின் தீமையை நாட்டு மக்களுக்கு விளக்க, அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சென்னை முழுக்கக் கடுமையான மழை. போக்குவரத்து இல்லை.
93 வயதான ராஜாஜி, மதுவுக்கு எதிரான போராட்டத்தை தனது வாழ்நாளில் இளமை முதல் நடத்திவந்த ராஜாஜி… தனது காரை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். ‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு தொடர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். ‘வேறு வழி இல்லை; நிதி நெருக்கடியில் இருக்கிறது அரசு’ என விளக்கம் அளித்தார் கருணாநிதி. ‘மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் தான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார் ராஜாஜி; கருணாநிதி ஏற்கவில்லை. வீடு திரும்பினார் ராஜாஜி; மதுவிலக்கை வழியனுப்பினார் கருணாநிதி.
‘நம்பிக்கையுடன் அல்ல; மனச் சஞ்சலத்துடன்தான் வீடு திரும்பினேன்’ என ராஜாஜி அன்று சொன்னதாக அவரது பேரன் எழுதுகிறார். ராஜாஜி மனதை இது அதிகமாகப் பாதித்தது. ‘உயிர் வாழ வேண்டும் என்கிற மனோபலத்தை நீங்கள் இழந்துவிட்டீர்களா?’ என கல்கி சதாசிவம் கேட்டபோது, ‘இல்லை! ஆனால் ஒருவர் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு ஏதேனும் ஒரு முக்கியமான நோக்கம் இருக்க வேண்டும் அல்லவா?’ எனச் சொன்ன ராஜாஜி, நாடு முழுக்க சாராயக் கள்ளுக்கடைகளைப் பார்த்துவிட்டுத்தான் கண்ணை மூடினார்!
காரணம் கருணாநிதிதானா?
‘கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?’ -தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கம் இது. தமிழ்நாட்டைச் சுற்றி இருக்கிற மாநிலங்களில் எல்லாம் மது இருக்கும்போது, மது இல்லாமல் தமிழ்நாடு மட்டும் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி. இதைச் சொல்லித்தான் மதுவிலக்கை ரத்துசெய்தார்; பழியைச் சுமக்கிறார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கை கருணாநிதி ரத்துசெய்தார் என்பது உண்மை. ஆனால், தமிழ்நாட்டுக்கு சாராயத்தையே அவர்தான் காட்டினார் என்பது உண்மையா..? இல்லை!
மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு, பதிவுசெய்த குற்றங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் உண்மையை உணர முடியும். 1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்துசெய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் சிக்கி இருக்கிறார்கள்.
1961 – 1,12,889 பேர்
1962 – 1,29,977 பேர்
1963 – 1,23,006 பேர்
1964 – 1,37,714 பேர்
1965 – 1,65,052 பேர்
1966 – 1,89,548 பேர்
1967 – 1,90,713 பேர்
1968 – 2,53,607 பேர்
1969 – 3,06,555 பேர்
1970 – 3,72,472 பேர்
இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் எம்.ஜி.ஆர். ‘ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த ‘நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இதை எடுத்துப்போட்டார்.
குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கருணாநிதி செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்!
திரும்பிய திசை எங்கும் மதுக் கடைகள்!
‘ஆண்டுக்கு 26 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்’ என்றார் முதலமைச்சர் கருணாநிதி, 1971-ம் ஆண்டில். தமிழ்நாடு முழுவதும் 7,395 கள்ளுக் கடைகளும் 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. ஒரு லிட்டர் கள் 1 ரூபாய், 1 லிட்டர் சாராயம் 10 ரூபாய். தாலுகாவுக்கு ஒரு சாராய வியாபாரி என, தமிழ்நாட்டில் 139 மொத்த வியாபாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் வாங்குவார்கள்.
அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,304 கள்ளுக் கடைகளும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 643 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டன. குறைவான கடைகள் இருந்தது சென்னையில்தான். 56 கள்ளுக் கடைகள், 52 சாராயக் கடைகள்.
அன்றைய தமிழ்நாடு அரசுக்கு வரிகள் மூலம் கிடைத்த வருவாய் 210 கோடி ரூபாய். போதையில் இருந்து மட்டும் கிடைத்தது
26 கோடி ரூபாய் என்றால், எவ்வளவு பெரிய தொகை எனப் பாருங்கள்.
ஆனாலும் கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தினார். மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, ஆண்டு ஒன்றுக்கு 29 கோடி ரூபாய் தர வேண்டும் என, கருணாநிதி கோரிக்கை வைத்துப் பார்த்தார். பணம் வரவில்லை. மீண்டும் மதுவிலக்கை ரத்துசெய்தார். நிதியைக் காரணம் காட்டியே மதுவிலக்கைத் தவிர்ப்பதும் கொண்டுவருவதும் தொடங்கியது… தொடர்ந்தது. இதை பணமாகவே பார்த்தார்கள். குணமாக அன்றும் பார்க்கவில்லை; இன்றும் பார்க்கவில்லை.
எம்.ஷி.ஆரை வெளியேற்றிய மது!
மது… குடும்பங்களை அல்ல, கட்சிகளையும் உடைக்கும்!
மதுவிலக்கை ரத்துசெய்யும் அதிகாரத்தை கருணாநிதிக்கு வழங்கிய தி.மு.க பொதுக்குழு தீர்மானத்தை ஆதரித்தும், மதுவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் குழுவில் பொறுப்பேற்றும் இருந்த எம்.ஜி.ஆர்., இரண்டு ஆண்டுகள் கழித்து தி.மு.க-வில் இருந்து வெளியேற கண்டுபிடித்த காரணங்களில் மதுவும் ஒன்று. கணக்கு கேட்டு பேசிய கூட்டத்தில், மதுவைப் பற்றியும் கண்டித்தார். அவரை தி.மு.க-வில் இருந்து விலக்கும் கடிதத்தில் உள்ள காரணங்களில் இதுவும் ஒன்று. ‘பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதற்கு ஆதரவாகப் பேசிவிட்டு, இப்போது வெளி மேடைகளில் விமர்சித்துப் பேசுவது கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவதாகும்’ என்றுதான் தி.மு.க-வின் அன்றைய பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் குறிப்பிட்டார்.
நாஞ்சில் மனோகரனும் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரைத் தனிமையில் சந்தித்துக் கேட்டார்கள். மறுத்தார் எம்.ஜி.ஆர். நிரந்தரமாக நீக்கப்பட்டார். எனவே தி.மு.க உடைந்ததில் மதுவுக்கும் பங்கு உண்டு.
எம்.ஷி.ஆர் போட்ட பல்டிகள்!
சினிமாவில் அடித்த ஸ்டன்ட் களைவிட மதுவிலக்கில் எம்.ஜி.ஆர் அடித்த ஸ்டன்ட்கள்தான் அதிகம்!
‘என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 ‘அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
1.5.1981-ல் தமிழ்நாட்டில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் உற்பத்திசெய்கிற தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இல்லை. நான்கு தனி நபர்களுக்கும் கூட்டுறவுத் துறை நிறுவனத்துக்கும் அரசு அனுமதி அளித்தது. சாராயம், கோடிகளைக் கொட்டும் தொழிலாக மாறியது அப்போதுதான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, இந்தச் சாராய அதிபர்களுக்கு ஆண்டுக்கு 36 கோடி ரூபாய் போகிறது எனப் புள்ளிவிவரங்களை அள்ளி வீசினார். ‘இவை எல்லாம் அந்த ஒன்பது குடும்பங்களுக்குப் போகிறதா அல்லது இவை எல்லாம் பினாமியாக ஒரே குடும்பத்துக்குப் போய்ச் சேருகிறதா?’ எனக் கேள்வியையும் போட்டார்.
மதுவிலக்குக் கொள்கையில் அளவுக்கு அதிகமாக ஐந்து அவசரச் சட்டங்களைப் போட்டதும் எம்.ஜி.ஆர் அரசுதான். ‘மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் ஒருமுறை பிடிபட்டால், 3 ஆண்டுகள் சிறை,  இரண்டாவது முறை பிடிபட்டால், 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால், நாடு கடத்தப்படுவார்கள்’ என்பதும் ஓர் அவசரச் சட்டம்.
‘சர்வாதிகார நாட்டில்தான் இப்படி ஓர் அவசரச் சட்டம் இருக்கும்’ என கருணாநிதி எதிர்க்கும் அளவுக்குப் போனார் எம்.ஜி.ஆர்.
தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க மதுவிலக்கு என்றும், கள்ளச் சாராயத்தால் காசும் உடல்நலமும் பறிபோகிறது எனத் தாய்மார்கள் கண்ணீர் விடுவதால் மதுவிலக்கு ரத்து என்றும், இரண்டுக்கும் தாய்மார்களின் கண்ணீரையே காரணங்களாகக் காட்டித் தப்பிக்க முயற்சித்தார் எம்.ஜி.ஆர்.
கருணாநிதி சொன்னபடி நடந்த ஜெ !
மதுவிற்பனை மூலமாக வருமானம் அதிகமாக வருவதைக் கவனித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, மது விற்பனையை அரசே ஏற்று நடத்தினால் நல்ல லாபம் வரும் என யோசனையும் சொன்னார். (தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.3.1983 அன்று பேசியது) ‘இப்போது அரசே எடுத்து நடத்துவதற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை’ என லைசென்ஸ் வழங்கினார் கருணாநிதி. அவர் 1983-ம் ஆண்டில் சொன்னதை 2003-ம் ஆண்டில் அமல்படுத்தினார் ஜெயலலிதா.
நல்ல கல்வியை தனியாருக்கும், நல்ல மருத்துவத்தை தனியாருக்கும் தாரைவார்த்துவிட்டு நல்ல மதுவை அரசு வழங்கும் நெறிபிறழ்ந்த செய்கையை ‘அம்மா’ தொடங்கிவைத்தார். மறைவான இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் கடை நடத்திக்கொண்டிருந்த நிலைமை மாறி, அரசு அதிகாரிகள் கேட்பதால் பள்ளிகளுக்குப் பக்கத்தில், குடியிருப்புகளுக்கு உள்ளே, கோயிலுக்குப் போகும் வழியில் எல்லாம் கடைகள் திறக்கப்பட்டன. தம்பி தவறு செய்தால் தட்டிக்கேட்டார்கள். ‘அம்மா’வே செய்தால் யாரால் கேட்க முடியும்?
குடியைக் கட்டாயப்படுத்திய அரசு!
இன்று சாராய வருமானம் 30 ஆயிரம் கோடி. இதை 32 ஆயிரம் கோடியாக எப்படி ஆக்குவது? அரசின் கவலை இதுதான். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் அதிகப்படுத்திக் காட்டியாக வேண்டும். ஒவ்வொரு கடைக்கும் இலக்கு நிர்ணயித்துவிட்டார்கள். அந்த அளவுக்கு விற்காவிட்டால், விற்பனையாளர்களுக்கு மெமோ தரப்படும். வேலை நீக்கமும் உண்டு.
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் குடிக்க வேண்டும் என அவசரச் சட்டம் போடுவதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிதியை வைத்துத்தான் அரசு நிர்வாகம் செயல்படுவதுபோல போலி பிரமையை உருவாக்குகிறார்கள். இது உண்மை அல்ல. நாய் விற்ற காசு குரைக்காது. ஆனால், சாராயம் விற்ற காசு கொல்லும். தமிழ்நாட்டைக் கொன்றும்வருகிறது.
அதிபர்களை அதிகப்படுத்திய மு.க.!
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது டாஸ்மாக் தொடங்கப்பட்டது. பாலாஜி டிஸ்டீலரீஸ், எம்.பி.டிஸ்டீலரீஸ், மோகன் புரூவரீஸ் அண்ட் டிஸ்டீலரீஸ், சிவாஸ் டிஸ்டீலரீஸ், சாபில் டிஸ்டீலரீஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களுக்குத்தான் ஆரம்பத்தில் அனுமதி கொடுத்தார்கள். மற்ற நிறுவனங்கள் இதற்குள் நுழைய பல்வேறு தடைகள் இருந்தன. இதை உடைத்து 2001-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மிடாஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்தார். அதன் பிறகுதான் டாஸ்மாக் மூலமே மதுபானக் கடைகளை நடத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது இதைக் கண்டித்த கருணாநிதி, 2006-ம் ஆண்டில், தான் ஆட்சிக்கு வந்ததும் மது விற்பனையை அரசு செய்யும் முடிவைத் தொடர்ந்தார்.
இதைவிட இன்னொரு சாதனையையும் செய்தார் கருணாநிதி. எஸ்.என்.ஜே.டிஸ்டீலரீஸ், கால்ஸ் டிஸ்டீலரீஸ், எலைட் டிஸ்டீலரீஸ், இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின் (பி) லிட்., கிங் டிஸ்டீலரீஸ் போன்ற புதிய சாராய ஆலைகளை அனுமதித்தார் கருணாநிதி. இதன் பொறுப்பாளர்கள் அவரோடு பல்வேறு மேடைகளில் பங்கேற்றார்கள். கருணாநிதி ஆட்சியில் மிடாஸ் ஆலையில் இருந்து மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதியின் நெருக்கங்களின் ஆலையில் இருந்து, மது தடை இல்லாமல் வாங்கப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கோபத்தால் ஒதுக்குபவர்கள், மது ஆலைகளை லாபத்தால் அரவணைக்கிறார்கள்!