சனி, செப்டம்பர் 12, 2009

ஸ்ரீநிவாச பெருமானுக்கு திருப்பூரில் உற்சாக வரவேற்பு







திருப்பூரில் திருப்பதி ;

நேற்றிரவு திருப்பூர்க்கு வந்த திருப்பதி பெருமானுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு
திருப்பூர் மக்கள் இதுவரை காணாத ஒன்று எனலாம்.

இதே போன்ற ஆர்வங்களை மக்கள் சுற்றுப்புறத் தூய்மை, மரம் வளர்ப்பு , நொய்யல் சீரமைப்பு போன்றவற்றிலும் காட்டினால் நகரம் அழகு பெறும். இன்று கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது.

படங்கள் நான் எடுத்தவை அளித்துள்ளேன். விரிவான செய்திகள் தினமலர் இணையத்தில் இருந்து அளிக்கிறோம்.

நன்றீ : தினமலர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரச்சார பரிஷத் மற்றும் திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஸ்ரீநிவாச-பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் திருப்பூரில் இன்று நடக்கிறது. இதற்காக, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட உற்சவ மூர்த்திகள் ஸ்ரீநிவாசன், பத்மாவதி தாயார், திருமகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய கலைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நேற்று மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்து தர்ம பிரச்சார பரிஷத் மற்றும் சார்பில், ஸ்ரீநிவாசன் - பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம், இடுவம்பாளையம் பள்ளியில் இன்று மாலை 4.00 மணிக்கு நடக்கிறது. திருப்பதியில் தினமும் திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது.

அதைப்போலவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மகோற்சவத்தை நடத்தி வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில், இரண்டு உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கல்யாண மகோற்சவத்துக்காக சிறப்பு "மொபைல்' உற்சவ மூர்த்தி வடிவமைக்கப்பட்டுள்ளார்.திருமலையில் நடக்கும் அனைத்து பூஜை, புனஸ்காரங்களும், அதே முறைப்படி, அதே நேரத்தில் உற்சவ மூர்த்திகளுக்கும் செய்விக்கப்படும். இதற்காக, தேவஸ்தானம் சார்பில் வேதபட்டாச்சார்யார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, தமிழகத்தில் எட்டு இடங்களில் ஸ்ரீநிவாச பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் நடந்துள்ளது.ஒன்பதாவது இடமாக, திருப்பூரில் இன்று நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் இணைந்து செய்துள்ளது. திருக்கல்யாண மகோற்சவ நிகழ்ச்சிக்காக, திருப்பதியில் இருந்து உற்சவ மூர்த்தி நேற்று திருப்பூர் வந்து சேர்ந்தார்; திருப்பூர் வந்த ஏழுமலையானுக்கு, பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.இரவு 7.00 மணிக்கு திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே வந்தார். அவருக்கு, வீரராகவ பெருமாள் எதிர்சேவை செய்தார். அங்கிருந்து, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் புறப்பட்டது.

திருப்பதி சென்று திருவேங்கடவனை தரிசிக்க வாய்ப்பின்றி மனமுருகியவர்களின் ஏக்கத்தை போக்க, அத்திருமாலே மணக்கோலத்தில் திருப்பூரில் எழுந்தருளினார். ஒரு குட்டி யானையும், ஐந்து யானைகளும் முன்னே செல்ல... ஸ்ரீநிவாசப் பெருமாள் அழைத்து வரப்பட்டார். விண்ணதிர வாண வேடிக்கைகள் போடப்பட்டன. கும்பகோணத்தை சேர்ந்த இசைக்கலைஞர்கள் மங்கள வாத்தியங்களை முழங்கினர். பஜனை பாகவதர்கள் இன்னிசை பாட, சாய் பக்தர்கள் இசை மழை பொழிந்தனர்.

விஷ்ணுவின் மகா பக்தர்களான கோத்தகிரி கக்குல்லா, அரவேணு பகுதி படுகர்களின் பாரம்பரிய நடன இசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. விவேகானந்த நிலைய அன்பு இல்ல மாணவர்கள் கோதண்ட நாமாவளி சங்கீர்த்தனம் பாடினர்.மங்கள வாத்தியங்கள், கேரள சிங்காரி மேளம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், கதகளி நடனம், பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பம்பை, தவில், நாதசுரம், காவடியாட்டம், நாலாயிர திவ்ய பிரபந்தம் இசைக்கும் கலைஞர்கள், வேதபாராயணம் படிக்கும் வேதியர்கள், நடனமாடும் குதிரை, கோலாட்டம், கும்மி என 25க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலைகள் மூலம் உற்சாகமாக மாப்பிள்ளை அழைப்பு நடந்தது.மாப்பிள்ளை அழைப்புக்காக, 52 தட்டுகளில் சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டது; நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். இறைவனின் கல்யாண ரதம் திருப்பதியில் இருந்து தருவிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பிடித்தமான இசையை வாசிக்க, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து இசைக்கலைஞர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படிக்க, நான்கு வேதபண்டிதர்கள், வேத ஆகம முறைப்படி செயல்பட 35 வேதபட்டாச்சார்யார்களும் திருப்பதியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் வீரராகவ பெருமாள் கோவிலில் துவங்கி, காமராஜ் ரோடு வழியாக, ஊர்வலம் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தை அடைந்தது.

வழியெங்கும் பொதுமக்கள் பக்திப்பரவசத்துடன் கண்டுகளித்தனர். திருமண மண்டபத்தில், பொதுமக்கள் வழிபாட்டுக்காக சிறிது நேரம் அனுமதிக்கப்பட்டது. பின், பெருமாளுக்கு இரவு நேர வழிபாடுகள் மற்றும் ஏகாந்த சேவை நடந்தது. ஸ்ரீவாரி டிரஸ்ட் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக