வியாழன், ஜனவரி 21, 2016

துலாம் ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

துலாம் ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
உங்கள் ராசியின் சின்னமே தராசாக இருப்பதாலேயோ என்னவோ, எல்லா விஷயத்திலும் நடுநிலையாக இருப்பதையே விரும்புவீர்கள். ‘‘அவரு சொன்னா சரியாத்தான் இருக்கும்’’ என்று பலரும் உங்களிடம் ஆலோசனை கேட்க வருவார்கள். சுகமான சுக்கிரன் துலாத்தை ஆட்சி செய்கிறது. உங்களின் கடன், எதிரிகள், நோய் ஸ்தானத்திற்கு அதிபதியாக மீன குரு வருகிறார். பொதுவாகவே சுக்கிரனும் குருவும் பகைவர்கள்தான். அதேசமயம் இங்கு எதிரி ஸ்தானத்தையும் அவரே நிர்ணயிப்பதால், எவர் மூலமாக வித்தையை கற்றுக் கொண்டீர்களோ, அவரே துரோணாச்சாரி போல கட்டை விரலையும் கேட்பார். அதேபோல உங்களிடம் கற்றுக் கொண்டவர்களும் உங்களை எதிர்க்கத் துணிவார்கள். கற்கும்போதும், கற்பிக்கும்போதும் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குரு எதிரியாவார் என்றால், கற்ற வித்தை தாமதமாக நினைவுக்கு வரும் என்றும் பொருளுண்டு.
ஆறாம் வீடு என்றழைக்கப்படும் கடன், வழக்கு, எதிரி ஸ்தானத்தின் அதிபதி, மீன குரு. நீங்களும் தனுசு குரு போல சட்டென்று கோபப்படுவீர்கள். வார்த்தைகளை வகைதொகையில்லாமல் இரைப்பீர்கள். இதே குருதான் உங்கள் இளைய சகோதர, சகோதரி ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருகிறார். எனவே நீங்கள் அவர்களுக்காக எவ்வளவு செய்தாலும் கெட்ட பெயர்தான் மிஞ்சும்; அல்லது அவ்வளவு எளிதில் திருப்தியடைய மாட்டார்கள். மேலும் குரு என்றாலே புத்திராதிபதி எனும் ஆண் குழந்தைகளை அருள்பவர் என்றும் சொல்வார்கள். இப்படிப்பட்ட குருவே சத்ரு ஸ்தானாதிபதியாக இருப்பதால், உங்களுக்கு ஆண் குழந்தைகளால்தான் பிரச்னைகள் வரும். நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்மறையான காரியங்களைத்தான் செய்வார்கள். உங்களுக்கு ஆண் குழந்தைகளைப் பற்றிய கவலைகள்தான் எப்போதும் அதிகம் இருக்கும். ரோஷக்காரர் நீங்கள்; ஆனால், ஒன்றுமேயில்லாத சின்னச்சின்ன விஷயங்களில் அதைக் காண்பித்துக் கொண்டிருப்பீர்கள். இதனால் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிக்கத் தெரியாத அசடராக இருப்பீர்கள். ‘‘இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சுக்கறீங்களே’’ என்பார்கள் நண்பர்கள்.
பள்ளிக்கூடத்தில் இந்த ராசிப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது பிரச்னை வந்தபடி இருக்கும். அடிக்கடி தலைமை ஆசிரியர் பெற்றோரை அழைத்து வரச் சொல்வது வாடிக்கையாகிப் போகும். உங்களுடைய முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்திற்குரியவராக தனுசு குரு வருகிறார். அவரே ஆறாம் இடமான எதிரி ஸ்தானத்திற்கும் வருவதால், நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அதைத் தடுக்க ஒரு கூட்டமே காத்திருக்கும். உங்களை எவர் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நினைக்கிறாரோ, அவரே முட்டுக்கட்டை போடவும் தயங்க மாட்டார். உங்களின் உடன்பிறந்த இளைய சகோதரரே ஆனாலும் சரிதான்... வியாபாரம், சொத்துப் பங்கீடு போன்ற விஷயங்களில் ஜாக்கிரதை வேண்டும். சகோதரர்களோடு கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. அப்படிச் செய்ய நேர்ந்தால், வாழ்க்கைத்துணையின் பெயரில் தொடங்கி, சகோதரரை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளலாம். சகோதரர்கள் ஆளுக்கொரு ஊரில் இருந்தால் எந்தப் பிரச்னையுமே இல்லை.
உங்களில் பலருக்கு சிம்மக் குரல் இருக்கும். அதனால் அவ்வப்போது கர்ஜித்தபடி இருப்பீர்கள். பிடித்தால் ரொம்பவும் உயர்த்திப் பேசுவீர்கள்; பிடிக்கவில்லையெனில் தரையில் போட்டுத் தேய்ப்பீர்கள். அவரின் நிழலைக் கூட நெருங்க மாட்டீர்கள். ஆரம்பகால வாழ்க்கையில் நொந்து நூலாகி ஏமாந்த அனுபவத்தால், யாரையுமே எதற்குமே சிபாரிசு செய்வதைத் தவிர்ப்பீர்கள். பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். தொலைந்து போகும் ஆபத்து அதிகமுண்டு. அதேபோல சொத்துப் பத்திரம், காசோலை, கடன் பத்திரம், சேமிப்பு பத்திரங்கள், வீடு மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போன்றவற்றையும் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பொது வாழ்வில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஏனெனில், எப்போதுமே தந்திரத்தோடும் கணக்கோடும் உங்களால் இருக்க முடியாது. ஆழம் தெரியாமல் காலை வைத்து அவதிப்படக் கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது காரணமில்லாமல் கோபப்படும் குணம் உங்களிடத்தில் இருக்கும். ‘‘யாருமே சரி கிடையாது’’ என்று எப்போதும் புலம்பியபடி இருப்பீர்கள். அரசியலில் அனுசரித்து போகத் தெரியாமல், அங்கு இருப்போரை விமர்சிப்பீர்கள். எப்படிப் பார்த்தாலும் குரு உங்களுக்கு பாதகமான விஷயங்களைச் செய்வதால், கல்வி நிலையங்கள், டியூஷன் சென்டர், டுடோரியல் காலேஜ் போன்றவற்றைத் தொடங்கினால், எல்லாவற்றையும் சிஸ்டமேடிக்காக செய்யுங்கள். ஆசிரியர்களோடு பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சமயம் சார்ந்த அமைப்புகளை விமர்சிக்கும்போதும் எச்சரிக்கை தேவை. கோயில் கும்பாபிஷேகம் வரை உதவி செய்வீர்கள். முடிந்தவுடன் உங்களைக் கழற்றி விட்டுவிடுவார்கள். உங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்தி விட்டு தூக்கி எறிந்தவர்கள்தான் அதிகம். நூறு சதவீதம் யாரை நம்பியிருந்தீர்களோ, அவர்களே எதிரி ஆவார்கள். உங்களின் எதிரியின் எதிரி யார் என்று தேடிப் பார்த்து அவரை நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். அதற்குப் பிறகு பழி வாங்குவீர்கள்.
தங்கத்திற்கும் உங்களுக்கு வெகு தூரம். சிறிய வயதிலிருந்தே நிறைய நகைகளைத் தொலைப்பீர்கள்; அல்லது அடகுக் கடைக்கு சென்ற வண்ணம் இருக்கும். எனவே, வெள்ளி மற்றும் பிளாட்டினத்தை வாங்கிப் போடுங்கள். கையில் நிறைய பணத்தை வைத்து செலவு செய்யுங்கள். அவசரப்பட்டு காசோலை கொடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கடன்களை பணமாகவே கொடுத்துத் தீர்க்கப் பாருங்கள். எப்போதுமே தனியார் வங்கியில் கடன்களை வாங்கிக் கொண்டிருங்கள். வேர்க்கடலை, கொண்டைக் கடலை போன்றவை உங்களுக்கு ஆகாது. வயிற்றுக்கு ஏதாவது பிரச்னையை தந்த வண்ணம் இருக்கும். அதேபோல மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை தொற்று போன்றவற்றிற்குரிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். பள்ளிக்கு அருகே உங்களுக்கு வீடு இருந்தாலோ, அல்லது எதிர்வீட்டில் ஆசிரியர் இருந்தாலோ, பிரச்னைகளும் வீண் தகராறுகளும் வரக்கூடும்.
நீங்களாக தட்டுத் தடுமாறி மேலே வருவதுதான் உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. ‘அவர் உதவுவார்... இவர் இருக்கிறார்...’ என்று நீங்கள் ஒருபோதும் கனவு காணக் கூடாது. உதவி என்றால் நீங்கள் பிறருக்கு செய்யலாமே தவிர, மற்றோர்கள் செய்தால் அப்படிச் செய்தவர்களே கெடுதலையும் செய்யத் துணிவார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நேரடியாகக் களத்தில் நின்று யாரோடும் மோத மாட்டீர்கள். உங்களின் தாக்குதல் எப்போதுமே மறைமுகமாகத்தான் இருக்கும். ஏழாம் இடத்திற்குரிய செவ்வாயானது உங்களின் ஆறாம் இடத்திற்குரிய குருவிற்கு நண்பராக இருக்கிறார். எனவே, ‘‘உங்களுக்கு ஒன்றும் தெரியாது’’ என்றோ, ‘‘நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது’’ என்றோ அவ்வப்போது வாழ்க்கைத்துணை அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
தனாதிபதி குரு ஆறாம் இடத்திற்குரியவராக இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் போதாது. இருந்தாலும் தங்காது. எனவே, கூடுதல் வருமானம் வந்தால், உடனே ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்திருங்கள். நீங்கள் கடன் கொடுத்தால் திரும்ப வாங்குவதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும். மிக முக்கியமாக நகைக் கடன்களுக்கு போகாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் மீட்பதற்குள் ‘போதும்... போதும்...’ என்றாகி விடும். ‘கேட்டுக் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்’ என்பது உங்களுக்கும் பொருந்தும்.
மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். பொட்டில் அடித்தாற்போல் நியாயம் பேசுவதால் திடீர் எதிரிகள் முளைப்பார்கள். துலா ராசிக்காரரான நீங்கள் எதற்குமே அவசரப்படக் கூடாது. அது உங்களின் இயல்பும் அல்ல. அனுபவமில்லாமல் எதையும் செய்யத் துணியாதீர்கள். குருட்டு தைரியம் உங்களுக்கு வெற்றியைத் தராது. ஏனோ தெரியவில்லை... சைக்கிள்காரர்கள் உங்களை எப்போதும் இடித்து விட்டுப் போவார்கள். அதனால் உங்களுக்குக் காயங்கள் வரும். அதேபோல அரசாங்க அதிகாரிகளுடன்தான் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் வரும்.
துலாம் ராசியில் நீதி கிரகமான சனி உச்சமாவதால், நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். சூரியன் நீசமாவதால், நாட்டு நிர்வாகம் செய்வீர்கள்; ஆனால், வீட்டு நிர்வாகம் தெரியாது. குடும்பத்திலுள்ள உள்நிர்வாகங்களில் ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். எழுத்தாலும், எமோஷனலாகப் பேசியும் கூட்டத்தைத் திரட்டுவீர்கள். அதனால் சிறைகூட சென்று வருவீர்கள்.
சுக்கிராச்சார்யார் உங்களின் ராசியாதிபதிக்கு குருவாக இருப்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். அரசாங்க விஷயங்களைக் கையாளும்போது சரியான ஆலோசகரை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மூத்த சகோதரருடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு கடன் பிரச்னை இருந்தால், அது வாகனக் கடனாக இருந்தால் நல்லது என்று விட்டுவிடுங்கள். வீட்டுக் கடன் இருந்தால் அது நல்லது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆறாம் இடத்திற்கு உரியவராக குரு வருகிறார். மேலும் நீங்கள் கொஞ்சம் உக்கிரமான தெய்வங்களை வழிபட வேண்டும் என்பதால், நரசிம்மரை வணங்குதல் நல்லது. அதிலும், சிங்கப் பெருமாள் கோயில் எனும் தலத்தில் அருளும் பாடலாத்ரி நரசிம்மரை வணங்குங்கள். உங்கள் கடன், நோய் பிரச்னைகள் தீரும்; எதிரிகள் சக்தியிழப்பார்கள். இத்தலத்தில் இவருக்கு நெற்றியில் ஈசன் போல நெற்றிக் கண் இருக்கும். பார்க்கும்போதே சிலிர்த்துப் போகும். இதுவொரு குடைவரைக் கோயிலாகும். பௌர்ணமியன்று கிரிவலம் இங்கு மிகவும் விசேஷமானது. இத்தலம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக