வியாழன், ஜனவரி 21, 2016

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்

மீன ராசிக்கு கடன், நோய் தீர்க்கும் இறைவன்
பன்னிரெண்டு ராசிகளிலேயே கடைசியாக வருவதும், மிகவும் பள்ளமானதும் மீனம்தான். அந்தத் தன்மைக்கு ஏற்றாற்போல சகல விஷயங்களையும் உள்ளுக்குள் வைத்து பதுக்குவீர்கள். அதேசமயம் உங்களைத் தேடி மனிதர்களும், பல்வேறு விஷயங்களும் வந்தவண்ணம் இருக்கும். ஆர்ப்பாட்டமில்லாத ஒரு தன்மை எப்போதுமே இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருப்பதையே விரும்புவீர்கள். வாழ்க்கையில் புத்தகப் பாடத்தை விட அனுபவப் பாடத்தையே அதிகம் நம்புவீர்கள். எல்லோருக்கும் எத்தனை அறிவுரைகள் கூறினாலும் தனக்கென்று வரும்போது தடுமாற்றம் கொள்வதைத் தவிர்க்க இயலாது. எந்த விஷயத்தையும் தானே முடிவெடுத்துவிட்டு, ஒரு பேச்சுக்காக மற்றவர்களிடம் அபிப்ராயம் கேட்டு வைப்பீர்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் கூட தன் அனுபவத்திற்குள் வந்தாலொழிய ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். அலட்சியம் உங்களின் மாபெரும் சத்ரு ஆகும். ‘என்ன ஆகிடப் போகுது’ என்கிற எண்ணத்தை நீங்கள் ஒழித்துக் கட்ட வேண்டும்.
நீங்கள் மற்றவர்களின் மனம் புரிந்து பொறுமையாகப் பேசுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் இதை சாதகமாக்கிக் கொண்டு உங்களை ஏமாற்றத் துணிவார்கள். சபைத் துணிச்சல் கொஞ்சம் குறைவுதான். தனியாக விவாதிக்கும் நீங்கள், ‘எதிரியின் மனம் புண்படுமே’ என்று சபையில் அடக்கி வாசித்து வெற்றியைக்கூட விட்டுக் கொடுப்பீர்கள். தனகாரகனான குருவின் ராசியில் பிறந்திருப்பதால், பணத்தை விட மனம்தான் பெரியது என்பீர்கள். இதனால் பண விஷயங்களில் உங்களை ஏமாற்ற ஒரு கூட்டம் தயாராக இருக்கும். ஆனால், தன்மானம் அதிகமுள்ளவர்கள் நீங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால் வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைப்பீர்கள். உங்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால், தலைமீது வைத்து அவர்களின் தகுதிக்கு மீறி கொண்டாடுவீர்கள்.
உங்களின் ஆறாம் இடமான நோய், எதிரி, கடன் ஸ்தானத்திற்கு அதிபதியாக, சிம்ம ராசிக்கு அதிபதியாக உள்ள பிதுர்காரகன் என்றழைக்கப்படும் சூரியன் வருகிறார். இதனால் உங்களுக்கும் தந்தையாருக்கும் ஏதேனும் சிறு வாக்குவாதங்கள், கருத்து மோதல்கள் இருந்துகொண்டே இருக்கும். ‘அவர் சொல்வதை செய்யக் கூடாது’ என்பதில் உறுதியாக இருப்பீர்கள். அதிகமாக நீங்கள் அவரை நேசித்தாலும், உள்ளுக்குள் ஒரு பனிப்புகை போன்ற எதிர்ப்புணர்வு இருந்துகொண்டேயிருக்கும். ‘‘அப்பாவுக்கு இந்த கோர்ஸ் பத்தி தெரியாது. எதிர்காலத்துல இதுக்குத்தான் நல்ல வேல்யூ இருக்கும்’’ என்று பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே தந்தைக்கு எதிராகத்தான் முடிவெடுப்பீர்கள்.
பாகப் பிரிவினையின்போது தந்தையார் உங்கள் மீது ஓரவஞ்சனையோடு நடந்து கொள்வதாக நினைத்து வருத்தப்படுவீர்கள். அல்லது அப்படி நடப்பதுபோல ஒரு தோற்றத்தை தந்தையார் வழிச் சொந்தங்கள் உருவாக்குவார்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு கல்வியின் பொருட்டோ அல்லது வேலைவாய்ப்பின் பொருட்டோ தந்தையாரைப் பிரிந்து செல்வது நல்லது. அது உங்களுக்கும் தந்தையாருக்குமிடையே உள்ள எதிர்ப்புணர்வைக் குறைக்கும். உங்கள் தந்தையாரோடு இருக்கும்போது, அவருக்குக் கீழ்தான் நீங்கள் இருக்க வேண்டியிருக்கும். ஏதோ உங்கள் தந்தை வளர விடவில்லை என்பதுபோல நினைத்துக் கொள்வீர்கள். உங்கள் தந்தையார் பிறவியிலேயே பலவீனமானவராகவோ அல்லது ஏதேனும் நோயுற்றவராக இருந்தாலோ, உங்களின் வளர்ச்சி அபாரமாக இருப்பதை நான் அனுபவபூர்வமாக பார்த்திருக்கிறேன். இந்த ஆறாம் இடத்து சூரியன்தான் இதற்குக் காரணம். ஏனெனில், உங்கள் வாழ்க்கையின் முழு அமைப்புமே ஒன்றை இழந்து ஒன்றைப் பெறுவது போலத்தான் அமையும்.
இப்படியாக ஆறாம் இடத்திற்கு சூரியன் வருவதால், உங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அதுவும் சமூகத்தில் முக்கிய இடத்தில் உள்ளவர்கள் எல்லாம், உங்களை கண்ணில் எண்ணெயை விட்டுக் கொண்டு பார்ப்பார்கள். எப்போது நீங்கள் சறுக்குகிறீர்கள் என்று கவனிக்கவே ஒரு கூட்டம் இருக்கும். அரசாங்கத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு அவ்வளவு எளிதாக பிரமோஷன் வராது. ஏதேனும் ஒருவிதத்தில் உங்களை மட்டம் தட்டியே வைத்திருப்பார்கள். தனியார் கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள், மேலதிகாரிகளோடு பிரச்னை ஏற்பட்டு சமாளிப்பீர்கள். சரசரவென்று பிரமோஷனும் வந்துவிடும். உயரதிகாரிகளோடு நீங்கள் எப்போது பேசினாலும் ஆணையிட்டதுபோல பேசுவதாக நினைத்துக் கொள்வார்கள். உங்கள் கருத்து ஆணித்தரமாக இருக்கும். அதனால், ‘‘ஒரு அபிப்ராயமா சொல்றேங்க...’’ என்று பேசத் தொடங்குவது, உங்கள் ஆலோசனைகளை ஏற்க வைக்கும். எல்லோரும் பேசி முடித்தபிறகு நீங்கள் பேசுங்கள். உங்களின் பேச்சு சபையேறும். நடைமுறைப்படுத்தப்படும். நீங்கள் பொத்தாம் பொதுவாக பேசினாலேயே உயரதிகாரிகள் வியப்பார்கள். குறிப்பிட்டு மேலதிகாரிகளைப் பேசினால் எதிரியாவார்கள்.
நாடாளுபவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் நீங்கள் எச்சரிக்கை காட்டுவது மிகவும் அவசியமாகும். அரசாங்க விஷயமென்றால் கூடுதல் ஜாக்கிரதையோடு இருத்தல் வேண்டும். வீட்டு வரி, குடிநீர் வரி, வருமான வரி போன்று எந்தெந்த அரசாங்க வரிகள் உண்டோ, எல்லாவற்றிலும் நீங்கள் முதன்மையானவராக இருந்து கட்டி விடுங்கள். அரசியல்வாதிகள் உங்களோடு நட்பாக இருப்பார்கள். ஏனெனில், உங்கள் ராசியாதிபதியான குருவிற்கு சத்ரு ஸ்தானாதிபதியாக வரும் சூரியன் நட்பு கிரகம் ஆகும். எனவே பிரச்னைகள் இல்லை என்றாலும், அமிர்தம் மிஞ்சினால் நஞ்சாகும் என்பதை நினைவில் வையுங்கள். பெரிய அளவில் அரசாங்கத் தொடர்பு கொண்டவர்களோடு வியாபாரங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை. சில சதவீதங்கள் லாபத்தில் பங்குகள் குறைந்தால் பரவாயில்லை. ஆனால், சரிநிகருக்கு சமானமாக நீங்கள் எதிர்பார்த்தால் சிக்கல்கள் உருவாகும். அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்றோர்கள் ஆரம்பத்தில் நட்பு பாராட்டுவார்கள். ஆனால், போகப்போக உங்களுக்கெதிராக மாறுவார்கள். மிக முக்கியமாக வழக்கு போன்ற விஷயங்களில் இறங்கும்போது அதீத கவனத்தோடு இருத்தல் வேண்டும். ஏனெனில், நீதி, நேர்மை, நாணயம் போன்றவற்றிற்கு உரியவராக ராசிக்கு பன்னிரெண்டாம் அதிபதியான சனி வருவதால், கொஞ்சம் பிசகினாலும் சிக்க வைப்பார்.
‘கடன்’ என்கிற வார்த்தையே உங்களுக்கு அலர்ஜிதான். கடனை அடைக்கும் வரை தூக்கமே வராது. கைகட்டி நின்று பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக கடன் வாங்காமலேயே காலம் கடத்த முயற்சிப்பீர்கள். ‘‘அப்படியென்ன கடன் வாங்கி சொகுசு வேண்டிக் கிடக்கு’’ என்று பரவலாகவே அறிவுரை கூறுவீர்கள். ஆனால், கடன் வாங்குவது உங்களுக்கு நல்லது. ஏதேனும் ஒரு கடனை வாங்கி மாதா மாதம் அடைத்துக் கொண்டேயிருங்கள். இதெல்லாம் உங்களின் ஆரோக்யத்தில் பிரச்னைகள் வராமலும், வேறெந்த விபத்துகளும் நேராமலும் காப்பாற்றும். நேரடியான அரசாங்க வங்கிகளில் கடன் வாங்காதீர்கள். தனியார் வங்கிதான் உங்களுக்கு எப்போதும் நல்லது. தங்கத்தை வைத்து கடன் வாங்குவது இன்னும் உசிதமாகும்.
அதேபோல எப்போதும் புலம்பிக் கொண்டே இருக்காதீர்கள். உங்கள் வாயாலேயே நீங்கள் கெடுவதாக சுற்றியுள்ளோர்கள் சொல்வதை மெய்ப்பித்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனெனில், சூரியன் வேகமாக நகரும் கிரகம். நீங்கள் பாசிட்டிவ் எண்ணங்களோடு இருந்தால் நல்லது. இல்லையெனில் எதிர்மறையான எண்ணங்களால் நிறைய அவநம்பிக்கையோடு பேசி, நல்ல வாழ்க்கையை இழக்க வேண்டி வரும். உங்களுக்கு கடனெனில் அது தந்தையாரால் கூட ஏற்படும். எப்போதோ சகோதரிகளின் திருமணத்திற்கு தந்தையார் பட்ட கடன்கள் அவருக்குப் பிறகு உங்கள்மீது விழும். சில சமயம் பெருமைக்காக மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்து அவதிப்படுவீர்கள்.
சிறியதாக உடம்பு படுத்தினாலும் பெரிய அளவில் பயப்படுவீர்கள். உடம்பு கதகதப்பாக இருந்தாலே ‘மலேரியாவா... டைபாய்டா...’ என்ற அளவிற்கு சற்று மிகையாகவே பயப்படுவீர்கள். வீட்டில் மற்றவர்களையும் பயமுறுத்துவீர்கள். வயிறு, தொண்டை, தலையில் ஏதேனும் பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் உடனே காண்பியுங்கள். சூடாக எதையுமே நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால், நீங்கள் அப்படித்தான் விரும்புவீர்கள். இதனால்தான் தொண்டை பாதிக்கப்படும். உங்களுக்கு நிச்சயம் அப்பென்டிசைடிஸ் உண்டு. நோய்க்கு உரிய சூரியனே வழக்கு, பிரச்னைக்குரியவராக வருவதால், சட்டென்று எந்த வழக்கையும் யார்மீதும் போடாதீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் அதற்கான நேர விரயத்தையும், அவஸ்தையையும் உங்களால் தாங்க முடியாது. தாமதப்பட்டுத்தான் உங்களுக்கு நீதி கிடைக்கும்.
அவமானத்தை செரித்துக் கொண்டு ஓடும் திறன் உங்களிடம் மிகவும் குறைவு. சுள்ளென்று யாராவது உங்கள்மீது விழுந்தாலே, இரண்டு கிலோ குறைந்து விடுவதுபோல உணர்வீர்கள். சின்னச் சின்ன வார்த்தைகளால் புண்பட்டுப் போவீர்கள். அதேசமயம் நீங்கள் சின்ன வார்த்தைகளால் பேசினால் பெரிய பெரிய இழப்புகள் வரும். ஏனெனில், நீங்கள் கொஞ்சம் அந்தஸ்தில் உள்ளவர்களைத்தான் அப்படிப் பேச வேண்டிய சூழல் வரும்.
புழுவுக்குப் பின்னால் தூண்டில் முள் இருக்கும் என்பதை அறியாத மீன ராசிக்காரர் நீங்கள். உங்களை முன்னிறுத்தி பெரிய திட்டங்கள் தீட்டி பலர் பயனடைவார்கள். இறுதியில் அவர்கள் காரியம் முடிந்ததும் உங்களைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். நீங்களே அவ்வப்போது, ‘‘நானும் கறிவேப்பிலையும் ஒண்ணு’’ என்று புலம்புவீர்கள்.
பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கும், பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி பகவானே வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு செலவே செய்யாமல் இருப்பீர்கள். எடுத்ததற்கெல்லாம் கணக்கு பார்ப்பீர்கள். அடுத்த சில மாதங்களுக்கு ‘நீங்களா இப்படி செலவு செய்கிறீர்கள்’ என்று ஆச்சரியப்படுவதுபோல செலவு செய்வீர்கள். படுத்த உடனேயே தூங்கமாட்டீர்கள். கோழித் தூக்கம்தான் உங்களுக்கு.
பொதுவாகவே சூரியன்தான் உங்களின் எதிரி ஸ்தானத்தை தீர்மானிக்கிறார். சூரியனை கட்டுக்குள் வைக்கும் திறன் செவ்வாய்க்கு மட்டுமே உண்டு. செவ்வாய் எனும் அங்காரகனை இயக்கும் சக்தியான முருகனை வணங்கினால், சூரியனின் எதிர்மறை கதிர்வீச்சுகள் கட்டுக்குள் வரும். எனவே மங்களமான கோலத்தில் முருகன் அருளும் தலமான திருத்தணி செல்லுங்கள். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை சென்று தரிசித்து வாருங்கள். திருத்தணிக்கு சென்னை மற்றும் எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு.
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக